Saturday, December 8, 2012

கருகும் பயிரை காப்பாற்ற 12 டி.எம்.சி தண்ணீர் போதுமா? ராமதாஸ் கேள்வி

சென்னை: தண்ணீர் இன்றி சம்பா பயிர்கள் கருகி வரும் நிலையில் அவற்றை காப்பாற்ற 12 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே திறந்து விடச் சொல்லி உத்தவிடுவது போதுமானதல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காவிரி கண்காணிப்புக் குழு, காவிரி பாசன மாவட்டங்களில் கருகி வரும் சம்பா நெற்பயிர்களை காப்பாற்றுவதற்காக தமிழகத்திற்கு டிசம்பர் மாதத்தில் 12 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு ஆணையிட்டிருக்கிறது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு இம்மாத இறுதிக்குள் மத்திய அரசிதழில் வெளியிடப்படும் என்றும் அக்குழு அறிவித்திருக்கிறது.

இறுதித் தீர்ப்பு கடந்த 2007ஆம் ஆண்டிலேயே வழங்கியபோதிலும், அத்தீர்ப்பு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அரசிதழில் வெளியிடப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இப்போது உச்சநீதிமன்றம் கண்டித்தபிறகு, வேறுவழியின்றி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில், சம்பா பயிரை காப்பாற்றுவதற்காக காவிரி கண்காணிப்புக் குழு ஒதுக்கியுள்ள 12 டி.எம்.சி தண்ணீர் போதுமானதல்ல. தமிழகத்தில் சம்பா பயிரை காப்பாற்ற குறைந்தது 60 டி.எம்.சி தண்ணீர் தேவை. டிசம்பர் மாதத்தில் குறைந்தது 30 டி.எம்.சியாவது திறந்து விடபட்டால் தான் பயிர்களை ஓரளவாவது காப்பாற்ற முடியும். ஆனால், 12 டி.எம்.சி மட்டும் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடகத்திற்கு கண்காணிப்புக் குழு ஆணையிட்டிருப்பது தமிழக விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம் ஆகும்.

ஆனால், இந்தத் தீர்ப்பைக்கூட செயல்படுத்த முடியாது என கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இதே நிலை தொடர்ந்தால் காவிரி பாசன மாவட்டங்களில் எலிக்கறி சாப்பிடும் அவலநிலை மீண்டும் ஏற்படக்கூடும். இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் வாடும் நெற்பயிர்களைக் காப்பாற்ற உடனடியாக 30 டி.எம்.சி தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: