Friday, February 18, 2011

திமுக அணியில் பா.ம.க: 31 இடங்களில் போட்டி

சென்னை, பிப். 18: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அணியில் பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடமும் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.முதல்வர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெள்ளிக்கிழமை சந்தித்தார். அவருடன் கட்சித் தலைவர் ஜி.கே. மணியும் சென்றார். நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர். பாலு, அமைச்சர் துரைமுருகன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்தச் சந்திப்பு 2 மணி நேரம் நீடித்தது.

சந்திப்புக்குப் பிறகு, தி.மு.க. - பா.ம.க. இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

இதுதொடர்பாக, நிருபர்களிடம் அவர் கூறியது:

தில்லிக்கு நான் சென்றிருந்தபோது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தேன். அப்போது வரும் சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கட்சிகள் இணைந்து போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, இப்போது பா.ம.க.வுடன் ஒப்பந்தம் ஏற்பட்டு, இந்தத் தேர்தலில் தி.மு.க.வுடன் இணைந்து பா.ம.க. போட்டியிடும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார் கருணாநிதி.

அதன்பிறகு, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

என் பேரன் திருமண அழைப்பிதழைக் கொடுப்பதற்காக முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்கு வந்தேன். அதோடு சேர்த்து தேர்தல் உடன்பாடும் ஏற்படுத்திக் கொண்டுள்ளேன். மகிழ்ச்சியோடு கருணாநிதியைச் சந்திக்கச் சென்றேன். மகிழ்ச்சியோடு செய்தியாளர்களைச் சந்திக்கிறேன்.

பா.ம.க.வுக்கு 31 சட்டப்பேரவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை இரு கட்சிகளின் தேர்தல் குழுக்கள் கூடி முடிவு செய்யும்.

திருமண அழைப்பிதழை கொடுக்க வந்த நான், இந்த தேர்தல் உடன்பாட்டையும் எதிர்பார்த்துதான் வந்தேன்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. அணியில் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைத் தவிர, மேலும் பல கட்சிகள் சேர இருக்கின்றன. இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.

தேர்தலில் அதிக தொகுதிகளைப் பெறுவதற்கான பா.ம.க.வின் பேரம் பேசும் திறன் குறையவும் இல்லை, கூடவும் இல்லை என்றார் ராமதாஸ்.

சோனியாவைச் சந்திப்பீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, மத்திய முன்னாள் அமைச்சர் அன்புமணி, சோனியாவைச் சந்தித்து உள்ளார் என்றார் ராமதாஸ். கடந்த பேரவைத் தேர்தலில் இதே எண்ணிக்கையில் தொகுதிகளைப் பெற்றபோது, தொகுதிகளை அள்ளியும் கொடுக்கவில்லை - கிள்ளியும் கொடுக்கவில்லை என்று சொன்னீர்கள். இப்போதும் அதே அளவுக்குதான் தொகுதிகளைப் பெற்றிருக்கிறீர்களே என்று கேட்டபோது, இதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார் ராமதாஸ்.



பேரவைத் தேர்தலில் இதுவரை பா.ம.க.

1991 பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பா.ம.க., ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. 1996 பேரவைத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு 4 தொகுதிகளை வென்றது.

2001 பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. அணியில் சேர்ந்த பா.ம.க. 27 தொகுதிகளில் போட்டியிட்டு 20 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2006 பேரவைத் தேர்தலில் தி.மு.க. அணியில் இடம்பெற்றிருந்த பா.ம.க., 31 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளை வென்றது.

இப்போது மீண்டும் தி.மு.க. அணியில் இடம்பெறும் பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: