Sunday, July 29, 2012

போதை பாக்குகளுக்கு தடை கோரி ராமதாஸ் போராட்டம்


 பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இந்தியாவில் மிகப்பெரிய உயிர்க் கொல்லியாக குட்கா மற்றும் போதை பாக்குகள் உருவெடுத்துள்ளன. போதைப் பாக்குகளில் புகை யிலை, சுண்ணாம்பு போன்றவை கலந்திருப்பதால் அவை புற்றுநோயை உருவாக்கும் தொழிற் சாலை களாக திகழ்கின்றன.
போதைப் பாக்குகளின் தீமையை உணர்ந்த மத்திய அரசு, அவற்றை தடை செய்வதற்கு வசதியாக உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் விதி முறைகள் -2011 என்ற பெயரில் புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது.

இந்த விதிமுறைகளின்படி குட்கா, போதைப் பாக்குகள் மற்றும் பிற புகையிலை பொருட்கள் தடை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை பயன்படுத்தி கடந்த சில மாதங்களில் மத்தியபிரதேசம், கேரளா, பீகார், மராட்டியம், இமாச்சலபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, சண்டிகார், சத்தீஸ்கர் ஆகிய 9 மாநிலங்கள் போதைப் பாக்குகளுக்கு தடை விதித்துள்ளன.

ஆந்திரா, அசாம், ஒரிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் போதைப் பாக்குகளுக்கு தடை விதிப்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றன.

மத்திய அரசின் விதிமுறைகளை பயன்படுத்தி தமிழ்நாட்டில் குட்கா, போதைப் பாக்குகள் மற்றும் பிற புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசை இரண்டு முறை அறிக்கைகள் மூலம் நான் வலியுறுத்தியிருந்தேன்.
முன்னாள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மே 31-ந்தேதியும், ஜூலை 16-ந்தேதியும் தமிழக முதல் - அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால் போதைப் பாக்குகளை தடை செய்ய தமிழக அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாய் மற்றும் தொண்டை புற்றுநோய் தாக்குவதற்கு போதைப் பாக்குகள்தான் 90 விழுக்காடு காரணம் என்பதால், அதை தடுத்து நிறுத்தவேண்டிய பெரும் கடமை தமிழக அரசுக்கு உண்டு.
எனவே குட்கா, போதைப் பாக்கு மற்றும் பிற புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கக்கோரி, பசுமை தாயம் அமைப்பின் சார்பில் வரும் ஆகஸ்டு 2-ந்தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை நினைவரங்கம் எதிரில் தொடர் முழுக்க போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த போராட்டத்திற்கு நான் தலைமை ஏற்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: