Wednesday, August 1, 2012

ரெட்டி சகோதரர்களை மிஞ்சிய மதுரை கிரானைட் ஊழல்: சிபிஐ விசாரணை கோரும் ராமதாஸ்

சென்னை: கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்களின் இரும்பு தாது சுரங்க ஊழலை மிஞ்சும் அளவிற்கு மதுரையில் கிரானைட் ஊழல் நடைபெற்று இருக்கக்கூடும் என்று தெரிகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் சட்டவிரோதமாக குவாரி அமைத்து கிரானைட் கற்கள் வெட்டி கடத்தப்பட்டதில் அரசுக்கு சுமார் ரூ. 16,338 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த சகாயம் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.
மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி அமைக்க உரிமம் பெற்றவர்கள் ஆளும் கட்சியினரையும், அதிகாரிகளையும் அனைத்து வகைகளிலும் குளிர்வித்து, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக கிரானைட் கற்களை வெட்டி கடத்துவதாக நீண்ட நாட்களாகவே குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
ஆனால் தற்போது அரசு புறம்போக்கு நிலங்கள், பொது நடைபாதைகள், தலித்துகளுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் போன்றவற்றையும் கிரானைட் குவாரி உரிமையாளர்கள் ஆக்கிரமித்து கிரானைட் கற்களை வெட்டி எடுத்திருக்கிறார்கள் என்றும், இதைத் தடுக்க வேண்டிய வருவாய்த்துறை, கனிம வளத்துறை அதிகாரிகளே பயந்துக் கொண்டும், பணம் பெற்றுக்கொண்டும் இந்த கடத்தலுக்கு துணை போயிருக்கிறார்கள் என்றும் மாவட்ட கலெக்டரே குற்றம் சாட்டியிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
மாவட்ட கலெக்டர் வெளியிட்ட தகவல்களை வைத்து பார்க்கும்போது ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெரும் அரசியல் புயலை ஏற்படுத்திய ரெட்டி சகோதரர்களின் இரும்பு தாது சுரங்க ஊழலை மிஞ்சும் அளவிற்கு கிரானைட் ஊழல் நடைபெற்று இருக்கக்கூடும் என்று தெரிகிறது.
முந்தைய ஆட்சியில் மேலூர் பகுதியில் நடைபெறும் கிரானைட் ஊழல் பற்றி அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான ஜெயலலிதா பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.
சட்டப்பேரவை தேர்தலின்போதும் கிரானைட் ஊழலை முன்வைத்து பிரசாரம் செய்தார். அதிமுக அரசு பதவி யேற்ற பின்னர் மேலூர் கிரானைட் ஊழல் தொடர்பாக திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை வெளியிட்ட அப்போதைய தொழில்துறை அமைச்சர், இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.
ஆனால் அதன் பின்னர் இந்த பிரச்சனை கிணற்றில் போட்ட கல்லாவிட்டதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை. மாநிலத்தின் நிதி நெருக்கடியை போக்குவதற்காக மக்கள் தலையில் ரூ. 20,000 கோடி வரிச்சுமை, குடும்பங்களை சீரழிக்கும் மது விற்பனை போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் தமிழக அரசு, கண்ணுக்கு தெரிந்து நடைபெறும் கிரானைட் ஊழலையும், அதனால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பையும் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
இந்த ஊழலை தடுத்து அரசின் வருவாயை பெருக்குவதற்காக அனைத்து குவாரிகளிலும் தமிழ்நாடு கனிமவள நிறுவனம் மூலமாக கிரானைட் கற்களை வெட்டியெடுத்து விற்பனை செய்ய வேண்டும்.
அரசுக்கு ரூ. 16,338 கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்திய கிரானைட் ஊழலில் உயர் அதிகாரிகளுக்கும், பெரும் புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: