Friday, February 24, 2012

கருணாநிதி, எம்ஜிஆர், ஜானகி, ஜெயலலிதா, வைகோ தமிழர்கள் அல்ல: அன்புமணி

சிதம்பரம்: திராவிட கட்சிகளின் தலைவர்களான கருணாநிதி, எம்ஜிஆர். ஜானகி, ஜெயலலிதா, வைகோ யாருமே தமிழர் கிடையாது. தமிழன் யார் என்றால் பாமக நிறுவனர் ராமதாஸ் ஒருவர்தான் என்றார் பாமக இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி.

பாட்டாளி மக்கள் கட்சியின் தமிழக மாணவர் சங்கம் சார்பில் மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் அவர் பேசுகையில்,

மாணவர்கள் அரசியல் வேண்டாம் என்று சொல்ல முடியாது. நீங்கள் அவசியம் அரசியலுக்கு வந்தாக வேண்டும். ஏனென்றால் எதிர்காலத்தை உருவாக்கும் இளைஞர்கள் நீங்கள்தான். உலக நாடுகளில் புரட்சிகள் நடைபெற்று வருவதற்கு இளைஞர்கள்தான் காரணம். அதேபோன்ற புரட்சி தமிழகத்தில் ஏற்பட வேண்டும்.

சினிமா ஒரு பொழுதுபோக்கு. அதை பார்த்து விட்டு அப்போதே மறந்துவிட வேண்டும். ஆனால் நமது மக்கள் அதை உண்மை என்று நம்பி ஏமாந்து போகின்றனர். இனி தமிழ்நாட்டை படித்தவர்கள்தான் ஆள வேண்டும்.

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அமைதிப் புரட்சி ஏற்பட்டது. இளைஞர்கள் அந்த புரட்சியை ஏற்படுத்தினர். அதிமுகவுக்கு அவர்கள் ஒட்டுப் போடவில்லை. திமுகவுக்கு எதிராக ஓட்டு போட்டார்கள் என்பதுதான் உண்மை.

பாமக ஒரு வித்தியாசமான கட்சி. எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்த தவறை நாங்கள் மீண்டும் செய்ய மாட்டோம். பாமக தலைமையில் தனி அணி அமைப்போம்.

கேரளத்தில் நாயர், மேனன் தவிர வேறு யாரும் ஆள முடியவில்லை. ஆந்திரத்தில் ரெட்டி, நாயுடு தவிர வேறு யாரும் ஆளவில்லை.

திராவிட கட்சிகளின் தலைவர்களான கருணாநிதி, எம்ஜிஆர். ஜானகி, ஜெயலலிதா, வைகோ யாருமே தமிழர் கிடையாது. திராவிடர்கள் தான். தமிழன் யார் என்றால் பாமக நிறுவனர் ராமதாஸ் ஒருவர்தான் என்றார் அன்புமணி.

புதுவை நான் பிறந்த பூமி:

முன்னதாக பாமக இளைஞர் சங்க பொதுக்குழு கூட்டம் புதுச்சேரியில் நடந்தது. அதில் பேசிய அன்புமணி, புதுவை நான் பிறந்த பூமி. இங்குள்ள இளைஞர்களை நல்வழிப்படுத்தும் நோக்கம் எனக்கு உள்ளது. புதுவையில் இனிவரும் காலங்களில் வித்தியாசமான அரசியல் நடத்த உள்ளோம். தமிழகத்தில் புதிய செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளோம். திராவிட கட்சிகளுக்கு எதிரான செயல் திட்டம் அது.

45 ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் மக்களை குடிகாரர்களாக்கி விட்டார்கள். புதுவையிலும் பாமக புதிய பாதையில் செல்லப் போகிறது. இங்கு ஒரு மாற்றத்தை உருவாக்க உள்ளோம். டாக்டர் ராமதாஸ் ஊர் ஊராக சென்று விதையை விதைத்தார். உழைத்தது நாம். ஆனால் அறுவடை செய்தது என்.ஆர். காங்கிரஸ். இனிவரும் காலங்களில் நாம் அறுவடை செய்யவேண்டும்.

நமது கொள்கை வேறு எந்த கட்சியிலும் கிடையாது. வருங்காலத்தில் திராவிட, தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். பா.ம.க. தலைமையில்தான் கூட்டணி. கூட்டணி இல்லாமல் எப்படி ஜெயிக்க முடியும் என்று சிலர் நினைக்கலாம். நமது கொள்கை சரியாக இருந்தால் மக்கள் ஆதரவு அளிப்பார்கள்.

புதுவை இளைஞர்கள் குடியால் சீரழிகிறார்கள். புதுவையில் பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கினை அமல்படுத்துவோம். புதுவையில் மதுவால் பாதிக்கப்படாத குடும்பமே கிடையாது. இங்கு நாம் 20 தொகுதிகளில் கவனம் செலுத்தினால் போதும். ஆட்சியை பிடித்து விடலாம்.

தமிழகத்தில் காங்கிரஸ் 45 ஆண்டு காலமாக ஆட்சிக்கு வராதது ஏன் என்றால் திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அவர்கள் மேல் சவாரி செய்ததுதான். அவர்கள் மேல் அவர்களே நம்பிக்கை இழந்துள்ளனர். அதனால்தான் கூட்டணி வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்றார் அன்புமணி.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: