Wednesday, December 30, 2009

வன்னியர்கள் ஓட்டு வன்னியர்களுக்கே-ராமதாஸ்

ஜெயங்கொண்டம்: வன்னியர்கள் வன்னியர்களுக்கு மட்டுமே, குறிப்பாக பாமகவுக்கு மட்டுமே ஒட்டு போட்டால் தமிழகத்தில் உள்ள 120 சட்டசபை தொகுதிகளில் பாமக வெற்றிக் கனியை பறித்து ஆட்சியை பிடிக்கும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.


அதன் ஒரு பகுதியாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிக்கையை தூசி தட்டி எடுத்துள்ளார்.

தமிழகத்தில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டும், சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி வலியுறுத்தியும் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட வன்னியர் சங்க மாநாடு ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகையில்,

ஜெயங்கொண்டம் மின் திட்டத்துக்கு 20 ஆண்டுகளுக்கு முன் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் இதுவரை அந்த திட்டம் தொடங்கப்படவில்லை.

கையகப்படுத்திய நிலத்திற்கு ஒரு ஏககருக்கு ரூ.25 ஆயிரம் மட்டும் அரசு விலை வழங்கியுள்ளது. இந்த செயல் கண்டனத்திற்கு உரியது.

இங்கு நிலக்கரி எடுக்க வேண்டும் என்றால் ஒரு ஏக்கருக்கு ரூ.20 லட்சம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நிலக்கரிஎடுக்க அனுமதிக்க மாட்டோம். அதற்காக எந்த போராட்டத்தையும் நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்.

தமிழகத்தில் உள்ள 6 கோடி பேரில் 2 கோடி பேர் வன்னியர்கள் உள்ளனர். வன்னியர்கள் வன்னியர்களுக்கே ஒட்டு போட்டால் தமிழகத்தில் 120 சட்டசபை தொகுதிகளில் வெற்றிக் கனியை பறித்து ஆட்சியை பிடிக்கலாம். இதற்கு அனைத்து வன்னியர்களும் ஒன்று சேர வேண்டும்.

1987 -ல் போராட்டம் நடத்தி மற்ற சாதிகளுடன் இணைந்து 20 சதவீத இடஒதுக்கீடு பெற்றோம்.ஆனால் அதில் 7 சதவீதம் கூட நமக்கு பலன் கிடைக்கவில்லை.

வன்னியர்களுக்கு என தனியாக 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி அறவழியில் போராட்டம் நடத்தி சிறை செல்ல 20 வயது முதல் 30 வயது வரையுள்ள ஒரு லட்சம் இளைஞர்கள் தயாராக வேண்டும்.

சிறையில் இருந்து வெளியில் விட்டாலும் மீண்டும் அதே போராட்டத்தை நடத்தி சிறைக்கு செல்ல வேண்டும். நான்கூட 6 மாதம் சிறைக்குச் செல்ல தயாராக உள்ளேன் என்றார்.

Tuesday, December 29, 2009

புத்தாண்டில் பாமக பொதுக்குழுக் கூடுகிறது

சென்னை: பாமகவின் பொதுக்குழுக் கூட்டம் ஜனவரி 1ம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாமக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2010-ம் ஆண்டுக்கான செயல்திட்ட விளக்க முதல் பொதுக்குழு கூட்டம் ஜனவரி மாதம் 1-ந் தேதி நடைபெறுகிறது.

அன்று காலை 10 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெறும் கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, December 28, 2009

பென்னாகரம் தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும்- பாமக

சென்னை: பென்னாகரம் தொகுதியில் தேர்தல் நியாயமாக, நேர்மையாக நடைபெற வேண்டும் என்றால், தொகுதி தேர்தல் அதிகாரியை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பாமக கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கை:

பென்னாகரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட பிறகு அத்தொகுதியில் பல்வேறு அதிகார அத்துமீறல்கள் ஆளும் கட்சியினரால் நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று இரவு பா.ம.கவின் இளைஞர் சங்கத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமனி ராமதாஸ் பென்னாகரம் தாசில்தார் பொன்ராஜ் மற்றும் பென்னாகரம் காவல்துறை ஆய்வாளர் ராஜ்குமார், டி.எஸ்.பி. பஞ்சவர்னம் ஆகியோர்களால் வாகன சோதனை என்ற பெயரில் தடுத்து நிறுத்தப்பட்டு அவமதித்துள்ளனர்.

மேலும் தொகுதிக்கு செல்ல முடியாத வகையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாகனத்தை மறித்து தடை செய்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகரனிடம் தெரிவித்ததற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதுடன் புகார் செய்த பா.ம.கவினர் மீதே பொய் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

எனவே இந்த பாரபட்ச நடவடிக்கையை கருத்தில் கொண்டு இதில் சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும்.

பென்னாகரம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் அதிகாரி கோட்ட வருவாய் ஆய்வாளர் (டி.ஆர்.ஓ.) மகேஸ்வரி, அமைச்சர் காந்திசெல்வனின் நெருங்கிய உறவினர் ஆவார். மேலும் இவர் ஓய்வுபெற்ற போதிலும் இந்த அரசினால் வழங்கப்பட்ட பணி நீட்டிப்பு உத்தரவின் பெயரில் பணியாற்றி வருகிறார்.

இவர் அத்தொகுதியின் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டால் நேர்மையாகவும், நடுநிலையோடும், பாரபட்சமின்றியும் தேர்தல் நடைபெறாது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எனவே தேர்தல் அதிகாரி மகேஸ்வரியை இடமாற்றம் செய்யப்பட்டு பாரபட்சமில்லாத நேர்மையான அதிகாரி அமர்த்தப்பட வேண்டும்.

தொகுதியில் வாகனச் சோதனை என்ற பெயரில் 18 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து வாகனங்களை சோதனை செய்வதாக கூறி எதிர்க்கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் காவல்துறையினர் மிகுந்த தொல்லை கொடுத்து வருகின்றனர்.

அதேவேளையில் ஆளும் கட்சியின் கட்சிக்கொடி கட்டி செல்லும் வாகனங்களை சோதனை ஏதும் செய்யாமல் சுதந்திரமாக சுற்றி வர காவல்துறையினர் அனுமதித்து வருகின்றனர்.

எனவே தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியினரின் இதுபோன்ற அத்து மீறல்களை கண்டும் காணாமல் இருந்து விடாமல் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து தேர்தல் நியாயமான முறையில் நடைபெற எல்லாவித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அன்புமணி மீது வழக்கு..

இதற்கிடையே, போலீசாருடன் நடந்த மோதலையொட்டி டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்பட 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பாமகவினரை சந்திப்பதற்காக இரவில் பென்னாகரம் சென்ற அன்புமணியின் காரை போலீஸார் அனுமதிக்க மறுத்ததைத் தொடர்ந்து பாமகவினருக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம், மோதல் ஏற்பட்டது.

பென்னாகரம் தாசில்தார் டியூக் பொன்ராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோருடன் அன்புமணியுடன் வந்த பா.ம.க.வினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், பா.ம.க.வினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. அதோடு பதற்றமும் ஏற்பட்டது.

அங்கு நடந்ததை படம் எடுத்து கொண்டு இருந்த தேர்தல் கமிஷன் வீடியோகிராபரை ஆதனூரை சேர்ந்த செந்தில் என்பவர் தாக்கினார். அப்போது கேமரா அடித்து நொறுக்கப்பட்டது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

இது தொடர்பாக பென்னாகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தேர்தல் பிரசாரம் செய்ய முன் அனுமதி பெறாமல், கூட்டம் நடத்த ஏற்பாடு செய்ததாக டாக்டர் அன்புமணி, திருப்பத்தூர் எம்.எல்.ஏ. டி.கே.ராஜா, பென்னாகரம் பா.ம.க. ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி மற்றும் மகாலிங்கம் உள்பட 150 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

மேலும் தேர்தல் கமிஷன் வீடியோ கிராபரை தாக்கி காமிராவை சேதப்படுத்தியதாக பென்னாகரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் ஆதனூர் செந்தில், பென்னாகரம் பா.ம.க. ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி, தொப்பூர் பஞ்சாயத்து தலைவர் தயாளன் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திமுக-அதிமுக கூட்டணி அமைத்து பாமகவை தோற்கடித்து விட்டனர்-ராமதாஸ்

கிருஷ்ணகிரி: கடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவும்,அதிமுகவும் கூட்டணி அமைத்து பாமகவை தோற்கடித்து விட்டனர் என்று அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்ட வன்னியர் சங்க மாநாடு அந்த நகரில் நடைபெற்றது. பாமக தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்க மாநிலத் தலைவர் காடுவெட்டி குரு ஆகியோர் பங்கேற்ற இக் கூட்டத்தில் பேசிய ராமதாஸ்,

தமிழகத்தில் உள்ள 6 கோடி மக்களில் 2 கோடி பேர் வன்னியர்களாக உள்ளனர். மேலும் தமிழகத்தில் மக்கள் தொகை அதிகமாக உள்ள ஜாதிகளில் வன்னியர்கள் தான் அதிகம்.

ஆனால் இட ஒதுக்கீடு, மற்றும் வேலைவாய்ப்பில் மிக குறைவான எண்ணிக்கையில் தான் வன்னியர்கள் இருந்து வருகின்றனர். எனவே தான் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இதனால் இந்நிலை மாற வேண்டும் என்பதற்காக தைலாபுரத்தில் 250 ஏக்கர் நிலப்பரப்பில் கல்வி கோவிலை உருவாக்கி வருகிறோம். இதில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கல்வி பயின்று வாழ்க்கை தரத்தினை உயர்த்தி கொள்ள இலவசமாக கல்வி வழங்கி வருகிறோம்.

ஆனால் தமழகத்தில் வன்னியர்கள் ஏமாற்றபடுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். இதனால் தான் நான் 1980ல் இருந்து தமிழகத்தில் ஜாதி வாரியாக கணக்கு எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறேன்.

குறைந்த மக்கள் தொகை உள்ள ஜாதியினர் தான் அதிகாரத்தில் உள்ளனர். ஆனால் நமது ஜாதியினர் அதிகமாக இருந்தும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. வரும் காலங்களில் இந்நிலை மாற வேண்டும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டனி அமைத்து கொண்டு திட்டமிட்டு தேர்தலில் எங்களுக்கு ஓட்டு போடாமல் செய்து விட்டனர். இதனால் தான் நாங்கள் 7 இடங்களிலும் வெற்றி பெரும் வாய்ப்பினை இழந்து விட்டோம்.

ஆனாலும் நாங்கள் மக்களுக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். தொடர்ந்தும் பாடுபடுவோம் என்றார் ராமதாஸ்.

Wednesday, December 23, 2009

பொங்கல் சமயத்தில் இடைத்தேர்தல் கூடாது-பாமக

சென்னை: பொங்கல் பண்டிகையின்போது பென்னாகரத்தில் இடைத் தேர்தல் நடத்துவது மோதல்களுக்கு வழி வகுக்கும். எனவே தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:

திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பாக பென்னாகரம் சட்டசபை இடைத் தேர்தலுக்கான அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இந்த தொகுதியின் உறுப்பினர் மரணமடைந்த 21 நாட்களிலேயே இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டிருக்கிறது. இதற்கு முன்பு இப்படி மின்னல் வேகத்தில் ஒரு இடைத் தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்குமா என்பது சந்தேகம் தான்.

பொதுவாக தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு, உள்ளூர் மற்றும் மாநில அளவிலான பண்டிகைகள், தேசிய அளவிலான விழாக்கள் குறுக்கிடுகின்றனவா என்பது பரிசீலிக்கப்பட்டு, அதற்கேற்றபடி தேர்தல் அட்டவணை முடிவு செய்யப்படுவது வழக்கம்.

தேர்தல் பிரச்சாரம், வாக்காளர்களை வீடு வீடாக சென்று சந்தித்து ஆதரவு கேட்பது போன்ற தேர்தல் பணிகளில் ஈடுபடுவதில் பண்டிகைகளும், விழாக்களும் தடையாக இருக்கக் கூடாது என்பது தான் இதற்கு முக்கிய காரணம்.

ஆனால், போகிப் பண்டிகை, தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள், திருவள்ளுவர் திருநாள், காணும் பொங்கல் என தமிழர்கள் அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து, ஒன்றுபட்டு கொண்டாடுகின்ற பண்டிகை காலத்தில் பென்னாகரம் இடைத்தேர்தலில் உச்சகட்ட பிரச்சாரம் நடைபெற வேண்டிய சூழ்நிலையை தேர்தல் ஆணையம் உருவாக்கியிருக்கிறது. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் ஜனவரி 6ம் தேதி முதல் ஒருவார காலத்திற்கு சட்டசபை கூட்டமும் நடைபெற இருக்கிறது. இவற்றையெல்லாம் தேர்தல் ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமலேயே பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தல் அட்டவணையை முடிவு செய்து வெளியிட்டிருக்கிறது.

பொதுவாக இடைத்தேர்தல் அட்டவணையை முடிவு செய்வதற்கு முன்பு மாநில அரசிடம் தேர்தல் ஆணையம் கருத்து கேட்பது வழக்கம். பென்னாகரம் இடைத்தேர்தல் தேதியை முடிவு செய்வதற்கு முன்னர் மாநில அரசிடம் கருத்து கேட்கப்பட்டதா?

ஆம் என்றால் தேர்தல் பணியாற்றுகின்ற நாட்களில் தமிழர்கள் ஒன்றுபட்டு கொண்டாடுகின்ற பண்டிகைகள் குறுக்கிடுகின்றன என்பதை மாநில அரசு தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதா? கருத்து கேட்கவில்லை என்றால், இப்போதும் காலம் கடந்து விடவில்லை.

கருத்து வேறுபாடுகளையும் தனிப்பட்ட கோபதாபங்களையும் மறந்து தமிழர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு கொண்டாடுகின்ற பண்டிகை காலத்தில் மோதல்களை வளர்க்கும் தேர்தலை நடத்துவது உசிதமல்ல என்பதையும், பென்னாகரம் இடைத்தேர்தலை பிப்ரவரி மாதத்தில் நடத்தலாம் என்பதையும் மாநில அரசும், முதலமைச்சரும் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும்.

பாமக இதனை தேர்தல் ஆணையத்திற்கு கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இதர அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையத்திடம் இந்த கோரிக்கையை வலியுறுத்திக் கூற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ராமதாஸ்.

பலத்தை காட்ட பாமக ரெடி?:

இந் நிலையில் பென்னாகரம் தொகுதியில் தனது பலத்தை நிரூபிக்க அத்தொகுதியில் பாமக போட்டியிட தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.

திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தலில் பாமக போட்டியிடவில்லை, யாருக்கும் ஆதரவும் தெரிவிக்கவில்லை. அதேபோல, அதற்கு முன்பு நடந்த ஐந்து தொகுதி இடைத் தேர்தலிலும் அது யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை, போட்டியிடவும் இல்லை.

இந்த நிலையில் தற்போது பென்னாகரம் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வன்னியர் பெல்ட்டில் வரும் தொகுதி பென்னாகரம். இது முன்பு பாமகவின் கோட்டைகளில் ஒன்றாக இருந்தது.

ஆனால் தற்போது இத்தொகுதி திமுக வசம் உள்ளது. அதை விட முக்கியமாக அத்தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்து மறைந்த பெரியண்ணன் பாமகவிலிருந்துதான் திமுகவுக்குத் தாவி வந்தார்.

பாமகவைப் பொறுத்தவரை இடைத் தேர்தல் குறித்து அது ஒரு கொள்கையுடன் இருப்பதாக அக்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து கூறி வருகிறார்.

ஒரு தொகுதியில் வெற்றி பெற்றவர் நீதிமன்றத் தீர்ப்பு காரணமாக மாற்றப்பட்டு அங்கு காலியிடம் ஏற்பட்டால் மட்டுமே இடைத்தேர்தல் நடத்தலாம் தனது நிலைப்பாடு நிலைப்பாடு என அவர் கூறிவருகிறார்.

வேறு காரணங்களுக்காக காலி இடம் ஏற்பட்டால் ஏற்கெனவே வெற்றி பெற்ற வேட்பாளரின் கட்சியின் சார்பில் வேறொருவரை உறுப்பினராக நியமிக்கும் முறையைக் கொண்டு வரலாம் எனவும் அவர் யோசனை தெரிவித்து வருகிறார்.

ஆனால் வந்தவாசி தொகுதி பாமகவுக்கு சற்றே சாதகமான தொகுதி. இதுவும் வன்னியர் பெல்ட்டில் உள்ள தொகுதிதான். ஆனால் கொள்கை, கோட்பாடு என்று கூறி வந்தவாசியில் பாமக போட்டியிடாததால் அக்கட்சியினர் பெரும் வருத்தமடைந்தனர்.

இதை உணர்ந்த டாக்டர் ராமதாஸ், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியின்போது, பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து கட்சியின் உயர் நிலைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார். இதன் மூலம் பாமக பென்னாகரத்தில் போட்டியிடும் என்பதை அவர் மறைமுகமாக உணர்த்தினார்.

மேலும், ஒரு வேளை பாமக போட்டியிட்டாலும் கூட அது தனித்துதான் போட்டியிடும் என்றும் கூறியிருந்தார் ராமதாஸ்.

தற்போது பென்னாகரத்திற்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாமகவினர் உற்சாகமடைந்தனர். தொகுதி முழுவதும் இப்போதே தேர்தல் பணிகளை அவர்கள் தொடங்கி வருகின்றனர்.

இந்தத் தொகுதியிலிருந்துதான் பாமக தலைவர் ஜி.கே.மணி இரண்டு முறை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே இதில் இப்போது வெற்றி பெறுவது கெளரவம் சம்பந்தப்பட்டதாக பாமகவினர் கருதுகின்றனர்.

எனவே இத்தேர்தலையும் புறக்கணிக்காமல் போட்டியிட்டு நமது பலத்தைக் காட்டி விட வேண்டும் என்ற வேகத்தில் பாமகவினர் உள்ளனர். அதே கருத்தில்தான் பாமக தலைமையும் இருப்பதாக தெரிகிறது.

அதேசமயம், இந்தத் தேர்தலில் போட்டியிட்டு வென்றால், அதை வைத்து அடுத்த கூட்டணியில் சேர வாய்ப்பாக அமையும் என்பதும் பாமகவினரின் எண்ணம். தற்போது யாரும் சீந்தாத, சேர்க்க விரும்பாத கட்சியாக மாறிப் போயுள்ளது பாமக என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே பென்னாகரம், பாமகவுக்கு புத்துயிர் அளிக்கும் தேர்தல் என்றால் அது மிகையில்லை.

இதை மனதில் கொண்டு பா.ம.க.​ ஒன்றிய,​​ மாவட்ட நிர்வாகிகள் கடந்த இரு வாரங்களாக பென்னாகரம் தொகுதியில் முகாமிட்டுள்ளனர்.​ பா.ம.க.​ ஆதரவு உள்ள பகுதிகளில் அவர்கள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

இதன் அடிப்படையில் வலுவான வேட்பாளரை நிறுத்தி முழு மூச்சாக பிரசாரம் செய்து, பாமகவின் வெற்றியை உறுதி செய்ய அக்கட்சியினர் தீவிரமாக உள்ளனர்.

Sunday, December 20, 2009

பள்ளிகளில் கட்டாய தமிழிசைப் பாடம்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் இசையை பாடமாக கொண்டுவர வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொங்கு தமிழ் பண்ணிசை மணிமன்றத்தின் 7ம் ஆண்டு பண்ணிசை பெருவிழா சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பா.ம.க நிறுவனரும், பொங்குதமிழ் பண்ணிசை மணிமன்றத்தின் நிறுவனருமான ராமதாஸ் தலைமை தாங்கினார்.

இதில், மன்றத்தின் தலைவர் ஜே.வி.கண்ணன், முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். ராமதாஸ் பேசுகையில், 'இசையை குழந்தை பருவத்தில் இருந்தே பாடமாக கற்றுத்தர வேண்டும் என்று நான் சொல்லி வருகிறேன்.

1 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் பண்ணிசையை பாடமாக சொல்லி கொடுக்க வேண்டும். வாரத்தில் 3 நாட்களாவது கட்டாயமாக இசை பாட வகுப்பு நடத்தப்பட வேண்டும்.

தமிழக முதல்வர் அவர்களுக்கு இந்த ஆண்டும் வேண்டுகோள் வைக்கிறேன். பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள் இசை பேரறிஞர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும். 58 வயதை கடந்த இசை கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள ஆங்கில பள்ளிகளில் எல்லாம் மேலைநாட்டு இசையை பாடமாக கற்பிக்கிறார்கள். ஆனால், நாம் தமிழ் இசையை வளர்க்க ஒன்றுமே செய்யவில்லை.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்கிறார்கள். எங்கே இருக்கிறது தமிழ்? தமிழ் மொழி வேகமாக அழிந்து வருகிறது. அதனை காப்பாற்ற தமிழ் இசையை பாடமாக கொண்டுவர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்' என்றார்.

Wednesday, December 16, 2009

எம்எல்ஏக்கள் சாவுக்கு ஏங்கும் மக்கள்-ராமதாஸ்

ராம​நா​த​பு​ரம்: ஆந்திராவில் உள்ள சித்தூர், தேவிகுளம் பெருமேடு, கர்நாடகத்தில் உள்ள பெங்களூர் போன்றவற்றை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

ராமேஸ்வரத்தில் மீனவர்களுக்கு ஆதரவாக பாமக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் பேசுகையில்,

இந்தியாவில் ஜனநாயகத்துக்கு எதிரான தேர்தல் தமிழகத்தில் மட்டும் தான் நடக்கிறது. பணத்துக்கு ஓட்டு என்பதை மக்களிடம் விதைத்து விட்டனர்.

இதனால் தங்கள் தொகுதி எம்எல்ஏ எப்போது இறப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தொகுதி மக்களிடமும் வந்துவிட்டது. எம்எல்ஏக்களுக்கு மாரடைப்பு வராதா என தொகுதி மக்கள் எதிர்பார்க்கும் நிலை வந்துவிட்டது. இது வேதனை அளிக்கிறது.

முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்து தலைவர்களும் கூடி, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை நிறுத்த முடிவு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் தேர்தல் கமிஷன் தனது குறைந்தபட்ச அதிகாரத்தை கூட பயன்படுத்துவதில்லை. ​தேர்​தல் காலங்​க​ளில் பார்​வை​யா​ளர்​க​ளாக நிய​மிக்​கப்​ப​டும் அதி​கா​ரி​கள்,​​ அந்​தந்​தப் பகு​தி​க​ளில் உள்ள சுற்​று​லாப் பகு​தி​களை பார்க்​கத்​தான் வரு​கி​றார்​கள்.

முறை​கே​டு​க​ளைக் கண்​ட​றிந்து எங்​கும் தேர்​தலை நிறுத்​தி​ய​தா​கத் தெரி​ய​வில்லை.​ அவர்​க​ளது குறைந்​த​பட்ச அதி​கா​ரத்​தைக் கூட பயன்​ப​டுத்த மறுக்​கி​றார்​கள்.​

கடந்த மக்​க​ள​வைத் தேர்த​லில் தர்​ம​பு​ரி​யில் ரூ.70 லட்​சம் வைத்திருந்​ததை கண்​டு​பி​டித்​துக் கொடுத்​தும் எந்​தப் பய​னு​மில்லை.​ தேர்​தல் ஆணை​யம் என்​பது வேடிக்கை பார்க்​கும் அமைப்​பா​கவே செயல்​பட்டு வரு​கி​றது.​

முறைகேடு நடப்பதால் திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளின் இடைத்தேர்தலை ரத்து செய்யவேண்டும். வந்தவாசியில் பாமகவினர் திமுகவுக்கு ஆதரவாக வேலை பார்ப்பதாக வரும் செய்தி பொய்யானது.

கச்​சத் ​தீவை மீட்​பது ஒன்றே தமி​ழக மீன​வர்​க​ளைப் பாது​காக்க சிறந்த தீர்​வா​கும்.​ ​ தமி​ழக அரசு கடந்த 1974ம் ஆண்டு ஏப்​ரல் 16ம் தேதி மாநில சுயாட்சி தீர்​மா​னம் கொண்டு வந்​தது.​ அப்​போது முதல்​வ​ராக கரு​ணா​நிதி இருந்​தார்.

தீர்​மா​னம் கொண்டு வந்த அடுத்த இரு மாதங்​க​ளி​லேயே கச்​சத் ​தீவை இலங்​கைக்கு தாரை வார்த்​துக் கொடுத்​தது மத்திய அரசு.​ நமக்கு சொந்​த​மான நிலத்தை அடுத்த நாட்​டுக்கு கொடுக்​கும் போது கூட கரு​ணா​நிதி எந்​தக் குர​லும் கொடுக்​க​வில்லை.​ தமி​ழக மக்​களை ஒன்​று​தி​ரட்டி எந்​தப் போராட்​ட​மும் நடத்​த​வில்லை.​

மேற்கு வங்​கத்​தின் சிறிய நிலப்​ப​ரப்பு அப்போதைய கிழக்கு பாகிஸ்​தா​னுக்கு (வங்கதேசம்) தரப்​பட்டபோது
அப்​போது முதல்​வ​ராக இருந்த பி.சி.ராய்,​​ குடி​ய​ரசு தினத்​தன்று அவ​ரது வீட்​டில் கருப்​புக் கொடி ஏற்​றி​னார். சுதந்​திர தினத்தை துக்க நாளாக அறி​வித்​தார்.​ ஆனால் முதல்​வ​ராக இருந்த கரு​ணா​நிதி எதை​யும் செய்​ய​வில்லை.​

இந்தியாவின் இலங்கை வெளியுறவு கொள்கையால் சீனா மூலம் தென் தமிழகம் வழியாக ஆபத்து ஏற்படவுள்ளது. இலங்கையில் தனி ஈழம் அமைத்தால் மட்டுமே இதிலிருந்து இந்தியா தப்ப முடியும்.

கோவை​யில் நடை​பெ​ற​வுள்ள செம்​மொழி மாநாட்​டி​னால்,​​ தமிழ் வளர்ச்​சிக்​காக எதை​யும் சாதித்​து​வி​டப் போவ​தில்லை.​

கிரா​மங்​க​ளில் கூட சிறு​வர்​கள் தமி​ழில் ஆங்​கி​லத்தை கலந்து பேசு​கி​றார்​கள்.​ இன்​னும் 10 வரு​டங்​க​ளில் தமிழ் மொழி கலப்பு மொழி​யா​கி​வி​டும்.​ காணா​மல் போனா​லும் ஆச்​ச​ரி​யப்​ப​டு​வ​தற்​கில்லை.

தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை பறித்து அவர்கள் தொழிலே செய்ய முடியாத நிலையை இலங்கை அரசு செய்துவருகிறது. இதுவரை 500 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு மத்திய-மாநில அரசுகள் பதில் சொல்ல வேண்டும்.

கேரள மீனவர் ஒருவர் தாக்கப்பட்டு இருந்தால் இந்திய அரசு இலங்கையுடன் யுத்தமே நடத்தி இருக்கும்.

அமெரிக்காவைபோல இந்தியாவில் சிறிய மாநிலங்களை உருவாக்கினால் நாடு வேகமாக வளர்ச்சி அடையும். தெலுங்கானா, விதர்பா மாநிலங்களை உருவாக்குவது மிகவும் அவசியமானதாகும். உத்தரப் பிரதேசத்தை 3 மாநிலமாக பிரிக்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார். நிர்வாக வசதிக்காகவும் வளர்ச்சிக்காகவும் தமிழகத்தை 2 ஆக பிரித்தால் நல்லது.

ஆந்திராவில் உள்ள சித்தூர், தேவிகுளம் பெருமேடு, பெங்களூரு போன்றவற்றை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.

Tuesday, December 15, 2009

தமிழகத்தை பிரிப்பது தவறு இல்லை: ராமதாஸ்

திரு​நெல்வேலி: தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்பது தவறு இல்லை என்று பாம​க​தலைவர் டாக்டர் ராம​தாஸ் கூறினார்.

அவர் கூறுகையில்,

தமிழகத்தை இரண்டாக பிரிப்பது பற்றி, ஏற்கனவே நான் தெளிவான கருத்தை சொல்லியிருக்கிறேன். பிரிப்பது தவறு இல்லை. அப்படி பிரித்தால் நிர்வாகத்திறன் மேம்படும். தொடக்கத்தில் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்கள் இருந்தன. தற்போது 32 மாவட்டங்களாக நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டுள்ளன.

தமி​ழ​கத்தை வடக்கு, தெற்கு என இரண்​டா​கப் பிரிக்க வேண்​டும் என நான்​தான் முதன்​முத​லில் குரல் கொடுத்​தேன்.​ அதற்கு பிறகு தற்​போது சிலர் அதை முன்​னெ​டுத்​துச் செல்​கின்​ற​னர்.​ இரண்​டா​கப் பிரித்​தால் நல்​லது.​

சிறிய மாநி​ல​மாக இருந்​தால் நிர்​வகிப்பது எளிது, நல்ல வளர்ச்சியும் இருக்கும். சென்னையைப்போல மதுரையிலும் ஒரு தலைமை செயலகம் இருப்பது தவறு இல்லையே. அப்படி இருந்தால் தென் மாவட்ட மக்கள் எளிதில் வந்து செல்வதற்கு வசதியாக இருக்கும்.

உத்​தரப் பிர​தேச மாநி​லத்தை மூன்​றா​கப் பிரிக்க வேண்​டும் என அந்த மாநில முதல்​வர் மாயா​வதி தெரி​வித்​துள்ளார்.​ இவற்றையெல்லாம் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதேபோல,​​ எதிர்​கா​லத்​தில் தமி​ழக மக்​கள் விரும்​பி​னால் இரண்​டா​கப் பிரிக்​க​லாம்.​

ஆனால் அதை​விட இப்​போது நாங்​கள் முக்​கி​ய​மான பிரச்​சனை​யாகக் கரு​து​வது மீன​வர் வாழ்​வு​ரிமை,​​ முல்லைப் பெரி​யாறு உள்​ளிட்ட நதி​ நீர் உரி​மைப் பிரச்​சனை​கள்,​​ சமச்​சீர் கல்வி,​​ பூரண மது​வி​லக்கு ​ஆகி​ய​வற்​றை​தான்.​

தமி​ழ​கத்​தைல் காம​ரா​ஜர் ஆட்​சிக் காலம்​தான் பொற்​கால ஆட்சி என்​பார்​கள்.​ மக்​கள் எங்​க​ளுக்கு ஆட்சி அமைக்​கும் வாய்ப்பு கொடுத்​தால் அதை​விட சிறந்த ஒரு ஆட்​சியை கொடுக்க முடி​யும்.

இது​வரை தொழில்​துறை,​​ விவ​சா​யம்,​​ கல்வி என ஒவ்​வொன்​றுக்​கும் ஒரு கொள்கை வெளி​யீட்​டு​டன் விரி​வான நிழல் பட்​ஜெட்​டை​யும் நாங்​கள் ஆண்​டு​தோ​றும் தயா​ரித்து, சமர்பித்து வரு​கி​றோம்.​ அதைப் பார்ப்​ப​வர்​கள் தமி​ழக பட்​ஜெட்​டில் ஒன்​றும் இல்லை என கூறு​கின்​ற​னர்.

நான் சொன்ன பிற​கு​தான் தற்​போது உயர் கல்​விக்​கும்,​​ பள்​ளிக் கல்​விக்​கும் தனித் ​தனி அமைச்​சர்​கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது போதாது.​ மழ​லை​யர் கல்வி,​​ ஆரம்​பக் கல்​விக்கு என தனி​யாக ஓர் அமைச்​சர் நிய​மிக்​கப்​பட வேண்​டும் என்​றார் ராம​தாஸ்.

கூட்​டணி குறித்து கேட்டதற்கு, அது சட்​டப் பேர​வைத் தேர்​தல் வரும்​போது முடிவு செய்​யப்​ப​டும். இடைத் தேர்தலை பொறுத்தவரை எங்கள் கட்சி எந்த கட்சிக்கும் ஆதரவளிக்கவில்லை. தேர்தலில் '49 ஓ' படிவத்தை பயன்படுத்த வேண்டும் என்று அறிவித்திருக்கிறோம்.

வந்தவாசி இடைத் தேர்தலிலும் திமுகவுக்கு ஆதரவாக பாமக செயல்படவில்லை. பாமகவை பொறுத்தவரையில் குறைந்தபட்ச செயல் திட்ட அடிப்படையில் கூட்டணி அமைப்பது இல்லை. தொகுதி உடன்பாடுதான் வைத்திருந்தோம். தற்போது நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை. வருகிற 2011ம் ஆண்டு வரும் பொதுத்தேர்தலில் கூட்டணி குறித்து அப்போது முடிவு செய்வோம் என்றார்.

Friday, December 11, 2009

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு தேவை - ராமதாஸ்

செங்கல்பட்டு: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்கக் கோரி, வன்னியர் சங்கம் சார்பில் செங்கல்பட்டில் மாநாடு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசுகையில், இம்மாநாட்டில் பங்கேற்று பேசும் போது, வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு தாம் 1972 ஆம் ஆண்டு முதலே பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும், 107 ஜாதிகளை பட்டியலிட்டு ஒட்டு மொத்தமாக 20 சதவீதம் மட்டுமே.

இது பெரும்பான்மையாக உள்ள வன்னியர்களுக்கு போதுமானதாக இல்லை. தமிழகம் முழுவதும் ஜாதிவாரியான கணக்கெடுப்பினை உடனடியாக நடத்தி அதனடிப்படையில் ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.

சட்டநாதன் கமிஷன் கூறிய இடஒதுக்கீட்டினை உடனடியாக அமல்படுத்த வேண்டும். வன்னியர்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு செய்தது போன்று மற்ற ஜாதியினருக்கும் அவர்களின் சதவீதத்திற்கு ஏற்றாற் போல் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இக்கோரிக்கைகளை முதல்வர் கருணாநிதியிடம்தான் கேட்க முடியும். ஏனென்றால் அவரை 5 முறை முதல்வராக்கிய பெருமையில் பெரும் பங்கு வன்னியர்களுக்கு உண்டு என்றார் ராமதாஸ்.

ஆங்கில வழி கல்விக்கு கருணாநிதி ஆதரவு-பாமக

சென்னை: சமச்​சீர் கல்வி முறையை அமல்​ப​டுத்​து​வ​தற்​கான தமி​ழக அர​சின் நட​வ​டிக்​கை​கள் ஆங்​கில வழி கல்​விக்கு அதிக முக்​கி​யத்​து​வம் தரு​வ​தாக உள்​ளதாக பாமக நிறு​வ​னர் டாக்டர் ராம​தாஸ் குற்​றம ​சாட்​டி​யுள்​ளார்.​

அவர் வெளி​யிட்டுள்ள அறிக்கையில்,

அ​னைத்து குழந்​தை​க​ளும் ஒரே வித​மான கல்வி முறை​யில் பயில வேண்​டும் என்ற நோக்​கி​லான சமச்​சீர் கல்வி முறையை அமல்​ப​டுத்த,​​ தமி​ழக அரசு சில நட​வ​டிக்​கை​களை மேற்​கொண்​டுள்​ளது.​

ஆனால் கல்​வியை தனி​யார் மயம்,​​ வணிக மய​மாக்​கும் ஆங்​கில வழி​யி​லான கல்​விக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​கும் வகை​யில்,​​ அர​சின் நட​வ​டிக்​கை​கள் அமைந்​துள்​ளன.​

பெ​ரும்​பா​லான மாண​வர்​கள் மாநில அர​சின் பாடத்​திட்​டத்​தின் கீழ்,​​ தமிழ் வழிக் கல்வி பயின்று வரு​கி​றார்​கள்.​ இதில்
நான்​கில் ஒரு பகு​திக்​கும் குறை​வா​ன​வர்​களே ஆங்​கில வழிக் கல்வி நிலை​யங்​க​ளில் படிக்​கின்​ற​னர்.​

வசதி படைத்​த​வர்​கள்,​​ சமு​தா​யத்​தில் மேல்​தட்​டில்
இருப்​ப​வர்​க​ளின் குழந்​தை​கள்​தான் ஆங்​கில வழி,​​ கட்​ட​ணப் பள்​ளி​க​ளில் படிக்​கின்​ற​னர்.​

அ​னை​வருக்​கும் சம​மான,​​ தர​மான கல்​வியை வழங்​கும் சமச்​சீர் கல்​வியை நடை​மு​றைப்​ப​டுத்​து​கி​றோம் என்று அரசு அறி​வித்​தது.​ ஆனால் மிகக் குறைந்த எண்​ணிக்​கை​யி​லான மாண​வர்​க​ளுக்கு பயன்​பட்டு வரும் கட்​ட​ணப் பள்​ளி​க​ளும்,​​ ஆங்​கில பயிற்று மொழி​யும் தொடர்ந்து நீடிக்​கும் என்று அறி​வித்​தி​ருப்​பது சமூக நீதிக்கு எதி​ரா​னது.​ அர​சி​யல் சட்​டத்​திற்​கும் எதி​ரா​னது.

6 முதல் 14 வயது வரை​யி​லான எல்லா குழந்​தை​க​ளுக்​கும் கட்​டாய,​​ இல​வச கல்வி அளிக்க வேண்​டும் என்​பது சட்​டம்.​ ஆனால்,​​ ஆங்​கில வழி​யி​லான கட்​ட​ணப் பள்​ளி​கள் நீடித்து வரும் நிலை​யில்,​​ அனை​வ​ருக்​கும் இல​வ​சக் கல்வி என்​பது எவ்​வாறு சாத்​தி​ய​மா​கும்?​.

ஆங்​கில வழிக் கல்​விக்கு ஆத​ர​வான கருத்​து​களை முதல்​வர் கரு​ணா​நி​தி​யும் தெரி​வித்​துள்​ளார்.​ இது வேதனை அளிப்​ப​தாக உள்​ளது.​

அண்​ணா​வின் இரு​மொ​ழிக் கொள்​கையே எங்​க​ளது கொள்கை என்று அறி​வித்​துள்ள முதல்வர் கரு​ணா​நிதி,​​ இரு​மொ​ழிக் கொள்​கை​யில் இடம்​பெ​றாத ஒரு கருத்து திணிப்​பை​யும் வெளி​யிட்​டி​ருக்​கி​றார்.​

தாய் மொழி​யில் மட்​டும் சமச்​சீர் கல்​வியை கொண்டு
வரு​வ​தன் மூலம் எந்த அள​வுக்கு பயன்​பெற முடி​யும் என்​பதை சிந்​தித்து முடி​வெ​டுக்க வேண்​டும் என்று கரு​ணா​நிதி கூறி​யி​ருக்​கி​றார்.​

இ​தன் மூலம் ஆங்​கில வழி​யில் கல்வி கற்​றால்​தான் வேலை கிடைக்​கும்;​ போட்டி தேர்​வு​க​ளில் வெற்றி பெற முடி​யும் என்று கட்​ட​ணப் பள்​ளி​கள் நடத்​து​வோர் செய்​யும் பொய் பிர​சா​ரத்​துக்கு முதல்​வர் கரு​ணா​நிதி வலிமை
சேர்த்​தி​ருக்​கி​றார்.​

ஆங்​கில வழி பயிற்று மொழி என்​பது இடை​யில் வந்​தது.​ அதற்கு முன்பு தமிழ் வழிப் பள்​ளி​க​ளி​லேயே
பெரும்​பா​லா​னோர் படித்​த​னர்.​ அவர்​கள் அறி​ஞர்​க​ளாக,​​ மேதை​க​ளாக,​​ அரசு உயர் அதி​கா​ரி​க​ளாக,​​ மருத்​து​வர்​க​ளாக,​​ விஞ்​ஞா​னி​க​ளாக,​​ சிறந்த நிர்​வா​கி​க​ளாக
உயர்ந்​தி​ருக்​கி​றார்​கள்.​

எ​னவே,​​ ஆங்​கில வழிக் கல்​வியை கற்​றால்​தான் பயன்​பெற முடி​யும் என்​ப​தெல்​லாம் வெறும் மாயை.​ இந்த மாய வலை​யில் தமி​ழக அரசு சிக்​கி​வி​டக் கூடாது.​

த​மிழ் செம்​மொழி மாநாடு நடத்த இருக்​கும் இந்த
தரு​ணத்​தில்,​​ தமி​ழக பள்​ளி​கள் அனைத்​தி​லும் தமிழே பயிற்று மொழி என்ற அறி​விப்​பினை முதல்​வர் கரு​ணா​நிதி வெளி​யிட வேண்​டும். இதன் மூலம் நமது கல்வி முறை​யில் இப்​போ​துள்ள ஏற்​றத்​தாழ்வை போக்கி,​​ சமூக நீதியை நிலை​நி​றுத்த முன்​வர வேண்​டும் என்று கூறியுள்ளா ராம​தாஸ்.

கொலை- 'ராமதாஸ், அன்புமணிக்கு தொடர்பில்லை':

இந் நிலையில் திண்டிவனத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டு முன்பு அதிமுக தொண்டர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ஆகியோருக்குத் தொடர்பு இல்லை என்று காவல்துறை அறிவித்துள்ளது.

2006ம் ஆண்டு மே 9ம் தேதி தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றபோது முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்தின் திண்டிவனம் வீட்டில் ஒரு ஆயுதம் தாங்கிய கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதில் அதிமுக தொண்டர் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.

இந் நிலையில் சமீபத்தில் சி.வி.சண்முகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், முதல் தகவல் அறிக்கையில் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ், பரசுராமன், சீனிவாசன், என்.எம்.கருணாநிதி, பார்த்திபன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன என்றும், ஆனால், இவர்களை நீக்கிவிட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். முறையாக போலீசார் விசாரணை செய்தபிறகு தான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தார். இதுபற்றி பதில் தருமாறு போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டார்.

இதையடுத்து திண்டிவனம் டி.எஸ்.பி. தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த 24 சாட்சிகளை விசாரித்தோம். இதுதவிர, 85 சாட்சிகளையும் விசாரித்தோம்.

சாட்சிகள் வாக்குமூலம், கைதிகளின் வாக்குமூலம் இவற்றையெல்லாம் பார்க்கும்போது டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பரசுராமன், சீனிவாசன் ஆகியோருக்கு இதில் தொடர்பில்லை என்பது தெளிவாக தெரிய வந்தது.

ரகு என்பவர் தான் இன்னொருவருடன் சேர்ந்து இந்த கொலையை செய்ய சதித்திட்டம் செய்துள்ளார். ஆனால் ரகு தற்போது உயிருடன் இல்லை. ஆகவே, சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

Sunday, December 6, 2009

பென்னாகரம் இடைத்தேர்தலில் பாமக தனித்துப் போட்டி: ராமதாஸ்

தர்மபுரி: காலியாக உள்ள பென்னாகரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், அதில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

வன்னியர் சங்க மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தர்மபுரி வந்திருந்த டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் பேசுகையில், தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவெடுத்து விட்டால் தனித்து போட்டியிடுவோம். அதே நேரத்தில் பிற கட்சிகள் எங்களுக்கு ஆதரவு அளித்தால் அதை வரவேற்போம் என்றார்.

இலங்கைக்கு மீண்டும் எம்.பிக்கள் குழுவை அனுப்பப் போவதாக மத்திய அரசு கூறியிருப்பது குறித்த கேட்ட கேள்விக்கு, இலங்கைக்கு இந்தியாவில் இருந்து மீண்டும், மீண்டும் குழுக்களை அனுப்புவது வெறும் கண்துடைப்பு. தனிநாடு என்பதுதான் ஒரே தீர்வு என்றார் ராமதாஸ்.

Tuesday, December 1, 2009

பாமக தோல்விக்கு அதிமுகவே காரணம்-ராமதாஸ்

வேலூர்: கடந்த மக்களவைத் தேர்தலில் பாமகவுக்கு ஏற்பட்ட தோல்விக்கு அதிமுக தான் காரணம் என்று டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

வன்னியர் சங்கத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட மாநாடு கோட்டை வெளி மைதானத்தில் நடைபெற்றது.

அதில் பேசிய பாமக நிறுவர் ராமதாஸ்,
தமிழ்நாட்டில் வன்னிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 2 கோடி பேர் உள்ளோம். ஆனால் 65 லட்சம் பேர் தான் உள்ளதாக முதல்வர் கருணாநிதி சட்டசபையில் அறிவிக்கிறார்.

1980ம் ஆண்டு வன்னிய சங்கம் தொடங்கப்பட்டபோது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரினோம். அதைத்தான் இப்போதும் கோருகிறோம்.

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ரூ.50 கோடி செலவிட தேவையில்லை. வி.ஏ.ஓக்கள் மூலமே சுலபமாக கணக்கெடுப்பு நடத்திவிடலாம்.

கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று நீங்கள் கூறியதால் கூட்டணி வைத்தோம். அந்த கட்சியில் இருக்கும் கோஷ்டி சண்டை போல எந்த கட்சியிலும் இல்லை. அந்த கட்சியினர் தேர்தலில் விலை போயினர். அதன் காரணமாக நாம் தேர்தலில் தோற்றுப் போனோம்.

நான் காரில் சென்று எல்லா தொகுதிகளுக்கும் பிரச்சாரம் செய்தேன். ஜெயலலிதாவோ ஹெலிகாப்டரில் சென்று பிரச்சாரம் செய்தார்.

தேர்தலில் 9 இடங்களில் அதிமுக வென்றது. இதில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு நாம்தான் காரணம். வெற்றி பெற்றவர்களில் ஒருவர் கூட, நமக்கு நன்றி தெரிவிக்கவில்லை. காரணம் நமக்கு நன்றி தெரிவித்தால் ஜெயலலிதா கட்சியிலிருந்து தூக்கி விடுவாரோ என்ற பயம். இப்படித்தான் உள்ளது அந்தக் கட்சி.

வன்னியர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். நாம் ஆட்சிக்கு வந்தால், எல்லா தரப்பு மக்களுக்கும் உரிய மரியாதை, பங்கு தருவோம் என்றார்.

Wednesday, November 25, 2009

இடைத்தேர்தல்: பா.ம.க. போட்டியில்லை

சென்னை, நவ. 25: திருச்செந்தூர், வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடாது என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சென்னையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடாது. எங்கள் ஆதரவு யாருக்கு என்பதை ஓரிரு நாளில் அறிவிப்போம்.

நீதிமன்ற தீர்ப்புகளால் நடைபெறும் இடைத்தேர்தல்களைத் தவிர, பிற காரணங்களால் நடைபெறும் இடைத்தேர்தல்களில், அங்கு ஏற்கெனவே வெற்றி பெற்ற கட்சிக்கே வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இதை எங்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தேர்தல் நடைமுறைகளில் இதற்கேற்ப மாற்றம் கொண்டு வர வேண்டும். இதற்கு எல்லாக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.

Tuesday, November 24, 2009

பச்சையாக பணம் கொடுகிறார்கள்: இடைத்தேர்தல் ஒரு தமாஷ்- ராமதாஸ்

திருவண்ணாமலை: இடைத் தேர்தலில் பச்சையாக பணம் கொடுக்கிறார்கள். எனவே இடைத் தேர்தலை நாங்கள் தமாஷாகத்தான் பார்க்கிறோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

கடந்த 3 ஆண்டுகளில் 8 இடைத்தேர்தல்கள் நடந்துள்ளன. தற்போது வந்தவாசி, திருச்செந்தூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடந்த இடைத்தேர்தல்கள் எப்படி நடந்தது என்பதை பார்க்க வேண்டும்.

வந்தவாசி, திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தல் எந்தவித புகாரும், எந்தவித குற்றச்சாட்டும் இன்றி சுதந்திரமாக நடக்கும் என்று முதல்வர் அறிவிக்க வேண்டும்.

இந்த தொகுதிகளில் வெளியூர் ஆட்கள் தங்கமாட்டார்கள், வெளி மாவட்ட அமைச்சர்கள் வரமாட்டார்கள், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படமாட்டாது என்று முதல்வர் உத்தரவாதம் கொடுக்க வேண்டும்.

அப்படி உத்தரவாதம் கொடுத்தால் இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடும். பணம் கொடுத்து ஓட்டு வாங்குவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே முதல்வர், அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து எந்த கட்சியும் ஓட்டுக்கு ஒரு பைசாக்கூட கொடுக்கக் கூடாது என்ற ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஓட்டுக்கு பணம் கொடுப்பதால் மக்கள் அடிக்கடி இடைத் தேர்தலை எதிர்பார்க்கின்றனர். இந்த சூழ்நிலையை மாற்ற வேண்டும். திருமங்கலம் இடை தேர்தலுக்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுப்பது வெட்டவெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இடைத்தேர்தலை நாங்கள் தமாஷாகத்தான் நினைக்கிறோம். இடைத்தேர்தலே கூடாது என்பதுதான் பாமகவின் கருத்து. ஆளும் கட்சி நபர் ஒருவரையே நியமித்துக் கொள்ளலாம். அரசியலில் சினிமாத்தனமும், சினிமாவில் அரசியலும் வேரூன்றிவிட்டது.

2011ம் ஆண்டு நடைபெற உள்ள மக்கள் தொகை கணக் கெடுப்பை சாதி வாரியாக நடத்தவேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அன்புமணி மத்திய அமைச்சராக இருந்த போது 178 எம்.பிக்களிடம் கையெழுத்து வாங்கி மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் கொடுத்தார். டெல்லியில் நான் கருத்தரங்கமும் நடத்தி இருக்கிறேன். பாமக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தது.

தமிழ்நாடு, இடஒதுக்கீட்டின் பிறப்பிடம், தாய்வீடு என்று சொல்லப்படுகிறது. எனவே மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடுதான் ஓங்கி குரல் கொடுக்க வேண்டும். ஆனால் மற்ற மாநிலங்கள் குரல் கொடுத்து அதற்கான நடவடிக்கையும் எடுத்து வருகிறது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக எடுப்பதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், பொறுப்பேற்க வேண்டும்.

முல்லை பெரியாறு அணை வழக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடக்கத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. தீர்ப்பு வரப்போகிறது என்று இருக்கும்போது 3 நீதிபதிகளை கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் விசாரணை தொடங்க பல வருடம் ஆகும். இந்த காலதாமதத்திற்கு முழுக்க முழுக்க தமிழ்நாடு முதல்வர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றார் ராமதாஸ்.

Friday, November 20, 2009

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி போராட்டம்: ராமதாஸ்

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் சென்னை மாவட்ட மாநாட்டில் பேசிய அவர்,

தமிழகத்தில் தனிப்பெரும் சமூகமாக வன்னியர் சமூகம் உள்ளது. ஆனால், வன்னியர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கிடைக்காதவரை இந்த சமூகம் முன்னேறாது. எனவே, வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும்.

சென்னை உயர் நீதிமன்றம் தொடங்கப்பட்டு 135 ஆண்டுகள் ஆகின்றன. நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தி வருகிறோம். உயர் நீதிமன்றத்தில் 54 நீதிபதிகளில் 9 பேர் பிராமணர்கள் ஆவார்கள்.

இதில் கூட பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு கிடைக்கவில்லை.

135 வருட உயர் நீதிமன்ற வரலாற்றில் 4 வன்னியர்கள் மட்டுமே நீதிபதிகளாக இருந்திருக்கின்றனர். 2 கோடி மக்கள் நாம் இருக்கிறோம். ஆனால் சட்டமன்றத்தில் முதல்வர் நாம் 65 லட்சம் பேர் தான் என்கிறார். அவர் பழைய கணக்கெடுப்பை சொல்கிறார். கிராம நிர்வாக அலுவலரிடம் பொறுப்பை ஒப்படைத்தால் அவர் சொல்லி விட மாட்டாரா?.

இன்றைய சூழலில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த 5 பேராவது உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும். ஆனால் போராடாமல் இது கிடைக்காது.

எனவே வன்னிய சமூகத்தைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கருப்பு அங்கிகளோடு, சென்னை நகர வீதிகளில் இறங்கி போராடத் தயாராக வேண்டும்.

5 வன்னியர்களை நீதிபதிகளாக நியமிக்கும் வரை நமது போராட்டம் ஓயக்கூடாது. தடை விதித்தால், தடையை மீறிப் போராடி சிறை செல்வோம். இதற்காக நான் சிறை செல்லவும் தயாராக இருக்கிறேன்.

சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தினால் வன்னியர் ஜனத்தொகை தெரிந்து விடும் என்று பயப்படுகிறார்கள். சாதி வாரியாக கணக்கெடுப்பை நடத்தினால் தானே தகுதியின் அடிப்படையில் யாருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தெரியும்.

மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்து இது குறித்து மனு கொடுக்க இருக்கிறேன். 2011 சென்சஸை தவறவிட்டால் அது 2022க்கு சென்று விடும். போராட்டம் இல்லாமல் எதையும் நாம் சாதிக்க முடியாது. அதனால் நாம் போராடி பெற வேண்டும். நீங்கள் எந்த போராட்டம் நடத்தினாலும் நான் வருகிறேன் என்றார் ராமதாஸ்.

Monday, November 16, 2009

சிலர் சூழ்ச்சியால் வன்னியர்களுக்கு தாழ்வு-ராமதாஸ்

காஞ்சிபுரம்: சிலரது சூழ்ச்சியால் வன்னியராகிய நாம் தாழ்வு நிலைக்கு சென்றுள்ளோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

எந்தக் கூட்டணியிலும் இல்லாமல் தனிக் கூட்டணியாக உலா வரும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மீ்ண்டும் வன்னியர் கோஷத்தைக் கையில் எடுத்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் சமூக முன்னேற்ற சங்கம் சார்பில், அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப் பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடந்தது.

இந்த விழாவில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகையில்,

வன்னியர் ஜாதி முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக, வன்னிய சங்கம் ஏற்படுத்தப்பட்டது. சிலரது சூழ்ச்சி தந்திரம் காரணமாக நம்மை கீழே தள்ளியுள்ளனர்.

எல்லாருக்கும் ஜாதி ஏக்கம் இருக்கத்தான் செய்கின்றது. இது இல்லாதவர் எவரும் இல்லை என்று கூறலாம்.
நாட்டில் பொருளாதார ரீதியாக பணக்காரன், நடுத்தர வர்க்கத்தினர், ஏழை என ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டுள்ளன.

இதில், ஒடுக்கப்பட்டு திட்டமிட்டு ஏமாற்றப்பட்டவர்கள் தான் வன்னியர்கள். வாழ்விழந்த ஜாதி, ஆட்சி அதிகாரத்தில் இல்லாத ஜாதி என்று கூட கூறலாம்.

முன்பு, 1980 ம் ஆண்டு வன்னியர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரை. பார்க்க தவமாக இருந்தேன். ஏழு நாட்கள் மறியல் போராட்டத்திற்கு பின் தான் சந்திக்க முடிந்தது.

அப்போது, எம்.ஜி.ஆர். உடன் இருந்தவர்கள் அவருக்கு தெரிய வேண்டிய முக்கியத் தகவல்களை தெரிவிக்காமலே காலத்தை ஓட்டிவிட்டனர்.

2011 ம் ஆண்டு ஜாதி வாரியாக, கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போது வன்னியர்கள் அதிகம் வசிப்பது தெரிய வரும். இது தெரியக் கூடாது என்பதற்காகவே ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தாமல் உள்ளனர்.

வன்னியர்கள் தூங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக தெருக்கள் தோறும் டாஸ்மாக் கடையை திறந்து வைத்துள்ளனர்.

வன்னியர்கள் குடித்து அரசுக்கு வருவாயை பெருக்கி தருகின்றனர். வருடத்திற்கு 10 ஆயிரத்து 600 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கின்றது என்றார்.

Friday, November 13, 2009

பணம் தர மாட்டோம் என எழுதித் தந்தால் இடைத் தேர்தலில் போட்டி-ராமதாஸ்

சென்னை: வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று அனைத்துக் கட்சியினரும் கையெழுத்திடும் ஒரு ஒப்பந்தத்தை முதல்வர் கருணாநிதி ஏற்படுத்தினால்தான் திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி ஆகிய தொகுதிகளின் இடைத் தேர்தலில் பாமக போட்டியிடும் என்று அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

சட்டமன்ற இடைத் தேர்தல் தொடர்பாக முதல்வர் கருணாநிதி அனைத்து கட்சிகளையும் அழைத்துப் பேச வேண்டும். வாக்காளர்களுக்கு யாரும் பணம் கொடுக்க மாட்டோம் என்று சர்வ கட்சிகளும் முடிவெடுத்து, அதற்கான ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கி, அதில் அனைத்துக் கட்சிகளையும் முதல்வர் கையெழுத்திடச் செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்தால் முதல்வர் கருணாநிதிக்கு பாமக ஆளுயர மாலை அணிவித்து பாராட்டுவதுடன், இந்த முடிவை செயல்படுத்தினால் இடைத் தேர்தலில் பாமக நிச்சயமாக போட்டியிடும்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு தேர்தல் ஆணையத்திற்கே விருப்பமில்லை. அதனால்தான் இது தொடர்பான புகார்களுக்கு தீர்வு காண சர்வ கட்சித் தலைவர்களையோ, நிபுணர்களையோ தேர்தல் ஆணையம் கலந்தாலோசிக்கவில்லை (புகாரை தேர்தல் ஆணையம் நிரூபிக்கச் சொல்லி கூப்பிட்டும் இவர் போகவில்லை என்பது நினைவுகூறத்தக்கது)

குறைந்தபட்சம் வாக்காளர்கள் தாங்கள் எந்த கட்சிக்கு வாக்களிக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளும் வகையிலாவது மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை மாற்றியமைக்க வேண்டும்.

இலங்கை தமிழ் அகதிகளுக்கு உதவுவதற்காக முதல்வர் ரூ.100 கோடி நிதியை அறிவித்துள்ளார். நான் ஏற்கனவே கேட்டுக் கொண்டபடி அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள், காப்பீட்டுத் திட்டம் அவற்றை செயல்படுத்த வேண்டும்.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்காக ஏழை உழவர்களின் நிலங்கள் பெரிய தொழிலதிபர்களிடம் தாரை வார்க்கப்படுகின்றன. சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு நிலங்களை கையகப்படுத்தி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவு முறைகேடுகள் நடப்பதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், சமூக ஆர்வலரு மான அருணா ராய் தலைமையிலான குழு குறிப்பிட்டுள்ளது.

ஒரு சென்ட் விளை நிலத்தை கூட சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக கையகப்படுத்த மாட்டோம் என்று முதல்வர் கருணாநிதி உறுதியளித்தார். ஆனால் தற்போது விளை நிலங்கள்தான் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக கையகப்படுத்தப்படுகின்றன.

நில உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே பத்திரப் பதிவுகள் நடக்கும் அராஜகங்களும் அரங்கேறுகின்றன. இது போன்ற தவறுகளுக்கு தமிழக அரசின் நில கொள்கைதான் காரணம்.

சிறப்பு பொருளாதார மண்டலங்களின் மூலம் தமிழ்நாட்டில் எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

நீதிபதி தினகரன் திருத்தணி பகுதியில் 200 ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டிருப்பதாக மாவட்ட கலெக்டரே அறிக்கை அளித்துள்ளார். இதன் பிறகும் இந்த விஷயத்தில் விசாரணை அவசியமா?.

அவருக்கு பதிலாக அவரது இடத்தில் தகுதி வாய்ந்த ஒரு தலித் நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க வேண்டும். நீதிபதிகளை விசாரிப்பதற்கு தனிச் சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். அந்த சட்டத்தை தாமதமின்றி கொண்டு வர வேண்டும்.

பூரண மதுவிலக்குதான் பாமகவின் கொள்கை. ஆயினும் அந்த நிலை அமல்படுத்தப்படும் வரை டாஸ்மாக் ஊழியர்களுக்கு 6 மணி நேர வேலை, வார விடுமுறை, 75 சதவீதம் போனஸ், விழாக் காலங்களில் இரண்டு நாட்கள் விடுமுறை ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும் என்றார் ராமதாஸ்.

Wednesday, October 28, 2009

5வது ஈழப் போராட்டம் நிச்சயம் தொடரும்: ராமதாஸ்

ஈழப்போராட்டம் முடிந்தாகி விட்டது என்றெல்லாம் இந்தியாவும், இலங்கையும் சொல்கிறது. ஆனால் இன்னும் ஈழ விடுதலைப் போராட்டம் முடியவில்லை. 5 வது ஈழப் போராட்டம் நிச்சயம் தொடரும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இலங்கையில் முள்வேலி முகாம்களில் உள்ள 3 லட்சம் தமிழர்களை அவர்களுடைய சொந்த வாழ்விடங்களில் குடியமர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இன்று திருச்சியை நோக்கிய பிரச்சார ஊர்தி பயணம் தொடங்கியது.

சென்னையில் டாக்டர் ராமதாஸ் தலைமையிலும், கோவையில் பழ.நெடுமாறன் தலைமையிலும், இராமநாதபுரத்தில் வைகோ தலைமையிலும், கன்னியாகுமரியில் ஆர்.நல்லக்கண்ணு தலைமையிலும் இன்று தொடங்கிய இந்த பிரச்சார ஊர்தி பயணம் 29 ம் தேதி திருச்சியில் நிறைவடைகிறது.

அங்கு அன்றைய தினம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. சென்னையில் இன்று டாக்டர் ராமதாசை வழியனுப்பும் கூட்டம் பாமக சார்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது,

இலங்கைத் தமிழர்களை ராஜபக்ச கொன்று குவித்த இரத்தத்தின் ஈரம் இன்னும் அங்கு காயவில்லை. இந்த நேரத்தில் தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் குழு இலங்கைக்கு சென்று இரத்தக்கறை படிந்த ராஜபக்சவுடன் கைகுலுக்கி, சிரித்து பேசிவிட்டு வந்து இருக்கிறார்கள்.

பரஸ்பரம், பரிசு பொருட்களை கொடுத்தும், வாங்கியும் வந்து இருக்கிறார்கள். எப்படி இவர்களுக்கு இப்படி நடந்து கொள்ள மனம் வந்ததோ தெரியவில்லை. யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரோடு எந்த ஒரு யூதனாவது கைகுலுக்குவானா என்பதை தமிழர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். எங்களுடைய இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் அங்கு சென்று இருந்தால் அவர்கள் ராஜபக்சவுடன் கைகுலுக்கி விட்டு சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கி இருக்க முடியுமா?

அப்படி அவர்கள் திரும்பி இருந்தால் தமிழர்களுக்கு துரோகம் செய்யும் கருணாவோடு சேர்ந்து கொள்ளுங்கள், டக்ளஸ் தேவானந்தாவோடு சேர்ந்து கொள்ளுங்கள் அல்லது சிங்களவனோடு சேர்ந்து கொள்ளுங்கள் என்று கூறி அவர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்பி இருப்போம்.

ஆனால், இந்த குழுவுக்கு எப்படி மனம் வந்ததோ, அங்கே போய் ராஜபக்சவுடன் கைகுலுக்கி பேசி தேனீரையோ, எதையோ சாப்பிட்டு விட்டு வந்து இருக்கிறார்கள். இந்த குழுவினர் முதல்வரை சந்தித்து ஒரு அறிக்கை வெளியிட்டனர். டெல்லிக்கு சென்று பிரதமரையும், சோனியாவையும் சந்தித்தும் அறிக்கை தந்து இருக்கிறார்கள்.

டெல்லியில் தரப்பட்ட அறிக்கையின் விபரங்கள் என்ன என்பதை இன்னும் அவர்கள் வெளிப்படுத்தவில்லை. அந்த விபரங்களை உடனே வெளியிட வேண்டும். 29 ம் தேதி நாங்கள் திருச்சியில் பொதுக் கூட்டம் நடத்துவதற்குள் இந்த விபரங்களை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் 68 பக்கம் கொண்ட அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறார்கள். அந்த அறிக்கையில் இலங்கை அதிபர் ராஜபக்ச, அவரது சகோதரர்கள் பசில் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச மற்றும் இராணுவ தளபதி பொன்சேகா ஆகியோரை போர் குற்றவாளிகள் என்று அறிவித்து இருக்கிறார்கள்.

இது ஒரு நல்ல திருப்பம் இதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமாவை பாராட்ட வேண்டும். காலம் கடந்தேனும் இந்த நிலை எடுத்த அமெரிக்காவை நாம் பாராட்ட வேண்டும். இந்த அறிவிப்போடு நின்று விடாமல் அதே வேகத்தில் ராஜபக்சவையும், அவரது சகோதரர்களையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று ஒபாமாவை கேட்டுக் கொள்கிறோம்.

அப்போது தான் அவர் பெறுகின்ற அமைதிக்கான நோபல் பரிசுக்கு அர்த்தம் உள்ளதாக இருக்கும். விடுதலைப்புலிகளை ஒழித்தாகி விட்டது. ஈழப்போராட்டம் முடிந்தாகி விட்டது என்றெல்லாம் இந்தியாவும், இலங்கையும் சொல்கிறது. ஆனால் இன்னும் ஈழ விடுதலைப் போராட்டம் முடியவில்லை. 5 வது ஈழப் போராட்டம் நிச்சயம் தொடரும்.

அதுதான் இறுதியான ஈழ விடுதலைப் போராட்டமாக இருக்கும். அதன் முடிவில் நிச்சயம் ஈழ விடுதலை கிடைக்கும். அதற்காகவும், முள்வேலி முகாம்களில் அடைப்பட்டு உள்ள 3 லட்சம் தமிழர்களை மீண்டும் அவர்களுடைய வாழ்விடங்களில் குடியமர்த்தும் வலியுறுத்தியே எங்களுடையே இந்த பிரச்சார பயணம் நடைபெறுகிறது.

இதே போல தமிழர் பகுதிகளில் உள்ள சிங்களவர்களை வெளியேற்றக் கோரியும் நாங்கள் இந்த பிரச்சார பயணத்தை நடத்துகிறோம் என்றார்.

தமிழனை தேடி கொண்டிருக்கிறேன்-ராமதாஸ்

திண்டிவனம்: டாஸ்மாக் கடையிலும், சினிமா தியேட்டரிலும் இளைஞர்கள் முடங்கி விட்டனர். சில இளைஞர்கள் சினிமா நடிகர்களின் பின்னால் செல்கின்றனர். பெண்களை டி.வி. கட்டிப்போட்டு விட்டது. தமிழனை நான் தேடி கொண்டிருக்கிறேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

திண்டிவனத்தில் நடந்த ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து ஈழப் பிரச்சனைக்காக இந்த இயக்கம் பல போராட்டங்களை நடத்தி வந்துள்ளது. ஒரு ஆண்டாக நாம் போராடிய போதும் தமிழர்கள் ஒத்த குரல் எழுப்பவில்லை. தமிழனையே தேட வேண்டியுள்ளது.

டாஸ்மாக் கடையிலும், சினிமா தியேட்டரிலும் இளைஞர்கள் முடங்கி விட்டனர். சில இளைஞர்கள் சினிமா நடிகர்களின் பின்னால் செல்கின்றனர். பெண்களை டி.வி. கட்டிப்போட்டு விட்டது. தமிழனை நான் தேடி கொண்டிருக்கிறேன்.

''தாய் தமிழ்நாடே என்ன செய்கிறாய்?'' என உலகத் தமிழர்கள் கேட்கின்றனர். மேலும் அவர்கள் உங்களைத்தான் நம்பியுள்ளோம் என்கின்றனர்.

இலங்கை பிரச்சனைக்காக 16 பேர் தீக்குளித்தனர். ஆனால் 7 கோடி தமிழர்களிடம் எந்த சலனமும் இல்லை.

விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என்று கூறுவது தவறு. விடுதலை போராட்டம் நடத்துபவர்கள் பயங்கரவாதிகள் கிடையாது. பிரபாகரன் தீவிரவாதி அல்ல.

இலங்கை பிரச்சனையில் தமிழக அரசு எதுவும் செய்யவில்லை. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது எதிர்க் கட்சியாக இருந்த திமுக, இலங்கை பிரச்சனைக்காக எப்படியெல்லாம் முழங்கியது? பேரணிகள் நடத்தியது? ஆனால் இன்றைய நிலை என்ன?.

பிகாரை சேர்ந்த ஒருவன் மும்பையில் தாக்கப்பட்டால் பிகார் தலைவர்கள் ஒன்று சேர்ந்து போராடுகிறார்கள். அதே போல்தான் பல மாநிலங்களை சேர்ந்தவர்களும் உள்ளனர். ஆனால், தமிழர்களிடையே ஒற்றுமை கிடையாது.

விடுதலைப் போர் என்றைக்கும் முடிவுக்கு வராது. விரைவில் இலங்கை மண்ணில் தனிநாடு உருவாகும் என்றார்.

Thursday, October 22, 2009

செம்மொழி மாநாட்டில் பங்கேற்கிறோம் - பாமக

சென்னை: கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பாமகவும் பங்கேற்கும் என்று கூறி முதல்வர் கருணாநிதிக்கு அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் எழுதியுள்ள கடிதம்:

2010-ம் ஆண்டு ஜுன் மாதம் 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையில் கோவை மாநகரில் நடைபெற உள்ள உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ளவேண்டும் என்றும், மாநாட்டிற்கென அமைக்கப்பட உள்ள குழுக்களில் பா.ம.க. சார்பாக பிரதிநிதி ஒருவர் இடம்பெற வேண்டும் என்றும் கேட்டு கடிதம் அனுப்பி வைத்துள்ளீர்கள்.

கட்சி வேறுபாடு இன்றி, தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் அதன் ஆக்கம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு இந்த மாநாடு நடைபெறும் என்று உறுதியளித்து ஒத்துழைப்பை கோரியிருக்கிறீர்கள். உங்களது இந்த உறுதிமொழிக்கும், ஒத்துழைப்பு கேட்டு அழைப்பு விடுத்ததற்கும் முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

1966-ம் ஆண்டு முதல் இதுவரை 8 முறை உலக தமிழ் மாநாடுகள் நடைபெற்றிருக்கின்றன. கோவையில் நடைபெறுகிற மாநாடு இந்த வரிசையில் இடம்பெறுமா? அல்லது உலக தமிழ் செம்மொழி மாநாடு என்பதால் தனித்து நிற்குமா? என்ற சர்ச்சையில் நுழைய விரும்பவில்லை.

எனினும், உலக உருண்டையில் ஒரு பகுதியில் உள்ள தமிழர்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியிருக்கும் நிலையில், தாய் தமிழகத்தில் கோலாகலமாக மாநாடு நடத்தப்படுவது தேவையா? கொஞ்சக்காலம் பொறுத்திருந்து இன்னும் சிறப்பாக நடத்தலாமே என்று எழுப்பப்படுகின்ற வாதத்தை எளிதில் தள்ளிவிட முடியாது என்பதை நினைவூட்டாமல் இருக்க முடியவில்லை.

எனினும் தமிழ், தமிழ் வளர்ச்சி தொடர்பாக இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்பதால் ஆறுதல் கொள்ளலாம். தமிழ் மொழி வளர்ச்சியில் அக்கறையுள்ள அனைவரும் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, இதுபோன்ற தமிழ் வளர்ச்சிக்கான மாநாடுகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

அதே நேரத்தில், இத்தகைய மாநாடுகளினால் ஏற்படும் விளைவுகள் என்ன? மாநாடுகளை தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய செயல் திட்டங்கள் என்ன? இதுவரையில் நடைபெற்றிருக்கும் மாநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் அவற்றிற்கான செயல்திட்டங்களை நிறைவேற்றுவதில் வெற்றி கண்டிருக்கிறோமா? என்பவை குறித்து சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

தமிழ் ஆட்சிமொழி சட்டம் நிறைவேற்றப்பட்டு 53 ஆண்டுகள் கடந்துவிட்டன. அன்னை தமிழுக்கு அரியணையை அளிக்கும் பணியில் முழுமை அடைந்திருக்கிறோமா என்றால், `இல்லை' என்று நீங்களும் ஒப்புக் கொள்ளுவீர்கள். இந்த மாநாட்டை முன்னின்று நடத்தும் தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொள்வார்கள்.

தமிழ் வளர்ச்சிக்கான மாநாடுகள் எந்தப் பெயரில் நடந்தாலும், அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் செயல்திட்டங்கள் நிறைவேற்றி முடிக்கப்படவேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழி என்பது முழுமை பெறுவதும், தமிழ் பயிற்று மொழி என்பது நடைமுறைப்படுத்துவதும் தமிழ் மொழி வளர்ச்சியில் அழியாத அத்தியாயங்களாக இருக்கும் என்பதில் உங்களுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

வரும் கல்வியாண்டில் இருந்து சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தாய் மொழியான தமிழ் மட்டுமே அனைத்து கல்வி நிலையங்களிலும் பயிற்று மொழியாக இருந்தால் மட்டுமே சமச்சீர் கல்வி நிறைவடையும் என்பது, சமச்சீர் கல்வி குறித்து அரசுக்கு அறிக்கை அளித்திருக்கும் அறிஞர் குழுவினரின் ஒருமித்த கருத்தாகும். இந்த லட்சியத்தை படிப்படியாக எட்டலாம் என்பதை விட்டுவிட்டு, இனி தமிழகத்தில் எல்லா மட்டத்திலும் தமிழே பயிற்சி மொழியாக இருக்கும் என்று சட்டம் இயற்றி அறிவித்து நடைமுறைப்படுத்துங்கள்.

இந்த அவலநிலைகளை எல்லாம் உடனடியாக மாற்ற தமிழ் அறிஞர்களை கொண்ட குழுவினை அமைத்து ஒருசில வாரங்களில் கலந்தாய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அவகாசம் இருக்கிறது. தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற இன்னும் 8 மாதங்கள் இருக்கின்றன. இந்த அவகாசத்தை பயன்படுத்தி தேவையான சட்டங்களையும், அரசாணைகளையும் வெளியிட்டு அனைத்து நிலையிலும் தமிழ்; அதுவும் கலப்படம் இல்லாத தமிழ் என்ற நிலையினை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். இம்முயற்சிக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்புத் தருகிறோம்.

இத்தகைய நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொள்வீர்கள் என்ற உறுதியான நம்பிக்கையின் அடிப்படையில், கோவையில் நடைபெற இருக்கும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்ற உங்களது அழைப்பை பா.ம.க. ஏற்றுக்கொள்கிறது.

மாநாட்டையொட்டி அமைக்கப்படும் குழுக்களின் விவரங்களை தெரிந்து அதில், பா.ம.க. சார்பில் இடம்பெறும் பிரதிநிதியை உரிய நேரத்தில் அறிவிக்கிறோம். கோவையில் நடைபெறும் மாநாடு தமிழ் மொழியின் ஆக்கம், வளர்ச்சி தவிர அரசியல் உள்நோக்கம் ஏதுமில்லை என்று நீங்கள் வெளியிட்டிருக்கும் அறிவிப்பை வரவேற்கிறேன். மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்ற உங்களது அழைப்புக்கு மீண்டும் நன்றி கூறி முடிக்கிறேன் என்று கூறியுள்ளார் ராமதாஸ் .

Tuesday, October 20, 2009

விவசாயிகளுக்கு ஊதியம் தர ராமதாஸ் கோரிக்கை

சென்னை: விவசாயத்தில் ஈடுபடும் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 25,000 ஊதியம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு உழவர் பேரியக்கம் மற்றும் பசுமைத் தாயகம் அமைப்புகளின் சார்பில் விவசாயிகளுக்கான கொள்கை அறிக்கை குறித்த கலந்துரையாடல் சென்னை யில் நடந்தது.

கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில்,

விவசாய தொழிலை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும். வரும் தலைமுறை விவசாய தொழிலில் ஈடுபட முன்வர வேண்டும். நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவை நடக்க வேண்டுமென்றால் விவசாய தொழிலில் ஈடுபடுவருக்கு நேடியாக ஊதியம் கிடைக்க வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து பரிந்துரை செய்ய ஊதியக்குழு அமைக்கப்படுகிறது. அதே போல் விவசாயிகளுக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் வருமானத்தை பரிந்துரைக்க உழவர் வருவாய் குழு அமைக்க வேண்டும்.

விவசாயத்தில் ஈடுபடும் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 25,000 வழங்க வேண்டும். இந்த உழவர் ஊதியத்தை ஆண்டுதோறும் மறு ஆய்வு செய்து உயர்த்த வேண்டும் என்றார்.

கூட்டத்தில் உழவர் பேரியக்க தலைவர் சடகோபன், ராமதாசின் மகளும் பசுமை தாயகம் தலைவருமான செளம்யா அன்புமணி , விவசாய சங்கங்ளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Friday, October 16, 2009

மகிந்தவின் தேர்லுக்கு வலுச்சேர்க்கும் உள்நோக்கமே-இந்திய நாடாளுமன்றக் குழுவின் இலங்கைப் பயணம்

இந்திய அரசு நினைத்தால் ஒரேநாளில் கண்ணிவெடிகளை அகற்றி இலங்கைத் தமிழர்களுக்கு உதவ முடியும். ஆனால் அதற்கான எண்ணமும், மனமும் இந்திய அரசிடம் இல்லை என்பதே உண்மை. இலங்கையில் தேர்தலை நடத்த ராஜபட்ச திட்டமிட்டுள்ளார். அதற்கு உதவிடும் வகையிலேயே இங்கிருந்து குழு அனுப்பப்பட்டுள்ளது என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கண்ணிவெடிகளை அகற்ற வேண்டிய பணிகள்தான் தமிழர்களை மீண்டும் அவர்களின் இடத்திற்கு குடியேற்றுவதற்கு தடையாக உள்ளதாக இலங்கை அதிபர் ராஜபட்ச கூறியுள்ளார்.

கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பது உண்மையானால் வன்னிப்பகுதி நெடுகிலும் 3 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களை இலங்கை ராணுவத்தினர் எந்தவித சிக்கலும் இன்றி விரட்டிவந்தது எப்படி? பின்னர் அங்கிருந்து அகதி முகாம்களுக்கு விரட்டிச் சென்று அடைத்து வைப்பது எப்படி சாத்தியமானது?

கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பது உண்மை என்றே வைத்துக்கொண்டாலும், போர் முடிந்து 6 மாதகாலமாக அகற்ற முடியவில்லையா? இலங்கைக்கு போரில் உதவிய நாடுகளிடம் ஏன் அதற்கான உதவிகளைக் கேட்கவில்லை? இந்தியாவிடம் ஏன் கேட்கவில்லை?

இந்திய அரசு நினைத்தால் ஒரேநாளில் கண்ணிவெடிகளை அகற்றி இலங்கைத் தமிழர்களுக்கு உதவ முடியும். ஆனால் அதற்கான எண்ணமும், மனமும் இந்திய அரசிடம் இல்லை என்பதே உண்மை. இலங்கையில் தேர்தலை நடத்த ராஜபட்ச திட்டமிட்டுள்ளார். அதற்கு உதவிடும் வகையிலேயே இங்கிருந்து குழு அனுப்பப்பட்டுள்ளது.

என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tuesday, October 6, 2009

ஜெயலலிதா மீது ராமதாஸ் சரமாரி தாக்கு

நாகர்கோவில்: சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்பட்டதால் தான் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

மேலும் அதிமுக பலவீனமாகிவிட்டது, அதிமுக தொண்டர்கள் விலை போகிறார்கள், ஜெயலலிதாவுக்கு தலைமைப் பண்பு இல்லை என்று சரமாரியாக தாக்குதலும் தொடுத்தார் ராமதாஸ்.

இன்று நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

தமிழ்நாட்டில் 1967 முதல் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இன்றுவரை கட்சிகள் கூட்டணி அமைத்துதான் தேர்தலை சந்திக்கின்றன.

ஒரு தேர்தலில் ஒரு கட்சியோடு கூட்டணி அமைத்த கட்சி மறுதேர்தலில் இன்னொரு கட்சியோடு கூட்டணி அமைக்கும் காட்சிகள் நடந்துள்ளன. பாமக அந்த வகையில்தான் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்தித்து வந்துள்ளது.

2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது திண்டிவனம் தொகுதியில் பாமக வேட்பாளராக எங்கள் கட்சியை சேர்ந்த கருணாநிதி போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகம் போட்டியிட்டார்.

வாக்குப்பதிவு நாளன்று சண்முகத்தின் ஊரில் ஏற்பட்ட தகராறில் அவரது உறவினர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் முதல் குற்றவாளியாக நானும், 2வது குற்றவாளியாக எனது மகனும், 3வது, 4வது, 5வது குற்றவாளிகளாக எனது பேரன் மற்றும் உறவினர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டன.

6வது குற்றவாளியாக வேட்பாளர் கருணாநிதியின் பெயரும், 7வது குற்றவாளியாக ரகு என்பவரின் பெயரும் சேர்க்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு பின்னர் 7வது குற்றவாளியான ரகு முதல் குற்றவாளியாக மாற்றப்பட்டார். இந்த வழக்கு தற்போது உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இதில் 4 வாரங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே கொடநாட்டில் தங்கி இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை எங்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணியும், முன்னாள் எம்.பி தன்ராஜும் சந்தித்துப் பேசினர். அப்போது இந்த பிரச்சினை குறித்து கூறப்பட்டபோது இதுபற்றி பின்னர் பார்த்து கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.


ஆனால் நாங்கள் உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த நிர்வாககுழு கூட்டத்தை கூட்டினோம். அதில் பங்கேற்ற பலரும் அதிமுக கூட்டணியில் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படும் நிலையில் தொடரக்கூடாது என்று நிர்பந்தித்தனர்.

சுயமரியாதையை விட்டுக்கொடுக்க முடியாது என்பதற்காகவே அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறினோம். 2001ல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தபோதும் 3 மாதத்தில் வெளியே வந்தோம். அதன்பின்பு திமுகவுடன் கூட்டணி அமைத்து 3 வருடங்களுக்கு பிறகு வெளியே வந்தோம்.

அதிமுக பலவீனமாகிவிட்டது:

2001ம் ஆண்டுக்கு முன்னர் அதிமுக, தொண்டர்கள் பலத்துடன் பலமான கட்சியாக இருந்தது. தற்போது அந்த கட்சி பலவீனமாகிகிவிட்டது. ஏராளமான தலைவர்களுடன் கோஷ்டி பூசல்களும் சேர்ந்து கொள்ள தொண்டர்கள் சோர்ந்து போய்விட்டனர்.

விலை போகும் அதிமுக தொண்டர்கள்:

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இக்கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் கூட பணத்துக்கு விலைபோய் விட்டதாக ஜெயலலிதாவே பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இது ஒன்றே அக்கட்சியின் நிலையை தெளிவாக எடுத்துக் காட்டிவிடும்.

ஜெவுக்கு தலைமை பண்பு இல்லை:

இப்போது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தலைமை பண்பும், ஆளுமை திறனும் இல்லாமல் போய்விட்டது. இதனால் கட்சி கலகலத்து காணப்படுகிறது. நாடாளுமனறத் தேர்தல் முடிந்த பின்பு அவரை நான் நேரில் சந்திக்கவில்லை. டெலிபோனில்தான் பேசினேன்.

ஜெயலலிதாவை சந்திக்கவே முடியாது:

ஆனால் முதல்வர் கருணாநிதி யை சந்திக்க விரும்பினால் 2 நிமிடத்திலும், பிரதமரை சந்திக்க விரும்பினால் 10 நிமிடத்திலும் பார்த்து விடலாம். ஆனால் ஜெயலலிதாவை மட்டும் சந்திக்கவே முடியாது.

தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள் அனைத்தும் திமுக அல்லது அதிமுகவுடன்தான் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கும் நிர்பந்தத்தில் உள்ளன. நாங்கள் கட்சி தொடங்கிய பின்பு 1989, 1991, 1996 ஆகிய தேர்தல்களை தனித்தே சந்தித்தோம். 1996ல் 4 தொகுதிகளை கைப்பற்றிய பின்புதான் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தோம்.

போயஸ் தோட்டத்துக்கு தள்ளிவிட்டார்:

அப்போது எங்களது கொள்கையோடு திமுகவின் கொள்கை ஒத்துப் போனதால் அதிமுகவை விட்டு விலகி திமுக கூட்டணியில் சேர்ந்தோம். அதன் பின்பு திமுக தலைவர் எங்களை போயஸ் தோட்டத்துக்கு தள்ளிவிட்டார்.

3-வது அணி...:

இப்போது அதிமுக கூட்டணியில் இருந்தும் விலகிவிட்டோம். இனிவரும் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்தனியாக தேர்தலை சந்தித்தால் நாங்களும் தேர்தலில் தனித்து போட்டியிவோம். அல்லது தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்வோம். இல்லையேல் 3வது அணியை அமைக்க நடவடிக்கை எடுப்போம்.

அதுவரை எதிர்க்கட்சியாக எங்களின் கடமையை செய்வோம். முல்லை பெரியார் பிரச்சினையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி இருப்பது தாமதமான நடவடிக்கை . இருந்தாலும் அதனை வரவேற்கிறோம். தமிழகம் அண்டை மாநிலங்களை சகோதர மனப்பான்மையுடன்தான் பார்க்கிறது. ஆனால் கேரள அரசு அப்படி நடந்து கொள்வதில்லை. நதிநீர் இணைப்பு பிரச்சினைக்கு கர்நாடக மாநிலம்தான் எதிராக உள்ளது என்றார் ராமதாஸ்.

ஜெயலலிதா மீது ராமதாஸ் சரமாரி தாக்கு

நாகர்கோவில்: சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்பட்டதால் தான் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

மேலும் அதிமுக பலவீனமாகிவிட்டது, அதிமுக தொண்டர்கள் விலை போகிறார்கள், ஜெயலலிதாவுக்கு தலைமைப் பண்பு இல்லை என்று சரமாரியாக தாக்குதலும் தொடுத்தார் ராமதாஸ்.

இன்று நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

தமிழ்நாட்டில் 1967 முதல் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இன்றுவரை கட்சிகள் கூட்டணி அமைத்துதான் தேர்தலை சந்திக்கின்றன.

ஒரு தேர்தலில் ஒரு கட்சியோடு கூட்டணி அமைத்த கட்சி மறுதேர்தலில் இன்னொரு கட்சியோடு கூட்டணி அமைக்கும் காட்சிகள் நடந்துள்ளன. பாமக அந்த வகையில்தான் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்தித்து வந்துள்ளது.

2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது திண்டிவனம் தொகுதியில் பாமக வேட்பாளராக எங்கள் கட்சியை சேர்ந்த கருணாநிதி போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகம் போட்டியிட்டார்.

வாக்குப்பதிவு நாளன்று சண்முகத்தின் ஊரில் ஏற்பட்ட தகராறில் அவரது உறவினர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் முதல் குற்றவாளியாக நானும், 2வது குற்றவாளியாக எனது மகனும், 3வது, 4வது, 5வது குற்றவாளிகளாக எனது பேரன் மற்றும் உறவினர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டன.

6வது குற்றவாளியாக வேட்பாளர் கருணாநிதியின் பெயரும், 7வது குற்றவாளியாக ரகு என்பவரின் பெயரும் சேர்க்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு பின்னர் 7வது குற்றவாளியான ரகு முதல் குற்றவாளியாக மாற்றப்பட்டார். இந்த வழக்கு தற்போது உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இதில் 4 வாரங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே கொடநாட்டில் தங்கி இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை எங்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணியும், முன்னாள் எம்.பி தன்ராஜும் சந்தித்துப் பேசினர். அப்போது இந்த பிரச்சினை குறித்து கூறப்பட்டபோது இதுபற்றி பின்னர் பார்த்து கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.


ஆனால் நாங்கள் உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த நிர்வாககுழு கூட்டத்தை கூட்டினோம். அதில் பங்கேற்ற பலரும் அதிமுக கூட்டணியில் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படும் நிலையில் தொடரக்கூடாது என்று நிர்பந்தித்தனர்.

சுயமரியாதையை விட்டுக்கொடுக்க முடியாது என்பதற்காகவே அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறினோம். 2001ல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தபோதும் 3 மாதத்தில் வெளியே வந்தோம். அதன்பின்பு திமுகவுடன் கூட்டணி அமைத்து 3 வருடங்களுக்கு பிறகு வெளியே வந்தோம்.

அதிமுக பலவீனமாகிவிட்டது:

2001ம் ஆண்டுக்கு முன்னர் அதிமுக, தொண்டர்கள் பலத்துடன் பலமான கட்சியாக இருந்தது. தற்போது அந்த கட்சி பலவீனமாகிகிவிட்டது. ஏராளமான தலைவர்களுடன் கோஷ்டி பூசல்களும் சேர்ந்து கொள்ள தொண்டர்கள் சோர்ந்து போய்விட்டனர்.

விலை போகும் அதிமுக தொண்டர்கள்:

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இக்கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் கூட பணத்துக்கு விலைபோய் விட்டதாக ஜெயலலிதாவே பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இது ஒன்றே அக்கட்சியின் நிலையை தெளிவாக எடுத்துக் காட்டிவிடும்.

ஜெவுக்கு தலைமை பண்பு இல்லை:

இப்போது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தலைமை பண்பும், ஆளுமை திறனும் இல்லாமல் போய்விட்டது. இதனால் கட்சி கலகலத்து காணப்படுகிறது. நாடாளுமனறத் தேர்தல் முடிந்த பின்பு அவரை நான் நேரில் சந்திக்கவில்லை. டெலிபோனில்தான் பேசினேன்.

ஜெயலலிதாவை சந்திக்கவே முடியாது:

ஆனால் முதல்வர் கருணாநிதி யை சந்திக்க விரும்பினால் 2 நிமிடத்திலும், பிரதமரை சந்திக்க விரும்பினால் 10 நிமிடத்திலும் பார்த்து விடலாம். ஆனால் ஜெயலலிதாவை மட்டும் சந்திக்கவே முடியாது.

தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள் அனைத்தும் திமுக அல்லது அதிமுகவுடன்தான் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கும் நிர்பந்தத்தில் உள்ளன. நாங்கள் கட்சி தொடங்கிய பின்பு 1989, 1991, 1996 ஆகிய தேர்தல்களை தனித்தே சந்தித்தோம். 1996ல் 4 தொகுதிகளை கைப்பற்றிய பின்புதான் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தோம்.

போயஸ் தோட்டத்துக்கு தள்ளிவிட்டார்:

அப்போது எங்களது கொள்கையோடு திமுகவின் கொள்கை ஒத்துப் போனதால் அதிமுகவை விட்டு விலகி திமுக கூட்டணியில் சேர்ந்தோம். அதன் பின்பு திமுக தலைவர் எங்களை போயஸ் தோட்டத்துக்கு தள்ளிவிட்டார்.

3-வது அணி...:

இப்போது அதிமுக கூட்டணியில் இருந்தும் விலகிவிட்டோம். இனிவரும் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்தனியாக தேர்தலை சந்தித்தால் நாங்களும் தேர்தலில் தனித்து போட்டியிவோம். அல்லது தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்வோம். இல்லையேல் 3வது அணியை அமைக்க நடவடிக்கை எடுப்போம்.

அதுவரை எதிர்க்கட்சியாக எங்களின் கடமையை செய்வோம். முல்லை பெரியார் பிரச்சினையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி இருப்பது தாமதமான நடவடிக்கை . இருந்தாலும் அதனை வரவேற்கிறோம். தமிழகம் அண்டை மாநிலங்களை சகோதர மனப்பான்மையுடன்தான் பார்க்கிறது. ஆனால் கேரள அரசு அப்படி நடந்து கொள்வதில்லை. நதிநீர் இணைப்பு பிரச்சினைக்கு கர்நாடக மாநிலம்தான் எதிராக உள்ளது என்றார் ராமதாஸ்.

Sunday, October 4, 2009

அதிமுக தொடர்ந்த வழக்கால் கோபம் - கூட்டணியை முறித்தது பாமக!

தைலாபுரம்: கடந்த லோக்சபா தேர்தலின்போது, பொதுக்குழுவில் வாக்கெடுப்பு நடத்தி அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாமக, தற்போது அக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கை தடுத்து நிறுத்த ஜெயலலிதா தவறியதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக பாமக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தெரிவிக்கிறது.

கடந்த லோக்சபா தேர்தலின்போது திமுக கூட்டணியில் சேருவதா, அதிமுகவுடன் புதுக் கூட்டணி அமைப்பதா என்ற குழப்பத்தில் சிக்கித் தவித்தது பாமக. இதையடுத்து கூட்டப்பட்ட பொதுக்குழுவில், வாக்கெடுப்பு நடத்தினார் டாக்டர் ராமதாஸ். அதில் பெருவாரியான ஆதரவு அதிமுகவுடன் சேர வேண்டும் என்று இருந்ததால் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதாக அறிவித்தார்.

அப்போதே அதிமுகவுடன் சேருவது குறித்து டாக்டர் அன்புமணி உள்ளிட்ட சில தலைவர்கள் அதிருப்தி தெரிவித்ததாக தெரிகிறது. இருந்தாலும் வம்படியாக அதிமுகவுடன் கூட்டணி வைத்தார் டாக்டர் ராமதாஸ்.

லோக்சபா தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்தது பாமக. தங்களது கோட்டை என்று அது கூறி வந்த தொகுதிகளிலேயே மோசமான தோல்வியைத் தழுவியதால், பாமகவின் அஸ்திவாரம் ஆடிப் போய் காணப்படுகிறது.

லோக்சபா தேர்தல் தோல்வியோடு ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டுக்குப் போய் விட்டார். தோல்விக்கான காரணம் என்ன என்பது குறித்து தனது கட்சித் தலைவர்களுடன் மட்டும் ஆலோசனை (அது கூட முழுமையாக இல்லை) நடத்திய அவர், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

மேலும், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சிலர்-ராமதாஸ் உள்பட, ஜெயலலிதாவை சந்திக்க விரும்பியும் கூட அவர்களுக்கு அப்பாயின்ட்மென்ட் தரப்படவில்லை என்று கூறப்பட்டது. இதனால் டாக்டர் ராமதாஸ் அப்செட்டாகவே இருந்தார்.

இருந்தாலும் முன்பு போல தடாலடியாக கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேற முடியாத நிலையில் கட்சி இருப்பதால், பொறுமை காத்து வந்தார்.

இந்த நிலையில் இன்று திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமகவின் நிர்வாகக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டது.

இந்தக் கூட்டம் குறித்து நேற்று கருத்து தெரிவித்திருந்த டாக்டர் ராமதாஸ், இக்கூட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணியைத் தொடருவதா, இல்லையா என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று கூறியிருந்தார். இதனால் அதிமுக கூட்டணியை விட்டு பாமக விலகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

அதற்கேற்ப இன்றைய கூட்டத்தில் அதிமுகவுடனான கூட்டணியை முடித்துக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.

அதிமுக உறவை முறித்துக் கொள்வதற்கான காரணத்தை விளக்கி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கொலை வழக்கில் ராமதாஸ் குடும்பத்தினர்...

அதில் கூறப்பட்டிருப்பதாவது...

2006ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ், பரசுராமன் (ராமதாஸின் மருமகன்), சீனிவாசன் (சகோதரர்) மற்றும் சீனிவாசனின் பேரன் உள்ளிட்டோரின் பெயர்களை சேர்க்க வேண்டும் என்று கோரி அதிமுக முன்னாள் அமைச்சரும், முக்கியஸ்தருமான சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது பொய்யான குற்றச்சாட்டு. இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் பலமுறை எடுத்துக் கூறப்பட்டது. இருப்பினும் அதையும் மீறி சி.வி.சண்முகம் தனது மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் எம்.பி. தன்ராஜ் ஆகியோர் நேரடியாக கொடநாடு சென்று அதிமுக பொதுச் செயலாளரை நேரில் சந்தித்தும் இதுகுறித்து முறையிட்டனர். அவரது கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

இருப்பினும் அது வாபஸ் பெறப்படவில்லை. இந்த நிலையில் அதிமுகவைச் சேர்ந்த ஒரு முக்கியப் பிரமுகர், முன்னாள் அமைச்சரின் செயலால் அசாதாரண நிலைமை ஏற்பட்டு விட்டது. அவரது செயல் கடுமையான கண்டனத்துக்குரியதாக மாறியுள்ளது.

இதற்கு மேலும் அதிமுகவுடன் தோழமை உறவை தொடர முடியாது என்று பாமக செயற்குழு கருதுகிறது. மேலும், அந்தக் கட்சியுடன் தொடர்ந்து கூட்டணியை நீடிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் செயற்குழு கருதுகிறது.

இனியும் ஒரு நிமிடம் கூட இந்த உறவு நீடிக்கக் கூடாது என்று அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் ஒரு மனதாக கருதுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் டாக்டர் ராமதாஸ்.

2வது முறையாக விலகிய பாமக...

அதிமுகவுடனான உறவை பாமக முறித்துக் கொள்வது இது 2வது முறையாகும். கடந்த 2006ல் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது திமுகவுடன் கூட்டணி வைத்து சந்தித்தார் டாக்டர் ராமதாஸ். ஆனால் போகப் போக திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசி வந்ததால், கடுப்பான திமுக, பாமகவை கூட்டணியை விட்டு நீக்கியது.

இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் மீண்டும் திமுகவுடன் கூட்டணி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார் டாக்டர் ராமதாஸ்.

பாமகவுக்கு புதுச்சேரி உள்பட ஏழு சீட்களை ஒதுக்கியது அதிமுக. ஆனால் ஏழிலும் பாமக தோல்வியைத் தழுவியது.

மதிமுக மட்டுமே பாக்கி...

ஏற்கனவே சட்டசபை இடைத் தேர்தலுடன் அதிமுகவுடனான 'நல்லுறவிலிருந்து' விலகி விட்டன இடதுசாரி கட்சிகள் இரண்டும். தற்போது பாமகவும் போய் விட்டது. இந்த நிலையில் மிஞ்சியிருப்பது மதிமுக மட்டுமே.

இதனால் அதிமுக நிலவரம் பெரும் கலவரமாகியுள்ளது.

ராமதாஸை சந்தித்த நெடுமாறன்

முன்னதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்று டாக்டர் ராமதாஸை சந்தித்துப் பேசினார்.

தஞ்சையிலிருந்து செங்கல்பட்டு வந்த அவர் வழியில் தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்று ராமதாஸை சந்தித்து பேசினார். இலங்கைப் பிரச்சினை தொடர்பாக அவர்கள் ஆலோசித்ததாக தெரிகிறது.

Saturday, October 3, 2009

அதிமுக உறவு குறித்து நிர்வாகக் குழு முடிவெடுக்கும்- ராமதாஸ்

சென்னை: அதிமுக கூட்டணியில் நீடிப்பதா இல்லையா என்பது குறித்து பாமக நிர்வாகக் குழு கூடி முடிவெடுக்கும் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

தமிழ்நாடு உழவர் பேரியக்கம் மற்றும் பசுமைத் தாயகம் அமைப்புகளின் சார்பாக தமிழ்நாட்டில் உழவர்களுக்கான கொள்கை அறிக்கையை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னையில் இன்று வெளியிட்டார்.

ஜெ.வுடன் போனில் பேசினேன்...

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

அதிமுக கூட்டணியில் பாமக தொடர்வதா என்பது குறித்தும், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலைகள், நிலைப்பாடுகள் குறித்தும் பாமக நிர்வாகக் குழு கூடி முடிவெடுக்கவுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு நான் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்கவில்லை என்று தொடர்ந்து பல்வேறு ஏடுகளில் செய்திகள் வெளியாகி வருகின்றன. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் சார்பில் தலா ஒருவர் வெற்றி பெற்றதால் அவர்கள் தங்களது எம்பிக்களை அறிமுகம் செய்துவைக்க ஜெயலலிதாவை சந்தித்தார்கள். எங்கள் கட்சியின் சார்பில் யாரும் வெற்றி பெறாததால் நாங்கள் அவரை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

இதனை வைத்து ஜெயலலிதா என்னை சந்திக்க மறுப்பதாக தொடர்ந்து பொய்ச்செய்திகள் வெளியிடப்படுகின்றன. தயவு செய்து யாரும் இதுபோன்ற செய்திகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தேர்தல் முடிந்ததும் நானும், ஜெயலலிதாவும் தொலைபேசியில் பேசிக்கொண்டோம்.

ஜெயராம் ரமேஷிடம் கருணாநிதி பேசட்டும்...

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ், கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கவில்லை என்றும், அது தொடர்பான ஆதாரம் இருந்தால் தாருங்கள் என்றும் முதலமைச்சர் கருணாநிதி கேட்டுள்ளார்.

அவர் தொலைபேசி மூலம் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷை கேட்டு இதற்கான விவரங்களை அறியலாம். அல்லது மத்தியில் உள்ள தமிழக அமைச்சர்கள், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாகவும் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

அதைவிட்டுவிட்டு நம்மிடம் ஆதாரம் கேட்கிறார் கருணாநிதி. பல்வேறு ஊடகங்களில் இதற்கான அனுமதி அளித்து ஜெயராம் ரமேஷ் தெரிவித்ததாக செய்திகள் வெளி வந்துள்ள நிலையில், தமிழக அரசு இப்படிப்பட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

வேவு பார்க்கும் இலங்கை தூதர்...

கச்சத்தீவு தொடர்பாக தமிழகத்தில் உள்ள இலங்கை துணைத் தூதர் தெரிவித்துள்ள கருத்துக்கள் கண்டிக்கத்தக்கவை.

இலங்கை தமிழர்களை காட்டிக்கொடுப்பதற்கு கருணா, பிள்ளையான் இருப்பது போல இங்கு அவர்களின் பிரதிநிதியாக வேவு பார்ப்பதற்கு இலங்கை துணைத் தூதர் தேவையில்லை. அவரை மத்திய அரசு வெளியேற்ற வேண்டும். ஆனால் அப்படி அவர்கள் வெளியேற்ற மாட்டார்கள்.

தமிழர் உள்ளங்கள் கனன்று கொண்டிருக்கிறது...

டெல்லியில் இலங்கை தூதரகம் தாக்கப்பட்டது தமிழர்களுடைய கோபத்தின் வெளிப்பாடாகும். அனைத்து தமிழர்களின் உள்ளங்களிலும் இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பான கோபம் எரிமலையாக கனன்று கொண்டு இருக்கிறது.

நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தலில் பாமக போட்டியிடாது. அந்த இடங்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம் என்றார் ராமதாஸ்.

Thursday, September 24, 2009

சமச்சீர் கல்வி முறையை கொண்டு வராவிட்டால் புரட்சி வெடிக்கும்- ராமதாஸ்

சென்னை: தமிழக அரசு சமச்சீர் கல்வியை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் புரட்சி வெடிக்கும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் துணை வேந்தர் முத்துகுமரன் தலைமையிலான குழு அளித்துள்ள சமச்சீர் கல்வி பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி பாமகவின் தமிழக மாணவர் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தை தொடங்கி வைத்து டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,

தமிழக அரசு அறிவித்துள்ள சமச்சீர் கல்வி மாணவர்களுக்கும் புரியவில்லை; பொதுமக்களுக்கும் புரியவில்லை. மற்றவர்கள் யாருக்கு புரியாவிட்டாலும் முதலமைச்சர் கருணாநிதிக்கு இது புரிந்திருக்கும்.

எங்களை பொறுத்தவரை முன்னாள் துணை வேந்தர் முத்துகுமரன் தலைமையிலான குழு அளித்துள்ள பரிந்துரைகளின்படி சமச்சீர் கல்வியை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதுதான் கோரிக்கை.

ஆனால் தமிழக அரசு இப்போது அறிவித்துள்ள சமச்சீர் கல்வி சமூக நீதிக்கு எதிரானது. இது சமச்சீர் கல்வி அல்ல; சமரச கல்விதான். சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் பல்வேறு அறிஞர் பெருமக்களும் முத்துகுமரன் குழு அறிக்கையை முழுமையாக அமல்படுத்தி சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றுதான் வலியுறுத்தி வந்தனர்.

சமச்சீர் கல்வி என்பது பொது பள்ளி திட்டம், அருகமை பள்ளி திட்டம், தாய்மொழி கல்வி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இதுதான் உலக நடைமுறை.

ஏழை, நடுத்தர, பணக்கார வர்க்கம் என்று பிரித்தாளும் கல்வி முறை கூடாது. இதனை நாங்கள் மட்டும் சொல்லவில்லை. கோத்தாரி கமிஷன் உள்ளிட்ட பல்வேறு கமிஷன்களும் அறிக்கைகளை அளித்துள்ளன. அவை நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டுள்ளன. ஆயினும் அத்தகைய சமச்சீர் கல்வி முறை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

தமிழகத்தை பொறுத்தவரை ஒரு லட்சம் பேர்தான் மெட்ரிக்குலேஷன் கல்வி முறையில் தேர்வு எழுதியிருக்கிறார்கள். மற்ற மாணவர்கள் தாய் மொழியில்தான் பயின்றிருக்கிறார்கள்.

இந்த அரசுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் முக்கியமா? 10 லட்சம் மாணவர்கள் முக்கியமா? என்று எண்ணி பார்க்க வேண்டும். அரசின் இத்தகைய போக்கு தொடர்ந்தால் தமிழ்நாட்டில் மிகப் பெரிய கல்வி புரட்சி வெடிக்கும். புரட்சி என்றதும் ஏதோ இந்த ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்று முதல்வர் கருணாநிதி எண்ண வேண்டாம்.

மாணவர்களையும், பெற்றோர்களையும், பொதுமக்களையும் பெருமளவில் திரட்டி தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள சமச்சீர் கல்வியின் குறைபாடுகளை புரிய வைத்து மிகப் பெரிய போராட்டங்களை நடத்துவோம்.

முத்துக்குமரன் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் சமச்சீர் கல்வி முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் வரை எங்களுடைய போராட்டங்கள் ஓயாது.

எங்களை பொறுத்தவரை தரமான கல்வி, கட்டாய கல்வி, சுமையற்ற கல்வி என எல்லா தரப்பு குழந்தைகளுக்கும் சமச்சீரான கல்வி வழங்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை. இத்தகைய சமச்சீர் கல்வியை 12 ஆம் வகுப்பு வரை தமிழக அரசு எந்தவித கட்டணமும் இன்றி இலவசமாக வழங்க வேண்டும் என்றார் டாக்டர் ராமதாஸ் .

Tags: dr. ramadoss, uniform education system, agitations, warning, டாக்டர்

Monday, September 21, 2009

ஈழத் தமிழர் அவலம் நீடித்தால் மத்திய அரசு இலங்கையைப் புறக்கணிக்க வேண்டும்- ராமதாஸ்

சென்னை: ஈழத் தமிழர்கள் மீதான அவலங்கள் இலங்கையில் நீடித்தால், அங்கு முதலீடு செய்ய மாட்டோம் என மத்திய அரசு உறுதியுடன் அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

உலக தமிழர்களின் ஓர் அங்கமான ஈழத்தமிழர்களின் அவலங்கள் அங்கே போர் முடிந்ததற்கு பின்னரும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிங்கள பேரினவாத அரசு நடத்திய இனஅழிப்பு போரில் பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் கொன்று ஒழிக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சிய தமிழர்கள் வாழ்வுரிமை பறிக்கப்பட்டவர்களாக முள் கம்பி வேலிகளுக்குள் அமைக்கப்பட்டுள்ள வதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு சிறுக சிறுக கொல்லப்பட்டு வருகிறார்கள். அங்கிருந்து சிறை முகாம்களுக்கு மாற்றப்பட்டவர்களும் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு வருகின்றனர்.

மனித உரிமைகள் குறித்தும், இன விடுதலை குறித்தும் உரக்க பேசுகின்ற நாடுகளும், அமைப்புகளும் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் மட்டும் அமைதி காக்கின்றன. அண்டை நாடான இந்தியாவும், இந்தியாவில் உள்ள தமிழர்களும் இந்த அவலங்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் இதற்கெல்லாம் காரணம் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை.

சிங்கள பேரினவாத அரசின் தமிழின அழிப்பு போரை தடுத்து நிறுத்துவதற்குத்தான் முடியவில்லை. இப்போது அங்கே போர் முடிந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், போருக்கு பின்னால் தொடர்கின்ற அவலங்களையாவது தடுத்து நிறுத்துவதற்கு முன்வாருங்கள் என்று உலகெங்கும் பரவிக் கிடக்கிற தமிழர்கள் ஏங்கி நிற்கிறார்கள். எங்கேயாவது மனித குலம் துன்புற்றால் துடித்துப் போகிற கிறிஸ்தவர்கள், இப்போது இதற்கு வழிகாட்டியிருக்கிறார்கள்.

இலங்கையில் வதை முகாம்களில் ஆடு, மாடுகளை போன்று அடைத்து அடக்கி ஒடுக்கப்பட்டு வரும், ஈழத் தமிழர்கள் உடனடியாக அவர்களது சொந்த இருப்பிடங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அவர்களை பின்பற்றி தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஈழத்தமிழர்களின் அவலங்களை துடைக்க குரல் கொடுக்க முன்வர வேண்டும்.

மனித உரிமைகளுக்கு எதிராக முகாம்களில் அடைத்து வதைக்கப்பட்டு வருகிற 3 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை, விடுதலை செய்து சொந்த ஊர்களுக்கு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் இந்தியா கண்டிப்பான குரலில் எச்சரிக்க வேண்டும் என்று, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே நிலையில் வலியுறுத்த வேண்டும்.

இந்திய அரசோ அல்லது இந்திய தொழில் நிறுவனங்களோ இலங்கையில் எத்தகைய தொழில் முதலீடுகளும் செய்யமாட்டோம் என்று அறிவிக்க செய்ய வேண்டும்.

இந்திய அரசு இப்படியெல்லாம் செயல்படுவதற்கு எத்தகைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து சிந்தித்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரும் இந்த கடமையை அவசரகதியில் செயல்பட முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்

Monday, September 14, 2009

கவனிக்கிறோம், நடவடிக்கை எடுக்கிறோம்' என்று சொல்லாதீர்கள்..-ராமதாஸ்

சென்னை: இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடிக்க கூடாது என்ற உத்தரவைமத்திய அரசுவாபஸ் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க உள்ள மரபுரிமையின்படி அங்கே செல்லும்போது உயிருக்கும், உடமைக்கும்பாதுகாப்புவேண்டும் என்று வலியுறுத்தி 3 வார காலமாக வேலைநிறுத்தம் மேற்கொண்ட ராமேஸ்வரம் பகுதிமீனவர்கள் மாநில அரசு அளித்த வாக்குறுதியை நம்பி போராட்டத்தை கைவிட்டனர்.

அதைத் தொடர்ந்து மீன்பிடிக்கச் சென்ற முதல் நாளிலேயே இலங்கை கடற்படையினரால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்டமீனவர்கள்காயம் அடைந்துள்ளனர்; அவர்களது 3 விசைப்படகுகள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன.மத்திய அரசு்- மாநில அரசும் தலையிட்டு தங்களது உயிருக்கும், உடமைக்கும்பாதுகாப்புஅளிப்பதற்கானநடவடிக்கைை மேற்கொள்ள வேண்டும் என்று கண்ணீர்மல்க கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது முதல் கடந்த 40 ஆண்டு காலமாக இந்தக் கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. இலங்கை கடற்படையினரின் அத்துமீறியநடவடிக்கைளால் நூற்றுக்கணக்கில் நமதுமீனவர்கள்உயிரிழந்திருக்கிறார்கள்.

இத்தகைய தாக்குதல்கள் நடைபெறும் போதெல்லாம் மத்திய அரசு க்கு மாநில அரசு கடிதம் எழுதுவதும், `கவனிக்கிறோம் -நடவடிக்கைஎடுக்கிறோம்' என்று மத்திய அரசு பதில் கடிதம் எழுதுவதும் ஒரு மரபாக பின்பற்றப்பட்டு வருகிறது.

இனி, கடிதம் எழுதுவது மட்டுமே போதாது. கச்சத்தீவு கடல் பகுதியில் நமது மீனவர்களுக்கு பரம்பரையாக இருந்து வந்த மீன்பிடிக்கும் உரிமை நிலைநிறுத்தப்பட்டாக வேண்டும். இதற்கு 1976ம் ஆண்டில் இந்திய அரசு பிறப்பித்திருக்கும் தடை ஆணை திரும்பப்பெறப்பட வேண்டும்.

1967ம் ஆண்டில் பதவிக்கு வந்ததும் தமிழகத்தின் முக்கியப் பிரச்சனைகளுக்காக ``கோரிக்கை நாள்'' கடைப்பிடிக்க ஆணையிட்டவர் அண்ணா. அவரது நூற்றாண்டு நிறைவு விழாவை கொண்டாடும் இந்த சமயத்தில், தமிழக மீனவர்களின் உயிருக்கும், உடமைக்கும் நிரந்தரப் பாதுகாப்பை தேடித்தரும்நடவடிக்கைளை மேற்கொண்டு இந்திய அரசிடம் அதற்கான உத்தரவாதத்தை பெற்று அண்ணாவின் நினைவிற்கு காணிக்கையாக்க வேண்டும்.

நமது மீனவர்களின் நலனை பாதுகாப்பதற்காக மட்டுமல்லாது, கச்சத்தீவு தொடர்ந்து இலங்கை வசம் இருந்தால், அதன்மூலம் நமது எதிரி நாடுகளிடம் இருந்து நமது பாதுகாப்பிற்கு அதிலும் குறிப்பாக தென்னிந்திய மக்களின் பாதுகாப்பிற்கு ஏற்பட உள்ள அச்சுறுத்தலையும், ஆபத்தையும் உரிய முறையில் எடுத்துக்கூறி கச்சத்தீவு ஒப்பந்தத்தை முழுமையாக மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று வாதாட வேண்டும்.

அதற்கு முதல்படியாக 1976ம் ஆண்டில் இந்திய அரசு பிறப்பித்த தடை ஆணையை விலக்கிக் கொள்ளச் செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கை களை மாநில அரசும், முதல்வரும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்

Sunday, September 13, 2009

கிராமங்கள்தோறும் நர்சரிப் பள்ளிகளை அரசு தொடங்க வேண்டும் :ராமதாஸ்

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்க ஒருவழியாக அப்பாயின்மெண்ட் தரப்பட்டதையடுத்து அவரை சந்தித்தார் பாமக தலைவர் ஜி.கே. மணி.

மக்களவைத் தேர்தலுக்குப் பின் அதிமுக- பாமக தலைவர்களிடையே எந்த சந்திப்பும் நடக்கவில்லை.

அதே போல நாங்கள் சந்திக்கும் இடத்தில் அதிமுக தலைமை இல்லை என்று ஏற்கனவே இடதுசாரிகள் வெளிப்படையாகக் கூறியுள்ளன. அதாவது சந்திக்க முயன்றும் முடியவில்லை என்பதையே அந்தக் கட்சிகள் இவ்வாறு கூறியுள்ளன.

இந் நிலையில் பாமகவின் முக்கிய கோரிக்கைகளான சமச்சீர் கல்வி, வேளாண்மை சட்டத் திருத்தம் ரத்து ஆகியவற்றை முதல்வர் கருணாநிதி ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதையடுத்து முதல்வரை பாராட்ட ஆரம்பித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அவரை நேரில் சந்தித்து தனது பாராட்டுக்களைத் தெரிவிக்கவுள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந் நிலையில் தான் இதுவரை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யாரையும் சந்திக்காமல் இருந்து வந்த ஜெயலலிதா, தன்னை சந்திக்க ஜி.கே.மணிக்கு அப்பாயின்மெண்ட் கொடுத்தார்.

இதையடுத்து நேற்று கொடநாடு சென்ற மணி ஜெயலலிதாவை சந்தித்து அரை மணி நேரம் பேசிவிட்டுத் திரும்பினார். இச்சந்திப்பின்போது பா.ம.க. முன்னாள் எம்.பி. கோ.தன்ராஜும் உடனிருந்தார். இது மரியாதை நிமித்தமாக நடைபெற்ற சந்திப்பு என்று அதிமுகவும், பாமகவும் கூறியுள்ளன.

மக்களவைத் தேர்தலுக்குப் பின் அதிமுக - பாமக தலைவர்களிடையே எந்த சந்திப்பும் நடக்காத நிலையில் 4 மாதங்களுக்குப் பின் திடீரென இந்தச் சந்திப்பு நடந்துள்ளதற்கு ஜெயலலிதா வின் பயமே காரணம் என்று கருதப்படுகிறது.
பாமக மீண்டும் திமுக பக்கமாக போய்விடுமோ என்ற அச்சம் காரணமாகவே இச் சந்திப்பு நடந்ததாகத் தெரிகிறது.

அரசு குழு அமைத்தால் பாமக பங்கேற்கும்:

இந் நிலையில் தமிழகத்தில் கிராமங்கள்தோறும் நர்சரிப் பள்ளிகளை அரசு தொடங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் கல்வியாண்டு முதல் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்படும் என்றும் 2011-12-ம் ஆண்டில் மற்ற வகுப்புகளுக்கு இது விரிவுபடுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பிரீகேஜி, எல்கேஜி, யுகேஜி ஆகிய 3 ஆண்டு பள்ளி முன்பருவக் கல்வியை வசதி படைத்தவர்களின் குழந்தைகள் பெறுகின்றனர். எனவே மழலையர் பள்ளிகளை கிராமங்கள்தோறும் அரசாங்கமே தொடங்கி நடத்த வேண்டும்.

1999ல் தமிழ் பயிற்று மொழி குறித்த முத்துக்குமரன் குழுவின் அறிக்கையை அப்படியே நடைமுறைப்படுத்த வேண்டும். இது குறித்து அனைத்துக் கட்சி, கல்வியாளர்கள் குழுவை அரசு அமைத்தால் பாமக அதில் பங்கேற்கும் என்றார்.

Saturday, September 12, 2009

சமச்சீர் கல்வி -பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

சேலம்: சமச்சீர் கல்வி முறையை கொண்டு வந்த முதல்வர் கருணாநிதியை பாராட்ட நான் கடமைப்பட்டுள்ளேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

சேலத்தில் நிருபர்களிடம் பேசிய அவர்,

சமச்சீர் கல்வி வர வேண்டும் என பல வருடங்களாக சொல்லி வருகிறேன். இப்போது தமிழக அரசு 1-ம்வகுப்பு, 6-ம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒரே வகையான, தரமான கல்வியை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.

பொது பாடத் திட்டம், பொது பாட நூல்கள் மட்டும் போதாது. சமமான, தரமான கல்வியை செயல்படுத்த பள்ளிக்கூட வசதிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கை, அவர்களது திறமை, பாடநூல்கள் தேர்வு முறை, பள்ளி நிர்வாகம், பள்ளிக் கல்வி நிர்வாகம் ஆகிய அனைத்தும் சரியாக இருக்க வேண்டும்.

பெருமபாலான பள்ளிகளில் போதிய கட்டிடங்கள் இருப்பது இல்லை. ஆய்வங்களில் கருவிகள் இல்லை. வசதிப்படைத்தவர்களின் குழந்தைகள் கற்கும் பிரிகேஜி, எல்.கே.ஜி, யூ.கே.ஜி. படிப்பை அரசே கிராமப்புற குழந்தைகளுக்கும் கொண்டு வந்து தரமான கல்வியை தரவேண்டும் என்றார்.

சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து மற்ற கட்சியினருடன் முதல்வர் கருணாநிதி கருத்து கேட்க உள்ளதாக கூறுகிறார்களே. அப்படி நடந்தால் அதில் நீங்கள் பங்கேற்பீர்களா என்று கேட்டதற்கு,

கல்வித்துறை நிபுணர்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களிடம் முதல்வர் கலைஞர் கலந்து பேசி அதை உள்வாங்கி யோசனைகளை நிறைவேற்ற வேண்டும். இந்த சமச்சீர் கல்வி பணக்காரர்கள்-ஏழைகளுக்கு இடையிலான பாகுபாட்டை குறைத்துவிடும்.

கல்வி கொள்ளைக்கு வழி வகுக்காது. ஆலோசனை கூட்டம் கூட்டி எனக்கும் அழைப்பு அனுப்பினால் முதல்வரை சந்தித்து பேசி எனது கருத்தை கூறுவேன். சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டு வந்ததற்காக நிச்சயம் முதல்வரை பாராட்ட நான் கடமைப்பட்டுள்ளேன் என்று பதிலளித்தார் ராமதாஸ் .

Friday, September 11, 2009

சென்னை: புதிதாக கொண்டுவரப்பட்ட விவசாய சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார

சென்னை: புதிதாக கொண்டுவரப்பட்ட விவசாய சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

சமீபத்தில் தமிழக அரசு கொண்டு வந்த தமிழ்நாடு மாநில வேளாண்மை சட்டம்-2009 விவசாயிகளுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என பல்வேறு விவசாய அமைப்புகளும் பொது நல ஆர்வலர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இந்த சட்டத்துக்கு எதிராக ராமதாஸ் சென்னையில் ஒரு கருத்தரங்கமும் நடத்தினார். பன்னாட்டு நிறுவனங்களின் நெருக்கடியால் வேளாண் தொழிலில் இருந்து விவசாயிகளை வெளியேற்றும் நடவடிக்கையாகவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அதில் பேசியவர்கள் கூறினர்.

மேலும் இந்தச் சட்டம் இந்தியாவின் பாரம்பரிய விவசாய முறைகளுக்கு எப்படியெல்லாம் சாவு மணி அடிக்கும் என்றும் விளக்கினர்.

முதல்வர் அறிக்கை..

இதையடுத்து இந்த சட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதல்வர் அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

பேரவையில் இந்தச் சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட போதோ, பிறகு விவாதிக்கப்பட்ட போதோ எதிர்க்கட்சிகளின் சார்பிலோ, தோழமைக் கட்சிகளின் சார்பிலோ யாரும் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில், அந்த மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

எனினும், பாரம்பரிய விவசாயம் தொடர்ந்து காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுள்ள திமுக அரசு விவசாயப் பெருங்குடி மக்களின் எண்ணங்களுக்கும், பத்திரிகையாளர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளித்திடும் வகையில் `தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டம்' நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

ராமதாஸ் வரவேற்பு:

இதை வரவேற்றுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டம் நிறுத்தி வைக்கப்படுகிறது என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருக்கிறார். தமிழகத்தின் பாரம்பரியமான விவசாயத்திற்கு எதிரானதாகவும், நமது உழவர்களுக்குச் சொந்தமான விளை நிலங்களெல்லாம் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளுக்கு மாற தூண்டுகோலாகவும் அமையும் என்ற காரணத்தால், இந்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் நானும், அதில் பங்கேற்ற இதர தலைவர்களும் வலியுறுத்தினோம்.

பசுமைத் தாயகம் மற்றும் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் போன்ற அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கத்தில் வலியுறுத்தப்பட்ட கருத்துகளும், முன் வைக்கப்பட்ட விவாதங்களும் நியாயமானவை என்பதை உணர்ந்து இப்போது, இந்தச் சட்டத்தை நிறுத்தி வைக்க முதல்வர் முன்வந்திருக்கிறார்.

எதிர்காலத்தில், இது போன்ற முக்கிய சட்ட மசோதாக்களை கொண்டு வரும் போது, பேரவையிலும், பேரவைக்கு வெளியிலும் விரிவான விவாதங்களை நடத்துவதற்கு அரசு முன்வர வேண்டும். அப்படி விவாதங்கள் நடைபெறும் போது தெரிவிக்கப்படும் கருத்துகளையும், பரிந்துரைகளையும் உள்ளடக்கி சட்ட மசோதாக்களை கொண்டு வர வேண்டும்.

அப்படி கொண்டு வந்தால், இது போன்ற இடையூறுகளை தவிர்க்க முடியும். பாராளுமன்ற ஜனநாயகத்திலும், விவாதங்களிலும் பெரும் ஈடுபாடு வைத்துள்ள முதல்-அமைச்சர் இதனை நிச்சயம் பரிசீலிப்பார் என்ற நம்பிக்கையுடன் இப்போது, போதிய விவாதமின்றி நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்ற அறிவிப்பை வரவேற்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கண்டனம் :

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வேளாண் மன்றச் சட்ட முன்வடிவின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் டெல்லிபாபு, அவருக்கு அனுமதிக்கப்பட்ட ஒரு சில மணித்துளிகளைப் பயன்படுத்தி கட்சியின் சார்பில் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். இந்த உண்மையைத் திரையிடுவது போன்று, முதல்வரின் அறிக்கை அமைந்துள்ளது கண்டனத்துக்கு உரியது என்று கூறியுள்ளார்

Thursday, September 10, 2009

தமிழ்நாட்டில் தமிழனுக்கு இடம் இருக்காது-ராமதாஸ்

சென்னை: இன்னும் 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தமிழனுக்கு இடம் இல்லை என்ற நிலை உருவாகும். சென்னையில் தற்போது தமிழனுக்கு சொந்தமாக இடம் இல்லை. வெளி மாநிலக்காரர்கள் நிலத்தை வாங்கிப் போட்டிருக்கிறார்கள். சிற்றூர் முதல் கிராமம் வரை விவசாய நிலங்களை வாங்கிப் போட்டு அதை ஏதோ ஒரு ஆங்கில பெயரில் நகராக மாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

தமிழ்நாடு உழவர் பேரியக்கம், தாளாண்மை உழவர் இயக்கம், பசுமைத் தாயகம், காஸா ஆகிய அமைப்புகளின் சார்பில் `தமிழ்நாடு வேளாண்மை மன்ற சட்டமும் மரபு வேளாண்மை அறிவுரிமையும்' என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் நடந்தது.

உழவர் பேரியக்கத்தின் நிறுவனரான ராமதாஸ் பேசுகையில்,

தமிழ்நாடு மாநில வேளாண்மை சட்டம்-2009 தேவையில்லாதது, அந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை இந்தக் கருத்தரங்கில் பேசியவர்கள் எடுத்துரைத்தனர்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து, இந்த சட்டத்தினால் ஏற்படும் தீமையை பற்றி அவர்களுக்கு விளக்குவதற்காக ஒரு கருத்தரங்கிற்கு விவசாய சங்கங்கள் ஏற்பாடு செய்யலாம். வருகிற சட்டமன்ற உறுப்பினர்கள் வரட்டும்.

அடுத்ததாக, விவசாய பிரதிநிதிகள் சேர்ந்து முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து, இந்த சட்டத்தில் உள்ள குறைபாடுகள், தீமைகள், அந்த சட்டத்தால் வேளாண் சமுதாயம் பாதிக்கப்படுவது பற்றி விவாதிக்கலாம். அவரிடம் மனு கொடுக்கலாம்.

அதற்கும் தீர்வு ஏற்படாமல் போனால், அடுத்ததாக அனைத்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து சென்னையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த வேண்டும்.

இன்னும் 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தமிழனுக்கு இடம் இல்லை என்ற நிலை உருவாகும். சென்னையில் தற்போது தமிழனுக்கு சொந்தமாக இடம் இல்லை. வெளி மாநிலக்காரர்கள் நிலத்தை வாங்கிப் போட்டிருக்கிறார்கள். சிற்றூர் முதல் கிராமம் வரை விவசாய நிலங்களை வாங்கிப் போட்டு அதை ஏதோ ஒரு ஆங்கில பெயரில் நகராக மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
எல்லாம் பாலைவனமாகிக் கொண்டிருக்கிறது. சிறப்பு பொருளாதார மண்டலம், ரியல் எஸ்டேட் என்ற பெயரில் விளை நிலங்கள் மாற்றப்படுகின்றன. அதற்காகவும் நாம் போராட வேண்டியுள்ளது. இன்னும் நாம் போராட வேண்டிய தளங்கள் ஏராளமாக உள்ளன என்றார்.

இயற்கை விவசாயத்தை அழித்து விட்டனர்:

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசுகையி்ல், அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை மன்ற சட்டத்தின்படி வேளாண் பட்டப்படிப்பு முடித்து ரூ. 1000 கட்டி, அந்த மன்றத்தில் உறுப்பினராக சேர்ந்தால்தான் விவசாயம் பற்றிய ஆலோசனைகள் வழங்க முடியும். வேறு யாரும் ஆலோசனைகள் வழஙகினால் முதல் தடவை ரூ.5,000மும், 2வது தடவை ரூ.10,000 மற்றும் 6 மாத சிறை தண்டனையும் விதிக்க வழி உள்ளது. இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

ஏற்கனவே பசுமைப்புரட்சி என்ற பெயரில் இயற்கை வேளாண்மையை அழித்து விட்டனர். வாழ்க்கை ஆதாரங்களை அழிக்க தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்கிறார்கள் என்றார்.

விவசாயிகளே இல்லாத நிலை உருவாகும்:

உழவர் பாதுகாப்பு மற்றும் உயிரித் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியர் தேவிந்தர் சர்மா பேசுகையில், இந்த வேளாண் சட்டம் காரணமாக 2020ம் ஆண்டு தமிழகத்தில் விவசாயிகளே இல்லை என்ற நிலை உருவாகும்.

விவசாயிகளுக்கு வாழ்வா? சாவா? என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கும் இந்த சட்டத்தை எதிர்த்து போராட வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின் நெருக்கடியால் வேளாண் தொழிலில் இருந்து விவசாயிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது என்றார்.

எம்எல்ஏக்களுக்கு எதுவுமே தெரியவில்லை:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மகேந்திரன் பேசுகையில்,

தமிழக சட்டப்பேரவையில் கடைசியாக நடந்த கூட்டத் தொடரில் ஒரே நாளில் 20க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் எவ்வித விவாதமுமின்றி நிறைவேற்றப்பட்டன. இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவது போல் உள்ளது.

குறிப்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு வேளாண்மை மன்றச் சட்டம் குறித்து விவாதம் நடைபெறாததால், அச்சட்டத்தில் உள்ள அம்சங்கள் குறித்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதுவுமே தெரியவில்லை. பேரவை உறுப்பினர்களுக்கு எதுவுமே தெரியாத நிலையில் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டது பெரும் மோசடியாகும் என்றார்.

சாவு மணி சட்டம்:

தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில், இந்தச் சட்டம் இந்தியாவின் பாரம்பரிய விவசாய முறைகளுக்கு சாவு மணி அடிக்கும் சட்டமாகும். இந்திய விவசாய முறை என்பது 5,000 ஆண்டு கால பாரம்பரிய அறிவின் தொகுப்பாகும். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நெல் வகைகளை உருவாக்கிய பெருமைக்குரியவர்கள் நம் விவசாயிகள்.

அத்தகைய பாரம்பரிய அறிவை நாம் ஒரே நாளில் குப்பைத் தொட்டியில் தூக்கி வீசிவிட முடியாது. பாரம்பரிய விவசாய அறிவின் அடிப்படையில்தான் விவசாயத் துறையை நவீனப்படுத்த வேண்டும். மாறாக பன்னாட்டு பணக்கார நிறுவனங்களின் நலன்களுக்காக, ஒட்டுமொத்த இந்திய விவசாயத்தையும் காவு கொடுப்பதை அனுமதிக்க முடியாது என்றார்.

சட்டம் நிறுத்தி வைப்பு-கருணாநிதி:

இந் நிலையில் விவசா‌யிக‌ளி‌ன் கரு‌த்து‌க்களுக்கு ம‌தி‌ப்பளித்து த‌மி‌ழ்நாடு வேளா‌ண்மை ம‌ன்ற‌ச் ச‌ட்ட‌ம்-2009யை ‌நிறு‌த்‌தி வை‌ப்பதாக முதல்வர் கருணா‌நி‌தி அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

Saturday, September 5, 2009

நெல்லை பாமக பிரமுகரை துப்பாக்கியால் சுட்டவர் கோவையில் கைது

நெல்லை: நெல்லை பாமக பிரமுகரை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி நேற்று கோயம்புத்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை செட்டிகுளத்தை சேர்ந்தவர் நிக்சன். இவர் பாமக மாவட்ட தலைவராக இருந்து வருகிறார். கடந்த மாதம் 3ம் தேதி நான்கு பேர் கொண்ட கும்பல் இவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிவிட்டது.

இதையடுத்து பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை துவக்கினர். இதை தொடர்ந்து எம்கேபி நகர் அசரியா, ஸ்டீபன், தென்கலம் இஸ்ரவேல், ஆகியோரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளான பாளையங்கோட்டை செட்டிகுளத்தை சேர்ந்த ரவுடி பாட்ஷா என்ற ஆரோக்கியராஜ் மும்பை தப்பியோடிவிட்டார்.

மற்றொரு குற்றவாளி ராமசந்திரன் எங்கு போனார் என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையி்ல் கோயம்புத்தூரில் கொள்ளையில் ஈடுபட்ட ராமசந்திரனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஓப்படைத்தனர்.

இதையடுத்து கோயம்புத்தூர் போலீசார் இது குறித்து நெல்லை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவரை அழைத்து வர நெல்லை போலீசார் கோயம்புத்தூர் விரைந்துள்ளனர்

Saturday, August 29, 2009

ராஜப‌‌க்சே, பொ‌‌ன்சேகா ‌மீது போ‌ர்‌க்கு‌ற்ற வழ‌க்கு: ராமதாஸ் வ‌லியு‌றுத்த‌ல்

தமிழ் இளைஞர்களை நிர்வாணமாக்கி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் பதறவைக்கும் காட்சிகள் வெளியிட‌ப்ப‌ட்டிரு‌ப்பத‌ன் மூல‌ம் அதிபர் ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே, தளபதி பொன்சேகா ஆகியோர் மீது போர்க்குற்ற வழக்குகள் தொடர ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வலியுறுத்த முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி வே‌ண்டுகோ‌ள் வை‌க்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கே‌ட்டு‌க்கொ‌ண்டு‌ள்ளா‌ர்.


FILEவிழு‌ப்புர‌ம் மாவ‌ட்ட‌ம், திண்டிவனம் தைலாபுரத்தில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், சமச்சீர் கல்வி அமலாக்கம் கூறித்து முதலமை‌ச்ச‌ர் கருணாநிதியின் அறிவிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீர்க்குமிழி போல் விரைவிலேயே கலைந்து விட்டது.

சமச்சீர் கல்வி என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒரு கொள்கை முடிவு. அதன்படி கல்விமுறையில் மிகப்பெரிய மாற்றங்களை செயல்படுத்த முயலும்போது அதன் தாக்கம் எந்தவொரு பிரிவினருக்கும், பகுதியினருக்கும் பாதகம் ஏற்படுத்தி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் முக்கியமான கடமையாகும்.

ஒரே பாட திட்டம், ஒரே விதமான பாட புத்தகங்கள் என்பனவற்றால் அனைவருக்கும் சமச்சீரான கல்வியை வழங்க முடியாது. அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான, சீரான, ஒரே விதமான கல்வியை வழங்குவதுதான் சமச்சீர் கல்வி. அதற்கு இது வழிவகுக்காது. எல்லாவற்றிற்கும் மேலாக பயிற்று மொழியாக தமிழும், தற்போது நடைமுறையில் உள்ள பிற மொழிகளும் தொடரும் என்று அறிவித்திருப்பது சமச்சீர் கல்வி என்ற நடைமுறைக்கு வேட்டு வைப்பதாகும்.

தமிழுடன் தற்போது நடைமுறையில் உள்ள பிறமொழிகளும் பயிற்றுமொழியாக தொடரும் என்ற அறிவிப்பினால் இப்போது நடைமுறையில் இருந்துவரும் கல்வியில் ஏற்றத்தாழ்வு என்கிற சாபக்கேடு தொடர்ந்து நீடிக்கும்.

சமச்சீர் கல்வி தொடர்பாக முத்துக்குமார் குழு பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இப்போது அறிவித்திருப்பது சமச்சீர் கல்வி திட்டம் அல்ல; இது சமரச கல்வி திட்டம்.

வருகிற 29‌ஆ‌ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் பரிசீலித்து முடிவெடுத்து அறிவிக்கப்போவதாக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். இந்த கால்கிணறு தாண்டும் வேலையை விட்டுவிட்டு எப்படி நுழைவுத்தேர்வை ரத்து செய்வதில் அரசு துணிச்சலோடு முடிவெடுத்ததோ அதைப்போல முத்துக்குமரன் குழுவினரின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்தும் முடிவை அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ள வேண்டும்.

உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்திருக்கிறது. இந்த நாட்டின் குடியரசு தலைவருக்கு கிடைக்கின்ற மருத்துவ வசதிகள் மிக சாதாரண குடிமகனுக்கும் கிடைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் கட்சி என்ற முறையில் கலைஞரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் நோக்கத்தை நாங்கள் வரவேற்கிறோம்.

அதே நேரத்தில் இதுபோன்ற பெருந்திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வரும்போது பொதுவிவாதங்கள் நடத்தி இத்துறை சம்பந்தப்பட்ட அறிஞர்கள், மருத்துவர்கள், மக்கள் நல ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள், தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர்களின் பிரதிநிதிகள் ஆகியோரை அழைத்துப்பேசி அவர்களின் கருத்தை அறிந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் அண்மைக் காலமாக வன்முறைகளும், கொலைகளும் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான கொலைகளுக்கு ரியல் எஸ்டேட் போட்டிதான் காரணமாக உள்ளது. தமிழகத்தில் 10 ஏக்கருக்கு மேல் யார் நிலம் வாங்கினாலும், விற்றாலும் செல்லாது என்று அறிவிக்க அவசர சட்டம் கொண்டுவர வேண்டும். மனை வணிக பேரத்தை ஒழுங்குபடுத்த குழு அமைக்க வேண்டும்.

இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற முறையில் தமிழ் இனத்தையே அழித்துக்கொண்டிருக்கும் சிங்கள போர் படையினரின் அட்டூழியங்கள் மற்றும் எல்லையற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இங்கிலாந்து சேனல்-4 என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆதாரப்பூர்வமான புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறது. தமிழ் இளைஞர்களை கைது செய்து அவர்களை நிர்வாணமாக்கி கை, கால்கள், கண்களை கட்டி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் பதறவைக்கும் காட்சிகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

அதிபர் ராஜபக்சே, அவரது தம்பி கோத்தபாய ராஜபக்சே, தளபதி பொன்சேகா ஆகியோர் மீது கொலைக்குற்ற வழக்குகளை தொடர இதைத்தவிர வேறு ஆவணங்கள் தேவையே இல்லை. இந்த ஆதாரங்களை கொண்டு இவர்கள் மீது போர்க்குற்ற வழக்குகள் தொடர வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் முதலமைச்சர் வேண்டுகோள் வைக்க வேண்டும் எ‌ன்று ராமதாஸ் கூ‌றினா‌ர்.

Wednesday, August 26, 2009

உண்மையா இது? பாவிகளா...மோசமான உலகம்

http://www.pathivu.com/news/3283/68//d,art_full.aspx

இந்தி திணிப்புக்கு முயற்சி: ராமதாஸ்-வீரமணி

சென்னை: தமிழகத்தில் மீண்டும் இந்தித் திணிப்புக்கான முயற்சி நடப்பதாக
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் கூறியுள்ளனர். இதை முதல்வர் கருணாநிதி தடுத்து நிறுத்த வேண்டு்ம் என்றும் கோரியுள்ளனர்.

ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக பதுங்கியிருக்கும் `இந்தி திணிப்பு' என்ற பூதம் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை தலைகாட்ட தொடங்கிவிடுகிறது. இந்தி பேசாத மக்கள் மீது இந்தி கட்டாயமாக திணிக்கப்பட மாட்டாது என்று பண்டித நேரு அளித்த உறுதிமொழி, பின்னர் இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய் போன்ற பிரதமர்களால் உறுதி செய்யப்பட்டு இன்று வரையில் இந்தி திணிப்பு என்கிற ஆபத்து தடுத்து நிறுத்தப்பட்டு வந்திருக்கிறது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் கல்வி மாநாடு ஒன்றில் பேசியதாக வெளிவந்துள்ள செய்தி, மீண்டும் அந்த ஆபத்து தலைதூக்குகிறதோ என்ற அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.

''இந்தி தேசிய மொழி; எனவே, நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் அது கற்பிக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு இதுதான் சரியான நேரம்'' என்று கபில்சிபல் பேசியிருக்கிறார். இது அவரது சொந்தக் கருத்தா? அல்லது அவர் சாந்துள்ள அரசின் கருத்தா? என்பது தெரியவில்லை.

எதுவாக இருப்பினும், அவர் பேசியிருப்பதைப்போல, நாடு முழுவதும் உள்ளவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட இத்தகைய நடவடிக்கை உதவாது என்பது அவருக்கும், அரசுக்கும் உரிய முறையில் உணர்த்தப்பட வேண்டும்.

மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ இந்தியை திணிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டபோதெல்லாம் நேருவின் உறுதிமொழியை தொடர்ந்து நிறைவேற்றி வர வேண்டும் என்று தமிழகத்திலிருந்து குரல் எழுப்பப்பட்டு வந்திருக்கிறது.

அதேநேரத்தில், நேரு அளித்த உறுதிமொழியை அரசியல் சட்டத்தில் இடம்பெற செய்வதில் தமிழகம் தவறியிருக்கிறது என்பதும் கசப்பான உண்மையாகும்.

இந்தி திணிப்பை எதிர்த்து எத்தனையோ போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. அவை அனைத்தும் போட்டி அரசியலுக்கு பயன்பட்டிருக்கிறதே தவிர, இந்தி திணிப்பு என்ற ஆபத்தை நிரந்தரமாக தடுத்து நிறுத்த உதவவில்லை என்பது இன்றைக்கும் நிதர்சனமான உண்மையாகும். இந்தி திணிப்பு என்கிற ஆபத்தை நிரந்தரமாக தடுத்து நிறுத்துவதற்கு இப்போது சிறந்ததொரு வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

அண்ணாவின் நூற்றாண்டு நிறைவு விழா விரைவிலேயே கொண்டாடப்பட இருக்கிறது. சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். எத்தனையோ சிறப்பான காரியங்கள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும், தமிழ் உள்பட அனைத்து தேசிய மொழிகளும் மத்தியில் ஆட்சி மொழிகளாக்கப்படுகிறது என்கிற அறிவிப்பினை பெற்று, அதன் மூலம் தமிழர்களின் தலைக்குமேல் பல்லாண்டு காலமாக தொங்கிக்கொண்டிருக்கும் `இந்தி திணிப்பு' என்கிற கத்தியை அகற்றிவிட்டோம் என்ற நிலையை ஏற்படுத்தினால் அது அனைத்திற்கும் மேலான சிறப்பாக அமையும். அண்ணாவின் கொள்கையும் நிறைவேறும்.

அதற்கான முயற்சியை தமிழகத்தின் சார்பில் முதல்வர் உடனடியாக மேற்கொண்டு அந்த வெற்றி செய்தியிணை அண்ணா நூற்றாண்டு விழாவில் அறிவிக்கச் செய்து புகழ் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

இந்தி திணிப்பை அனுமதிக்க முடியாது-வீரமணி:

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களிடம் பேசுகையில்,

மத்திய அமைச்சர் கபில் சிபில் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் இந்தி மொழியை கட்டாயமாக படிக்க வேண்டும் என்று அறிவிப்பு செய்திருக்கிறார். இது வருத்தமும், வேதனையும் அளிக்கக்கூடிய ஒன்றாகும்.

இதன் மூலம் தமிழகத்தில் மறைமுகமாக இந்தி திணிப்பு நடைபெறும். இதை அனுமதிக்க முடியாது. 1926ம் ஆண்டு முதல் இந்தி எதிர்ப்பை பெரியார், அண்ணா உள்ளிட் தலைவர்கள் நடத்தியிருக்கிறார்கள்.

1967ம் ஆண்டு அண்ணா தலைமையிலான ஆட்சி மும்மொழிக் கொள்கையை ரத்து செய்து, தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையை அமல்படுத்தினார். 1967ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு காரணமே தமிழகத்தில் நடந்த மாணவர்களின் எழுச்சி மிக்க போராட்டம்தான்.

அந்த இந்தி திணிப்பில் காங்கிரஸ் உறுதியாக இருந்ததால் தான் 1967ல் ஆட்சியை பறிகொடுத்து இன்று வரை ஆட்சியை பிடிக்க முடியாமல் இருப்பதற்கு காரணம்.

இந்தியை படிக்க விரும்புவர்கள் இந்தி பிரச்சார் சபா உள்ளிட் நிறுவனங்களில் படித்துக் கொள்ளலாம். கட்டாயமாக பள்ளிகளில் புகுத்துவதை அனுமதிக்க முடியாது. தமிழக முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Saturday, August 15, 2009

சிலைகள் திறப்பு: ராமதாஸ் கருத்து

திண்டிவனம், ஆக. 13: சிலைகள் திறப்பு விழா என்பது, கர்நாடக அணைகளை திறப்பதற்கான முன்னோட்டமாக இருக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.


திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:


பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு. சென்னையில் சர்வக்ஞர் சிலை திறப்பு. இவ் விழாக்களை நடத்துவதோடு நின்று விடாமல், கர்நாடகத்தின் அணைகளை திறக்க இவ் விழாக்கள் பயன்பட வேண்டும்.


பேச்சு வார்த்தையின் மூலம் தீர்க்கப்பட முடியாத பிரச்னையே இல்லை என்றும், தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையே உள்ள பிரச்னைகளை பேச்சு வார்த்தையின் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்றும், பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் தமிழக முதலமைச்சரின் முன்னிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியிருக்கிறார்.


32 முறை பேசி தீர்க்கமுடியாத காவிரி சிக்கலுக்கு இப்போது பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு காணும் முயற்சியை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். இதற்கு பாமக உறுதுணையாக இருக்கும்.


""இலவசங்கள் என்பது தாற்காலிகமாகத்தான் இருக்க முடியும், அது என்றென்றும் நீடித்தால் சமுதாயத்திற்கு தீங்குதான் ஏற்படும்'' என்று இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கூறிய முதல்வர் கருணாநிதி, இலவசங்களை வழங்குவது திமுக அரசின் மகத்தான சாதனைகள் என்று சொல்லிக் கொண்டு அவற்றையே முன்வைத்து வாக்குக் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.


ஏழைகள் ஏழைகளாக இருந்தால்தான் இலவசங்களை தொடர முடியும். அதற்காகதான் தெருவெங்கும் மதுக்கடைகளை திறந்து விட்டிருக்கிறார்.


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லு முல்லு செய்து தேர்தல் முடிவை அடியோடு மாற்றிவிட முடியும் என்ற புகாரை செயல்விளக்கம் மூலம் நிருபித்துக் காட்ட பாமகவுக்கு ஆகஸ்ட் 27-ஆம் தேதி வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.


சென்னை உயர் நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அன்றைய தினத்தில் பாமக சார்பில் தொழில்நுட்ப நிபுணர்களும், சில நடுநிலையாளர்களும் தேர்தல் ஆணையத்தின் முன் இதனை நிருபித்துக் காட்டுவார்கள்.


ஏழை எளிய மக்கள் பட்டாவிற்கு மனு கொடுத்து காத்திருக்கும் நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவோ அல்லது வீடு கட்டி தருவதோ தேவையற்றது.


மேலும், பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான நல வாரியம் அமைத்து தருவதை அரசு உடனே செய்ய வேண்டும் என்றார் ராமதாஸ்

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: