Sunday, February 6, 2011

தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., உறுதி? வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு தீவிரம்

சேலம்:வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெறுவது ஏறக்குறைய உறுதியாகி உள்ள நிலையில், வடமாவட்டங்களில் 50 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலையும் பா.ம.க., தயாரித்துள்ளது. மேலும், தி.மு.க.,வின் உள்ளடி வேலைகளில் இருந்து தப்பிக்கும் வகையில், அமைச்சர்களுடன் மோதலில் ஈடுபட்டவர்கள் வேட்பாளராக தேர்வு செய்யப்பட மாட்டர் என, பா.ம.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பின், பா.ம.க., தனது செல்வாக்கை மீட்க வேண்டும் எனில், வரும் சட்டசபை தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., தரப்பில் தே.மு.தி.க.,வுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், கூட்டணியில் சேர பா.ம.க.,வின் மிரட்டல் அங்கு எடுபட வில்லை.
அதே நேரத்தில், தி.மு.க.,வும் கை விரித்து விடக்கூடாது என்ற பயத்தில், தி.மு.க., கூட்டணியில் சேர்வதை உறுதி செய்து உள்ளது. பா.ம.க.,- தி.மு.க., கூட்டணியில் இணையும் பட்சத்தில், தி.மு.க., ஆதரவு பெற்ற வேட்பாளர்களை களத்தில் இறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



தமிழகத்தின் வடமாவட்டங்களில் பா.ம.க., செல்வாக்குள்ள 50 தொகுதிகளை தேர்வு செய்து, ஒவ்வொரு தொகுதியிலும் மூன்று முதல் ஐந்து பேர் கொண்ட பட்டியல் தேர்வு செய்யப்பட்டு, பா.ம.க., மேலிடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில், சேலம் மேற்கு, ஓமலூர், மேட்டூர், இடைப்பாடி, சங்ககிரி ஆகிய ஐந்து தொகுதிகளை கேட்டு பெறவும் திட்டமிட்டுள்ளது.கடந்த 2006 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 31 தொகுதிகள் குறையாத வகையில், பா.ம.க., தலைவர் மணி தி.மு.க.,விடம் பேசி வருகிறார். கடந்த முறை போட்டியிட்ட 31 தொகுதிகளுடன், மேலும் 19 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.



பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு, தொகுதியில் உள்ள செல்வாக்கு, பணபலம், தி.மு.க.,வினர் இடையே அவர்கள் மீதான நன்மதிப்பு, கட்சியினரை அரவணைத்து செல்லும் பாங்கு என, அவற்றுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு, அதில் அதிக மதிப்பெண் பெற்றவர்களை வேட்பாளராக நிறுத்த கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.



தற்போதுள்ள 18 எம்.எல்.ஏ.,க்களில், பாதிக்கும் மேலானவர்களுக்கு போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டு, புதியவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவும், பா.ம.க., மேலிடம் திட்டமிட்டுள்ளது.தி.மு.க.,வின் உள்ளடி வேலைகளில் இருந்து தப்பிக்கும் வகையில், வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், உணவுத்துறை அமைச்சர் வேலு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோரிடம் நேரடி மோதலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.,க்களில் பலருக்கு இந்த முறை போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காது என்பதே தற்போது பா.ம.க., வட்டாரங்களில் பரபரப்பு பேச்சாக உள்ளது.



பட்டியலில் உள்ளவர்கள் யார்?சேலம் மேற்கு தொகுதிக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்தி, மாநில இளைஞர் சங்க செயலாளர் அருள், பசுமை தாயக மாநில செயலாளர் சத்ரியசேகர், மாநகர செயலாளர் கதிர்ராசரத்தினம், ஆறுமுகம், சாம்ராஜ்.மேட்டூர் தொகுதிக்கு, தற்போதைய எம்.எல்.ஏ.,வும் மாநில தலைவருமான மணி, அவரது மகன் தமிழ்குமரன், தாரமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ., காமராசு, மினரல் சதாசிவம், ராஜேந்திரன்.இடைப்பாடி தொகுதிக்கு, தற்போதைய எம்.எல்.ஏ., காவேரி, யூனியன் சேர்மன் தொப்பாக்கவுண்டர், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் ராஜமாணிக்கம், கொழந்தாகவுண்டர்.ஓமலூர் தொகுதிக்கு, தற்போதைய எம்.எல்.ஏ., தமிழரசு, டாக்டர் மாணிக்கம், முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைசாமி, மாவட்ட வன்னியர் சங்க தலைவர் முருகன்.சங்ககிரி தொகுதிக்கு, தாரமங்கலம் எம்.எல்.ஏ., கண்ணையன், அண்ணாதுரை, முன்னாள் மாவட்ட தலைவர் பூ.தா.கணேசன் ஆகியோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: