Monday, December 31, 2012

அதிமுகவின் தனித்துப் போட்டி முடிவுக்கு பாமக 'பலத்த' வரவேற்பு-திமுகவையும் சீண்டுகிறது

சென்னை: லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என்று அதிமுக எடுத்துள்ள முடிவை வரவேற்கிறோம். இதேபோல திமுகவும் தனித்துப் போட்டியிட முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், திமுகவுக்கும் அதிமுகவுக்கும் ஓராண்டுக்கு முன்பு 2 சவால்கள் விடுத்தேன். இனி வரும் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடும். அதுபோல் இரு கட்சிகளும் போட்டியிடத் தயாரா? வாக்காளர்களிடம் வாக்கு பெறுவதற்காக ஒரு ரூபாய்கூட கொடுக்காமல் தேர்தலைச் சந்திக்கத் தயாரா என்று இரண்டு சவால்கள் விடுத்தேன்.

இதில் முதல் சவாலை அதிமுக ஏற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டாவது சவாலையும் அதிமுக ஏற்க முன் வரவேண்டும்.

அதேபோல திமுகவும் தனித்துப் போட்டியிட தயார் என்று அறிவிக்க வேண்டும். அதனை சவாலாக அல்லாமல் திமுகவுக்கு வேண்டுகோளாக வைக்கிறேன்.

1971-ம் ஆண்டு திமுக ஆட்சியில்தான் மதுவிலக்கு தளர்த்தப்பட்டது. இது அதிமுக ஆட்சியிலும் நீடித்து வந்துள்ளது. 2016-ல் பாமக நிச்சயம் ஆட்சிக்கு வரும். அப்போது பூரண மதுவிலக்கு கட்டாயம் அமல்படுத்தப்படும். இரு திராவிடக் கட்சிகளுக்குமே நிர்வாகம் செய்யும் திறமை இல்லை.

ஊழிலின் ஊற்றுக்கண் திமுக என்றால், அதை ஆற்றுநீராகப் பெருக்கியது அதிமுக.

ஒளிமயமான எதிர்காலத்தைக் கொடுக்கிறோம் என்று இப்போது தமிழகம் இருள்மயமாகி உள்ளது. விவசாயம் நசிந்துவிட்டது. கல்வியை அரசே தனியாருக்குத் தாரை வார்த்துள்ளது. அதனால் திராவிடக் கட்சிகளை அகற்ற வேண்டும் என்று மக்கள் கருதுகின்றனர்.

பட்டியல் இனத்தில் இருக்கும் 75 தலித் இனத்தவருக்கோ, காதல் திருமணத்துக்கோ பாமக எதிரான இயக்கம் இல்லை. காதல் என்ற பெயரால் கபட நாடகமாடி பணம் பறிப்பவர்களுக்கும், வன்கொடுமை சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் ஒரு சிலருக்கும்தான் பாமக எதிரானது.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கோரியும், காதல் என்ற பெயரால் ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பிப்ரவரி 6-ம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யும் வரை என் போராட்டம் ஓயாது என்றார் ராமதாஸ்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: