Thursday, January 30, 2014

சென்னை பல்கலை. ஆசிரியர் நியமனம்: சமூக அநீதியைப் போக்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை



பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை பல்கலைக்கழகத்தில் 96 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான விளம்பர அறிவிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

அதனடிப்படையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல்கள் இன்று முதல் நடைபெறவிருக்கின்றன. இந்த ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டிருப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன.
சென்னை பல்கலைக்கழகத்தில் இப்போது நிரப்பப்படவுள்ள 96 பணியிடங்களில் முறையான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் பொதுப்பிரிவினருக்கு 17 இடங்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 35 இடங்கள், மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 21 இடங்கள், பட்டியலினத்தவருக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 4 இடங்களும், மிகப்பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 11 இடங்களும், பட்டியலினத்தவருக்கு 3 இடங்களும் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், பொதுப்பிரிவினருக்கு 51 இடங்கள், அருந்ததியர் மகளிருக்கு 27 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதன்மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் பல்கலைக்கழக ஆசிரியர் நியமனத்தில் கடைபிடிக்கப்படும் தவறான இட ஒதுக்கீட்டு முறை தான்.
2000 ஆவது ஆண்டில் தமிழக அரசு பிறப்பித்த இட ஒதுக்கீட்டு ஆணைப்படி 100 புள்ளி சுழற்சி முறை (100 Point Roster)இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட்டு வந்தது. அதன்படி ஒரு துறையில் 3 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டால் முதல் பணியிடம் பொதுப்பிரிவுக்கும், இரண்டாவது பணியிடம் பட்டியலினத்தவருக்கும் ஒதுக்கப்படும். மூன்றாவது பணியிடம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு வழங்கப்படும். அதன்பின் நான்காவது பணியிடம் எப்போது நிரப்பபடுகிறதோ, அப்போது அப்பணியிடம் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் 100 புள்ளி சுழற்சி முறை இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தவரை  பல்கலைக்கழக ஆசிரியர்கள் நியமனத்தில் குழப்பம் எதுவும் ஏற்படவில்லை.
ஆனால், 2007 ஆம் ஆண்டில் சில பிரிவினருக்கு உள் இட ஒதுக்கீட்டு வழங்கப்பட்டதால், 100 புள்ளி சுழற்சி முறையை 200 புள்ளி சுழற்சி முறையாக (200 Point Roster) மாற்றி தமிழக அரசு ஆணையிட்டது. இதில் தான் குழப்பம் ஏற்பட்டது. 200 புள்ளி சுழற்சி முறை இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்ட போது, ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வந்த 100 புள்ளி சுழற்சி முறையின் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தால், எந்த குழப்பமும் ஏற்பட்டிருக்காது. ஆனால், 100 புள்ளி சுழற்சி முறை அப்படியே கைவிடப்பட்டு, 200 புள்ளி சுழற்சி முறை புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டதால், முந்தைய முறையில் எந்த பிரிவுக்கெல்லாம்  இட ஒதுக்கீடு கிடைத்ததோ, அவர்களுக்கே மீண்டும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. முந்தைய முறையில் இட ஒதுக்கீடு பெறாத மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டது.
பல்கலைக்கழகங்களில் மிகக்குறைந்த பணியிடங்களே இருக்கும் என்பதால், ஒரு பிரிவினருக்கு ஒரு முறை இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டால், அடுத்த 30 ஆண்டுகளுக்கு அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்காது. அதுமட்டுமின்றி, ஒரு பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டை, இன்னொரு பிரிவினருக்கு வழங்குவதால் அவர்களுக்கிடையே தேவையற்ற பகைமை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டை கடைபிடிப்பதில் நடக்கும் முறைகேடுகளை களையும்படி கடந்த 17 ஆம் தேதி நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். ஆனால், குறைகளை சரி செய்ய வேண்டிய தமிழக அரசும், சென்னைப் பல்கலைக்கழகமும் அவசர, அவசரமாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது கண்டிக்கத்தக்கது.

எனவே, சென்னை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப இன்று முதல் நடைபெற்று வரும் நேர்காணல்களை ரத்து செய்ய அரசு உத்தரவிட வேண்டும். 200 புள்ளி சுழற்சி முறையைகைவிட்டு, ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வந்த 100 புள்ளி சுழற்சி முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டை நிர்ணயித்து பேராசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்,

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: