Thursday, February 13, 2014

கம்பம் பள்ளத்தாக்கு நெற்பயிரை காக்க உடனே தண்ணீர் திறக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்



பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுவது கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி திடீரென நிறுத்தப்பட்டு விட்டதால், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள இரண்டாம் போக நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.
கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில்  கம்பம் சின்ன வாய்க்கால், வைரவன் வாய்க்கால், உத்தமுத்துக் கால்வாய் ஆகிய மூன்று கால்வாய்கள் மூலம் பாசன வசதி பெறும் பகுதிகளில் நெற்பயிர்கள் கதிர் முற்றி அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. மற்ற 14 கால்வாய்களின் பாசன பகுதிகளில் 35 முதல் 55 நாட்கள் ஆன நிலையில் நெற்பயிர்கள் உள்ளன. இத்தகைய நிலையில் 17 கால்வாய்களிலும் தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
அனைத்துக் கால்வாய்களிலும் உடனடியாக தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்றால் கதிர் முற்றும் நிலையில் உள்ள பயிர்களில் நெல்லுக்கு பதில் பதர் தான் கிடைக்கும். இளம் நிலையில் உள்ள நெற்பயிர்கள் கருகிவிடும் ஆபத்து உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு கடுமையான இழப்பு ஏற்படும். கம்பம் சின்ன வாய்க்கால், வைரவன் வாய்க்கால், உத்தமுத்துக் கால்வாய் ஆகிய மூன்று கால்வாய்களிலும் ஒரு பாய்ச்சலுக்கு தண்ணீர் திறந்து விட்டால் கதிர் முற்றும் நிலையில் உள்ள பயிர்கள் முழுவதையும் காப்பாற்றிவிட முடியும். மற்ற பயிர்களுக்கு இன்னும் சில நாட்கள் கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்படும் பட்சத்தில் அவற்றையும் முழுமையாக காப்பாற்றிவிட முடியும்.
ஆனால், பெரியாறு அணையில் உள்ள நீர் குடிநீர் தேவைக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்றும், பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முடியாது என்றும் மறுத்து விட்டனர். இக்கோரிக்கையை முன்வைத்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பயனில்லை. உழவர்களின் கோரிக்கையை ஏற்று  கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிட வேண்டிய தமிழக அரசு, போராட்டம் நடத்திய 115 விவசாயிகளை கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்த நிலை ஏற்பட்டதற்கு அதிகாரிகள் தான் காரணமே தவிர விவசாயிகள் காரணம் அல்ல. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் மிகவும் குறைவாக இருப்பதை  அறிந்த விவசாயிகள் ஆற்றிலும், கால்வாய்களிலும் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவைக் குறைத்து, அதிக நாட்களுக்கு தண்ணீர் வழங்கும்படி கடந்த திசம்பர் மாதமே பொதுப்பணித்துறை அதிகாரிகளை வலியுறுத்தினர். ஆனால் அப்போது கட்டுப்பாடில்லாமல் தண்ணீரை திறந்துவிட்டு நீர்மட்டத்தை குறைத்த அதிகாரிகள், இப்போது அதையே காரணம் காட்டி தண்ணீர் திறக்க மறுப்பது சிறிதும் நியாயமற்றது.

முல்லைப் பெரியார் அணையில் தற்போது 110.80 அடி தண்ணீர் உள்ளது. அணையின் நீர்மட்டம் குறைந்தால் கூட பம்ப் செட் மூலம் தண்ணீரை எடுத்து வினியோகிக்க முடியும். அதுமட்டுமின்றி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படுவதால், பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டாலும், அதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் சமாளித்துவிட முடியும்.
எனவே, கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை பாதுகாக்கத் தேவையான தண்ணீரை  அரசு உடனடியாக திறந்துவிடவேண்டும். தண்ணீர் கேட்டு போராடியதற்காக 115 விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: