Saturday, July 7, 2012

தமிழ்நாட்டை குடிகார நாடு என்கிற தமிழ்நாடு என்றால் பொருத்தமாக இருக்கும்! ராமதாஸ் பேச்சு!




மதுக்கடைகளுக்கு 11ந் தேதி பா.ம.க. சார்பில் பூட்டுப் போடும் போராட்டத்தை விளக்கி கூடுவாஞ்சேரி கூட்டுரோடு பகுதியில் பா.ம.க. பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது: 

இளைஞர்களை கெடுக்கும், இளம் விதவைகளை உருவாக்கும், விபத்துக்களை ஏற்படுத்தும், உழைக்கும் மக்களை சுரண்டும், தமிழ் மக்களை சீரழிக்கும் குடி மக்களை குடிகார மக்களாக்கும் அரசு மதுபான கடைகளுக்கு வருகிற 11 ந்தேதி பூட்டு போடும் போராட்டம் நடைபெற உள்ளது.

நாங்கள் மக்களை பற்றி கவலைபடுகிறோம். சாராயம் குடிக்க கூடாது என்று மக்கள் மத்தியில் சொல்கிறோம். இளைஞர்களிடத்தில் சொல்கிறோம். சாராய கடைகளை மூடு என்று சொல்கிறோம். அதற்காக போராட்டம் நடத்துகிறோம்.

சமூக பிரச்சினைகளுக்கான கூட்டம், வாழ்கின்ற சமூகத்தில் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இளைஞர் பாதிக்கப்படுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கவலை கரிசனம் நமக்கு மட்டும்தான் உண்டு. வேறு யாருக்கும் இருக்காது. கடந்த ஆண்டு டாஸ்மாக் மூலம் ரூ. 18 ஆயிரம் கோடி, அடுத்த வருடத்திற்கு ஒரு இலக்கு வைத்துள்ளனர். 2013 ல் ரூ. 21 ஆயிரம் கோடி கிடைக்கும்.
தெரு தெருவாக சாராய கடைகளை திறந்து குடி மக்களாக ஆக்கி விட்டார்கள். தமிழகத்தையே சீரழித்து விட்டார்கள். தமிழ்நாட்டை குடிகார நாடு என்கிற தமிழ்நாடு என்றால் பொருத்தமாக இருக்கும்.

தமிழகத்தில் மது வெள்ளமாக ஓட அரசியல்வாதிகள் பணத்தில் மிதக்கிறார்கள். இந்த பிரச்சினையை தமிழ் நாட்டில் பா.ம.க. மட்டும்தான் எடுத்து சொல்கிறது. பா.ம.க. 1989 ல் உதயமானது. 2 மாதம் கழித்து அக்டோபர் 2 ந்தேதி காந்தி பிறந்த நாளன்று பெண்களை கொண்டு தமிழ்நாடு முழுவதும் மது ஒழிப்பு போராட்டம் நடத்தினோம். நமது கட்சிக்கு சமூகத்தை பற்றிய கவலை இருக்கிறது.

பா.ம.க. சமூக இயக்கம். இளைஞர்களுக்கு வழி காட்டுவது தொடர்ந்து 22 வருடமாக செய்து கொண்டிருக்கிறது. 13 வயது சிறுவன் கூட குடிக்கின்றான். சாராய கடைகளை இவர்கள் மூட மாட்டார்கள். நாம்தான் மூட வேண்டும். இளைஞர்களை கெடுக்கும் உழைக்கும் மக்களை சுரண்டும், தமிழ் மக்களை சீரழிக்கும், குடிமக்களை குடிகார மக்களாக்கும் அரசு மதுபான கடைகளுக்கு 11 ந்தேதி பூட்டு போடும் போராட்டம் அறவழியில் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: