Friday, December 19, 2014

வெட்கமின்றி பேசும் ராஜபக்சே; இனப்படுகொலையை உலகத் தமிழர்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்; ராமதாஸ்

வெட்கமின்றி பேசும் ராஜபக்சே; இனப்படுகொலையை உலகத் தமிழர்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்; ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்

இலங்கை அதிபர் தேர்தலையொட்டி முல்லைத்தீவு மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்ட இனப் படுகொலையாளன் இராஜபக்சே, கடந்த காலங்களில் நடந்ததை தமிழர்கள் மறந்துவிட வேண்டும்; இலங்கையின் வளர்ச்சிக்காக ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இலங்கை அதிபராக இரு முறை பதவி வகித்து இப்போது மூன்றாவது முறையாக அப்பதவியை கைப்பற்றத் துடிக்கும் ராஜபக்சேவின் இந்தப் பேச்சு அவரது ஆணவத்தையும், தமிழர்களை மிரட்டும் மனப்பான்மையையும் தான் காட்டுகிறது. அதுமட்டுமின்றி, ஈரான், லிபியா, எகிப்து ஆகிய நாடுகளில் நடந்தது போன்ற மக்கள் புரட்சியை ஒருபோதும் இலங்கையில் அனுமதிக்கப் போவதில்லை என்றும் அச்சுறுத்தும் தொனியில் பேசியிருக்கிறார். 

தமிழர்களுக்கு ஒருபோதும் சம அதிகாரமும், சம உரிமையும் வழங்க முடியாது என்பதை பல்வேறு தருணங்களில் தெளிவுபடுத்தியுள்ள இராஜபக்சே, இப்போது இப்படி கூறுவதன் மூலம் எந்த உரிமையும் இல்லாத அடிமைகளாக வாழப் பழகிக் கொள்ளுங்கள்; ஆட்சியாளர்களுக்கு எதிராகவோ, உரிமைகளைக் கோரியோ போராட நினைக்காதீர்கள் என்பதை மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார். மகிந்த இராஜபக்சேவின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

துரோகங்களையும், சதிகளையும் மன்னித்து, மறப்பது தான் தமிழர்களின் குணம் ஆகும். ஆனால், ஈழத் தமிழர்களுக்கு இராஜபக்சே செய்த கொடுமைகள் கற்பனை செய்துபார்க்க முடியாதவை. ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை கொடூரமான முறையில் படுகொலை செய்ததுடன், போரில் தப்பிய மூன்றரை லட்சம் தமிழர்களை முகாமுக்குள் அடைத்து வைத்து கண்ணியமான வாழ்க்கையை வாழ விடாமல் தடுத்தவன் தான் இந்த இராஜபக்சே. போர் முடிந்து ஐந்தரை ஆண்டுகள் ஆன போதிலும் தமிழர்கள் இயல்பான வாழ்க்கையை வாழ முடியவில்லை. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு இராணுவ வீரரை நிறுத்தி அச்சுறுத்துதல், தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்குதல், கட்டாயக் கருக்கலைப்பு மற்றும் கருத்தடை செய்தல் என இன அழிப்பில் எத்தனை வகை உண்டோ அத்தனையையும் செய்து கொண்டிருக்கிறது இராஜபக்சே தலைமையிலான சிங்கள பேரினவாத அரசு.

ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை ஒட்டுமொத்த இலங்கையும் தமிழர்களின் தாயகமாக இருந்தது. அதை சிங்களர்கள் நயவஞ்சகமாக தங்களுடையதாக்கிக் கொண்டனர். அதன்பிறகும் இலங்கையின் வளர்ச்சிக்காக எண்ணற்ற பங்களிப்பை தமிழர்கள் செய்தனர். ஆனால், இதற்கெல்லாம் பரிசாக தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக்கி கொக்கரித்து கொண்டிருக்கின்றனர் சிங்களர்கள். இதையெல்லாம் மறந்துவிட்டு தமக்கு வாக்களிக்கும்படி இராஜபக்சே வெட்கமின்றி கோருகிறார். 

கடந்த தேர்தலில் தமிழர்களை படுகொலை செய்ததை சாதனையாக கூறி சிங்கள இன உணர்வுகளை தட்டி எழுப்பி வெற்றி பெற்ற அவர், இம்முறை தமிழர்களை நயவஞ்சக வலையில் வீழ்த்தி வெற்றி பெறத் துடிக்கிறார். இந்த வலையில் ஈழத் தமிழர்கள் வீழ மாட்டார்கள். அதேபோல், தமிழினத்திற்கு இராஜபக்சே செய்த இனப்படுகொலை உள்ளிட்ட கொடுமைகளை ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல.... உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். இலங்கை இனப் படுகொலைக்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரும் வரையில் ஓய மாட்டார்கள்.

ஒன்றரை லட்சம் தமிழர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு போராடும் தமிழர்களுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஆதரவுக் கரம் கொடுக்க வேண்டும். இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக நடத்தப்படும் ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணைக்கு இந்தியாவும், மற்ற நாடுகளும் உதவி செய்ய வேண்டும். தமிழீழ கோரிக்கை குறித்து உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தமிழர்களின் விருப்பத்தையும் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: