Thursday, December 6, 2012

காவிரி: இந்திய இறையாண்மையை பாதுகாக்க வேண்டும்-ராமதாஸ்:

 ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக, சம்பா பயிர்களை காப்பதற்காக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்க கர்நாடக அரசு மறுத்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய போவதாகவும் கர்நாடகம் கூறியிருக்கிறது. தேசிய ஒமைப்பாட்டுக்கு எதிரான கர்நாடகத்தின் இத்தகைய செயல்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை. தமிழகத்தில் சம்பா பயிர்களைப் காக்க 60 டிஎம்.சி தண்ணீர் தேவைப்படும் நிலையில், அதில் இருப்பதில் ஒரு பங்கை மட்டும் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது யானைப் பசிக்கு சோளப்பொரியாக அமைந்திக்கிறது. அதுமட்டுமின்றி, இனி திறந்துவிடப்பட வேண்டிய தண்ணீரின் அளவை காவிரி கண்காணிப்புக் குழுவின் மூலம் தான் தீர்மாணிக்க வேண்டும் என்ற கர்நாடகத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பதும் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகமாகும்.
டிசம்பர் மாதத்திற்கு சுமார் 5 டி.எம். ஜனவரி மாதத்திற்கு சுமார் 1.25 டி.எம்.சி தண்ணீரை மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி கண்காணிப்புக் குழு ஆணையிட முடியும். ஏற்கனவே உள்ள நிலுவை தண்ணீரை திறந்துவிடும்படி ஆணையிட தங்களுக்கு அதிகாரம் இல்லை என கண்காணிப்புக் குழு ஏற்கனவே கூறியிருக்கிறது. இதன் மூலம் தமிழகத்திற்கு சிறிதளவு மட்டும் தண்ணீரை கொடுத்து ஏமாற்றிவிடலாம் என்ற கர்நாடகத்தின் திட்டத்திற்கு உச்சநீ திமன்றம் தெரிந்தோ, தெரியாமலோ துணை போயிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் இவ்வளவு குறைகள் இருக்கும் போதிலும், இதைக்கூட நிறைவேற்ற முடியாது என கர்நாடகம் கூறியிருப்பது இந்திய அரசியல் சட்டத்திற்கும், உச்சநீதிமன்றத்திற்கும் விடப்பட்ட சவால் ஆகும்.
பிரதமர், காவிரி கண்காணிப்புக் குழு, உச்ச நீதிமன்றம் என எந்த ஒரு அதிகாரமளிக்கப்பட்ட அமைப்பையும் கர்நாடக அரசு மதிக்காததையும், அதை மத்திய அரசு கண்டிக்காததையும் பார்க்கும் போது, இந்தியாவின் ஆளுகைக்குள் கர்நாடகம் இருக்கிறதா அல்லது கர்நாடகத்தின் ஆளுகைக்குள் இந்தியா இக்கிறதா? என்ற ஐயம் எழுகிறது. இந்தபோக்கு தொடர அனுமதித்தால் அது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தாக அமைந்துவிடும் என்பதால், இந்திய அரசியல் சட்ட பிரிவு 356 அல்லது 365 ஆகியவற்றில் ஒன்றை பயன்படுத்தி கர்நாடகம் மீது நடவடிக்கை எடுத்து, தமிழகத்திற்கு காவிரியில் போதிய அளவு தண்ணீர் திறந்து விடப் படுவதை உறுதி செய்யவேண்டும்; இதன்மூலம் இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: