சென்னை: தியாகி ஐ. மாயாண்டி பாரதியின் மறைவு குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேதனையும், இரங்கலும் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், ஊழல் எதிர்ப்பாளருமான தியாகி மாயாண்டி பாரதி, உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்திகேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.மாயாண்டி பாரதி அவரது இளம் வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டார். இதற்காக பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலைப் போராட்டத்தில் இனி ஈடுபடமாட்டேன் என்று மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு விடுதலையாகும்படி, அப்போது அவர் சார்ந்திருந்த அமைப்பு கட்டாயப்படுத்திய போதிலும், அதை ஏற்க மறுத்து, தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்த கொள்கை உறுதிக்கு சொந்தக்காரர்.இந்திய விடுதலைக்குப் பிறகு சமூகப் பிரச்சனைகளுக்காக பல போராட்டங்களை நடத்தியவர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட மகளிர் மதுஒழிப்பு மாநாடுகளில் என்னுடன் இணைந்து கலந்துகொண்டவர். மது ஒழிப்பை உயிர் மூச்சாகக் கொண்டவர். இதழியல் துறையிலும் முத்திரை பதித்தவர்.தள்ளாத வயதிலும் முதுமையைப் பொருட்படுத்தாமல், மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் ஊழலை வெளிக்கொண்டுவருவதற்காகப் போராடினார். இன்னும் இரு ஆண்டுகளில் நூற்றாண்டு விழா கொண்டாடவிருந்த நிலையில், அவர் காலமானதை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது.ஊழல் எதிர்ப்புப் போராளி மாயாண்டி பாரதியின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dr-ramadosss-condoles-the-death-i-mayandi-bharathi-221646.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dr-ramadosss-condoles-the-death-i-mayandi-bharathi-221646.html
No comments:
Post a Comment