Thursday, January 3, 2013

உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட தடை விதித்த நீதிபதி: ராமதாஸ் அதிர்ச்சி

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியே தெரியாத நீதிபதி எம்.ஒய்.இக்பால் தலைமை நீதிபதியாக இருந்தபோது, வழக்கறிஞர்களின் உணர்வுகளை மதித்து தமிழ் மொழியில் வாதிடலாம் என அனுமதி அறித்த நிலையில் தமிழ் மொழி தெரிந்த நீதிபதி ஒருவர் தமிழில் வாதிடுவதற்கு நேற்று தடை விதித்திருப்பது தான் அதிர்ச்சி அளிக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

நேற்று ஒரு வழக்கில் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் பாரி கோரிக்கை விடுத்தார். ஆனால், அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவக்குமார் அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். இது குறித்து மேலும் பல வழக்கறிஞர்களும் சேர்ந்து விடுத்த கோரிக்கையையும் அவர் ஏற்க மறுத்தார். இந்த வழக்கை மேலும் தான் விசாரிக்க விரும்பவில்லை என்றும், வேறு நீதிபதிக்கு இதை மாற்றுமாறும் தலைமை நீதிபதிக்கு கோரிக்கை வைத்துவிட்டு, விசாரணையிலிருந்து விலகி விட்டார்.

இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதிடலாம் என வாய்மொழியாக அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் போதிலும், தமிழில் வாதிடுவதற்கான உரிமை வழக்கறிஞர் ஒருவருக்கு நேற்று மறுக்கப்பட்டிருக்கிறது. தமிழ் மொழியே தெரியாத நீதிபதி எம்.ஒய்.இக்பால் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தபோது, வழக்கறிஞர்களின் உணர்வுகளை மதித்து தமிழ் மொழியில் வாதிடலாம் என அனுமதி அறித்த நிலையில் தமிழ் மொழி தெரிந்த நீதிபதி ஒருவர் தமிழில் வாதிடுவதற்கு தடை விதித்திருப்பது தான் அதிர்ச்சி அளிக்கிறது.

தாய்மொழியில் வாதங்களை முன்வைக்கும் போது அது தெளிவாகவும், வலிமையாகவும் இருக்கும் என்ற அடிப்படையில் தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்படுகிறது.

உயர் நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழிகளில் நீதிமன்ற நடவடிக்கைகள் அமைவதை இந்திய அரசியல் சட்டமும் அனுமதிக்கிறது.

உத்தரப் பிரதேசம், பிகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அம்மாநில மொழிகள், குடியரசுத் தலைவரின் ஆணைப்படி உய ர்நீதிமன்ற வழக்கு மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு இருக்கும் போது சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க மத்திய அரசு ஏன் தயங்குகிறது என்பது தெரியவில்லை.

ஒரு மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் அம்மாநிலத்தின் தாய் மொழியில் வாதிடுவதற்கு அரசியல் சட்டம், மரபு, நடைமுறை என எந்த பெயரால் தடை விதிக்கப்பட்டாலும் அதைவிட பெரிய மோசடி இருக்க முடியாது. எனவே சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இதற்காக மத்திய அரசுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நெருக்கடி தர வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: