Wednesday, October 28, 2009

5வது ஈழப் போராட்டம் நிச்சயம் தொடரும்: ராமதாஸ்

ஈழப்போராட்டம் முடிந்தாகி விட்டது என்றெல்லாம் இந்தியாவும், இலங்கையும் சொல்கிறது. ஆனால் இன்னும் ஈழ விடுதலைப் போராட்டம் முடியவில்லை. 5 வது ஈழப் போராட்டம் நிச்சயம் தொடரும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இலங்கையில் முள்வேலி முகாம்களில் உள்ள 3 லட்சம் தமிழர்களை அவர்களுடைய சொந்த வாழ்விடங்களில் குடியமர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இன்று திருச்சியை நோக்கிய பிரச்சார ஊர்தி பயணம் தொடங்கியது.

சென்னையில் டாக்டர் ராமதாஸ் தலைமையிலும், கோவையில் பழ.நெடுமாறன் தலைமையிலும், இராமநாதபுரத்தில் வைகோ தலைமையிலும், கன்னியாகுமரியில் ஆர்.நல்லக்கண்ணு தலைமையிலும் இன்று தொடங்கிய இந்த பிரச்சார ஊர்தி பயணம் 29 ம் தேதி திருச்சியில் நிறைவடைகிறது.

அங்கு அன்றைய தினம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. சென்னையில் இன்று டாக்டர் ராமதாசை வழியனுப்பும் கூட்டம் பாமக சார்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது,

இலங்கைத் தமிழர்களை ராஜபக்ச கொன்று குவித்த இரத்தத்தின் ஈரம் இன்னும் அங்கு காயவில்லை. இந்த நேரத்தில் தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் குழு இலங்கைக்கு சென்று இரத்தக்கறை படிந்த ராஜபக்சவுடன் கைகுலுக்கி, சிரித்து பேசிவிட்டு வந்து இருக்கிறார்கள்.

பரஸ்பரம், பரிசு பொருட்களை கொடுத்தும், வாங்கியும் வந்து இருக்கிறார்கள். எப்படி இவர்களுக்கு இப்படி நடந்து கொள்ள மனம் வந்ததோ தெரியவில்லை. யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரோடு எந்த ஒரு யூதனாவது கைகுலுக்குவானா என்பதை தமிழர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். எங்களுடைய இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் அங்கு சென்று இருந்தால் அவர்கள் ராஜபக்சவுடன் கைகுலுக்கி விட்டு சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கி இருக்க முடியுமா?

அப்படி அவர்கள் திரும்பி இருந்தால் தமிழர்களுக்கு துரோகம் செய்யும் கருணாவோடு சேர்ந்து கொள்ளுங்கள், டக்ளஸ் தேவானந்தாவோடு சேர்ந்து கொள்ளுங்கள் அல்லது சிங்களவனோடு சேர்ந்து கொள்ளுங்கள் என்று கூறி அவர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்பி இருப்போம்.

ஆனால், இந்த குழுவுக்கு எப்படி மனம் வந்ததோ, அங்கே போய் ராஜபக்சவுடன் கைகுலுக்கி பேசி தேனீரையோ, எதையோ சாப்பிட்டு விட்டு வந்து இருக்கிறார்கள். இந்த குழுவினர் முதல்வரை சந்தித்து ஒரு அறிக்கை வெளியிட்டனர். டெல்லிக்கு சென்று பிரதமரையும், சோனியாவையும் சந்தித்தும் அறிக்கை தந்து இருக்கிறார்கள்.

டெல்லியில் தரப்பட்ட அறிக்கையின் விபரங்கள் என்ன என்பதை இன்னும் அவர்கள் வெளிப்படுத்தவில்லை. அந்த விபரங்களை உடனே வெளியிட வேண்டும். 29 ம் தேதி நாங்கள் திருச்சியில் பொதுக் கூட்டம் நடத்துவதற்குள் இந்த விபரங்களை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் 68 பக்கம் கொண்ட அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறார்கள். அந்த அறிக்கையில் இலங்கை அதிபர் ராஜபக்ச, அவரது சகோதரர்கள் பசில் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச மற்றும் இராணுவ தளபதி பொன்சேகா ஆகியோரை போர் குற்றவாளிகள் என்று அறிவித்து இருக்கிறார்கள்.

இது ஒரு நல்ல திருப்பம் இதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமாவை பாராட்ட வேண்டும். காலம் கடந்தேனும் இந்த நிலை எடுத்த அமெரிக்காவை நாம் பாராட்ட வேண்டும். இந்த அறிவிப்போடு நின்று விடாமல் அதே வேகத்தில் ராஜபக்சவையும், அவரது சகோதரர்களையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று ஒபாமாவை கேட்டுக் கொள்கிறோம்.

அப்போது தான் அவர் பெறுகின்ற அமைதிக்கான நோபல் பரிசுக்கு அர்த்தம் உள்ளதாக இருக்கும். விடுதலைப்புலிகளை ஒழித்தாகி விட்டது. ஈழப்போராட்டம் முடிந்தாகி விட்டது என்றெல்லாம் இந்தியாவும், இலங்கையும் சொல்கிறது. ஆனால் இன்னும் ஈழ விடுதலைப் போராட்டம் முடியவில்லை. 5 வது ஈழப் போராட்டம் நிச்சயம் தொடரும்.

அதுதான் இறுதியான ஈழ விடுதலைப் போராட்டமாக இருக்கும். அதன் முடிவில் நிச்சயம் ஈழ விடுதலை கிடைக்கும். அதற்காகவும், முள்வேலி முகாம்களில் அடைப்பட்டு உள்ள 3 லட்சம் தமிழர்களை மீண்டும் அவர்களுடைய வாழ்விடங்களில் குடியமர்த்தும் வலியுறுத்தியே எங்களுடையே இந்த பிரச்சார பயணம் நடைபெறுகிறது.

இதே போல தமிழர் பகுதிகளில் உள்ள சிங்களவர்களை வெளியேற்றக் கோரியும் நாங்கள் இந்த பிரச்சார பயணத்தை நடத்துகிறோம் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: