Thursday, September 24, 2009

சமச்சீர் கல்வி முறையை கொண்டு வராவிட்டால் புரட்சி வெடிக்கும்- ராமதாஸ்

சென்னை: தமிழக அரசு சமச்சீர் கல்வியை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் புரட்சி வெடிக்கும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் துணை வேந்தர் முத்துகுமரன் தலைமையிலான குழு அளித்துள்ள சமச்சீர் கல்வி பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி பாமகவின் தமிழக மாணவர் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தை தொடங்கி வைத்து டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,

தமிழக அரசு அறிவித்துள்ள சமச்சீர் கல்வி மாணவர்களுக்கும் புரியவில்லை; பொதுமக்களுக்கும் புரியவில்லை. மற்றவர்கள் யாருக்கு புரியாவிட்டாலும் முதலமைச்சர் கருணாநிதிக்கு இது புரிந்திருக்கும்.

எங்களை பொறுத்தவரை முன்னாள் துணை வேந்தர் முத்துகுமரன் தலைமையிலான குழு அளித்துள்ள பரிந்துரைகளின்படி சமச்சீர் கல்வியை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதுதான் கோரிக்கை.

ஆனால் தமிழக அரசு இப்போது அறிவித்துள்ள சமச்சீர் கல்வி சமூக நீதிக்கு எதிரானது. இது சமச்சீர் கல்வி அல்ல; சமரச கல்விதான். சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் பல்வேறு அறிஞர் பெருமக்களும் முத்துகுமரன் குழு அறிக்கையை முழுமையாக அமல்படுத்தி சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றுதான் வலியுறுத்தி வந்தனர்.

சமச்சீர் கல்வி என்பது பொது பள்ளி திட்டம், அருகமை பள்ளி திட்டம், தாய்மொழி கல்வி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இதுதான் உலக நடைமுறை.

ஏழை, நடுத்தர, பணக்கார வர்க்கம் என்று பிரித்தாளும் கல்வி முறை கூடாது. இதனை நாங்கள் மட்டும் சொல்லவில்லை. கோத்தாரி கமிஷன் உள்ளிட்ட பல்வேறு கமிஷன்களும் அறிக்கைகளை அளித்துள்ளன. அவை நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டுள்ளன. ஆயினும் அத்தகைய சமச்சீர் கல்வி முறை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

தமிழகத்தை பொறுத்தவரை ஒரு லட்சம் பேர்தான் மெட்ரிக்குலேஷன் கல்வி முறையில் தேர்வு எழுதியிருக்கிறார்கள். மற்ற மாணவர்கள் தாய் மொழியில்தான் பயின்றிருக்கிறார்கள்.

இந்த அரசுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் முக்கியமா? 10 லட்சம் மாணவர்கள் முக்கியமா? என்று எண்ணி பார்க்க வேண்டும். அரசின் இத்தகைய போக்கு தொடர்ந்தால் தமிழ்நாட்டில் மிகப் பெரிய கல்வி புரட்சி வெடிக்கும். புரட்சி என்றதும் ஏதோ இந்த ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்று முதல்வர் கருணாநிதி எண்ண வேண்டாம்.

மாணவர்களையும், பெற்றோர்களையும், பொதுமக்களையும் பெருமளவில் திரட்டி தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள சமச்சீர் கல்வியின் குறைபாடுகளை புரிய வைத்து மிகப் பெரிய போராட்டங்களை நடத்துவோம்.

முத்துக்குமரன் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் சமச்சீர் கல்வி முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் வரை எங்களுடைய போராட்டங்கள் ஓயாது.

எங்களை பொறுத்தவரை தரமான கல்வி, கட்டாய கல்வி, சுமையற்ற கல்வி என எல்லா தரப்பு குழந்தைகளுக்கும் சமச்சீரான கல்வி வழங்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை. இத்தகைய சமச்சீர் கல்வியை 12 ஆம் வகுப்பு வரை தமிழக அரசு எந்தவித கட்டணமும் இன்றி இலவசமாக வழங்க வேண்டும் என்றார் டாக்டர் ராமதாஸ் .

Tags: dr. ramadoss, uniform education system, agitations, warning, டாக்டர்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: