Friday, February 24, 2012

இலவசமாக தண்ணீர் கூட தராத மத்திய, மாநில அரசுகள் தேவையா?: ராமதாஸ்

சென்னை: குடி மக்களின் அடிபடை தேவையான தண்ணீரை இலவசமாக வழங்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் அரசியல் சட்டப்படியான கடமை ஆகும். இதைக்கூட அரசுகளால் செய்ய முடியாது என்றால், அந்த அரசுகள் இருப்பதில் அர்த்தமே இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய நீர்வள அமைச்சகத்தால் கடந்த ஜனவரி 31ம் தேதி வெளியிடபட்ட தேசிய வரைவு தண்ணீர் கொள்கை உழவர்களின் நலனையும் வாழ்வாதாரத்தையும் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஏழை மக்களை சுரண்டி, பன்னாட்டு நிறுவனங்களை கொழுக்க வைக்கும் கொள்கைகளை கடைபிடித்து வரும் மத்திய அரசு, இப்படி ஒரு கொள்கையை வெளியிட்டதன் மூலம் உழவர்களின் நலனில் தனக்கு சிறிதும் அக்கறை இல்லை என்பதை நிரூபித்திக்கிறது.

விவசாயத் தேவைக்கான தண்ணீருக்கு விலை நிணர்யிக்கப்பட வேண்டும், தண்ணீர் வழங்கும் பொறுப்பில் இருந்து அரசு விலகிக் கொள்ள வேண்டும், தண்ணீர் வினியோகத்தை முழுக்க முழுக்க தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தேசிய வரைவு தண்ணீர் கொள்கையில் தெரிவிக்கபட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

குடி மக்களின் அடிபடை தேவையான தண்ணீரை இலவசமாக வழங்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் அரசியல் சட்டப்படியான கடமை ஆகும். இதைக்கூட அரசுகளால் செய்ய முடியாது என்றால், அந்த அரசுகள் இருப்பதில் அர்த்தமே இல்லை.

அதுமட்டுமின்றி, தண்ணீர் வினியோகத்தை தனியாரிடம் வழங்கினால் இந்தியாவின் ஒட்டுமொத்த நீராதாரங்களையும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் கைகளில் எடுத்துக்கொண்டு உழவர்களை சுரண்டும் ஆபத்து ஏற்படும். மத்திய அரசு, விவசாயத் தேவைக்கான தண்ணீருக்கு விலை நிர்ணயிப்பது கொடுமையிலும் கொடுமையாகும். ஏற்கெனவே உரக் கொள்கையில் திருத்தம் கொண்டு வந்ததால், உரம் வாங்க முடியாமல் உழவர்கள் பெரும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் தண்ணீருக்கு விலை நிர்ணயிப்பது விவசாயிகளை பெரிதும் பாதிக்கும்.

மாநில மின் வாரியங்கள் மூலம் இலவசமாக மின்சாரம் வழங்கபடுவதால் தேவைக்கும் அதிகமாக தண்ணீர் செலவிடபடுவதாகவும், இதை தவிர்க்க இலவச மின்சாரத்தையும், மானிய விலை மின்சாரத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் வரைவுக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே வறுமையிலும், கடனிலும் சிக்கித் தவிக்கும் விவசாயிகளை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டும் நடவடிக்கையாகும் இது.

நீர்வளம், விவசாயம் போன்ற துறைகள் பொதுப் பட்டியலில் இருக்கும் நிலையில், உழவர்களுக்கு இலவசமாக மின்சாரமோ அல்லது தண்ணீரோ வழங்கக்கூடாது என்று மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்துவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. ஒட்டுமொத்தத்தில் விவசாயிகளின் கழுத்தை நெரிக்கும் வகையில் அமைந்துள்ள தேசிய வரைவு தண்ணீர் கொள்கையை மத்திய அரசு கைவிடவேண்டும். இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

தேசிய வரைவு தண்ணீர் கொள்கையை ஜனவரி 31ம் தேதி இணையத்தளத்தில் வெளியிட்ட மத்திய அரசு, அடுத்த 29 நாட்களில் கருத்து தெரிவிக்க வேண்டும் என கூறியிருப்பது சரியல்ல.

இந்தியாவில் உள்ள உழவர்கள் அனைவரும் இணையத்தளம் பார்க்கும் அளவுக்கு இன்னும் வளரவில்லை. எனவே, வரைவு தண்ணீர் கொள்கை குறித்து கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதுடன், நாடு முழுவதும் உழவர்களிடையே கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தி அதன் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: