Saturday, August 15, 2009

சிலைகள் திறப்பு: ராமதாஸ் கருத்து

திண்டிவனம், ஆக. 13: சிலைகள் திறப்பு விழா என்பது, கர்நாடக அணைகளை திறப்பதற்கான முன்னோட்டமாக இருக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.


திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:


பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு. சென்னையில் சர்வக்ஞர் சிலை திறப்பு. இவ் விழாக்களை நடத்துவதோடு நின்று விடாமல், கர்நாடகத்தின் அணைகளை திறக்க இவ் விழாக்கள் பயன்பட வேண்டும்.


பேச்சு வார்த்தையின் மூலம் தீர்க்கப்பட முடியாத பிரச்னையே இல்லை என்றும், தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையே உள்ள பிரச்னைகளை பேச்சு வார்த்தையின் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்றும், பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் தமிழக முதலமைச்சரின் முன்னிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியிருக்கிறார்.


32 முறை பேசி தீர்க்கமுடியாத காவிரி சிக்கலுக்கு இப்போது பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு காணும் முயற்சியை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். இதற்கு பாமக உறுதுணையாக இருக்கும்.


""இலவசங்கள் என்பது தாற்காலிகமாகத்தான் இருக்க முடியும், அது என்றென்றும் நீடித்தால் சமுதாயத்திற்கு தீங்குதான் ஏற்படும்'' என்று இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கூறிய முதல்வர் கருணாநிதி, இலவசங்களை வழங்குவது திமுக அரசின் மகத்தான சாதனைகள் என்று சொல்லிக் கொண்டு அவற்றையே முன்வைத்து வாக்குக் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.


ஏழைகள் ஏழைகளாக இருந்தால்தான் இலவசங்களை தொடர முடியும். அதற்காகதான் தெருவெங்கும் மதுக்கடைகளை திறந்து விட்டிருக்கிறார்.


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லு முல்லு செய்து தேர்தல் முடிவை அடியோடு மாற்றிவிட முடியும் என்ற புகாரை செயல்விளக்கம் மூலம் நிருபித்துக் காட்ட பாமகவுக்கு ஆகஸ்ட் 27-ஆம் தேதி வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.


சென்னை உயர் நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அன்றைய தினத்தில் பாமக சார்பில் தொழில்நுட்ப நிபுணர்களும், சில நடுநிலையாளர்களும் தேர்தல் ஆணையத்தின் முன் இதனை நிருபித்துக் காட்டுவார்கள்.


ஏழை எளிய மக்கள் பட்டாவிற்கு மனு கொடுத்து காத்திருக்கும் நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவோ அல்லது வீடு கட்டி தருவதோ தேவையற்றது.


மேலும், பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான நல வாரியம் அமைத்து தருவதை அரசு உடனே செய்ய வேண்டும் என்றார் ராமதாஸ்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: