Monday, December 16, 2013

கடலூர், வேலூர் மாவட்டங்களில் மாசுபாட்டை போக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்



பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் கடலூர், வேலூர், கோவை ஆகிய மாவட்டங்களின் தொழில் பகுதிகள் மிக மோசமாக  சுற்றுச்சூழல் மாசடைந்த பகுதிகள் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இம்மாவட்டங்களில் தொழில்மாசுபாட்டின் அளவு அபாய கட்டத்தை தாண்டியிருக்கிறது.
இந்தியாவில் உள்ள தொழில்பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபாடு எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்பதை அறிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் ஆண்டுதோறும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கோவை, கடலூர், வேலூர் ஆகிய தொழில் பகுதிகளில் சுற்றுச்சூழல் மிகமோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாக நடப்பாண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்திருக்கிறது. வேலூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டு குறியீடு 80 புள்ளிகளுக்கு மேல் இருப்பதாகவும், கடலூர் மற்றும் கோவையில்  சுற்றுச்சூழல் மாசுபாட்டு குறியீடு 70 புள்ளிகளுக்கு மேல் இருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள இரசாயன தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் வேதிக் கழிவுகளால் அப்பகுதியில் உள்ள வேளாண் விளைநிலங்கள் மலட்டுத் தன்மைக் கொண்டவையாக மாறிவிட்டன. இந்த ஆலைகளிலிருந்து அடிக்கடி நச்சு வாயு வெளியேறுவதால் அருகிலுள்ள கிராமங்களில் வாழும் மக்கள் மயக்கமடைவதும், உயிருக்கு பயந்து ஊரைவிட்டு ஓடுவதும் வழக்கமான நிகழ்வுகளாகி விட்டன. அதுமட்டுமின்றி, மீனவர்கள், விவசாயிகள், குழந்தைகளுக்கு பல பாதிப்புகளுக்கு ஆளாகியியுள்ளனர்.

பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவது சாதாரண நிகழ்வாகிவிட்டது.

வேலூர் மாவட்டத்திலும் வாணியம்பாடி பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்தும், ராணிப்பேட்டையில் உள்ள இரசாயன தொழிற்சாலைகளில் இருந்தும் வெளியேறும் கழிவுகளால் வேளாண் விளைநிலங்களுக்கும் மனிதர்களுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. பாலாற்றில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுகள் வெளியிடப்படுவதால் அங்குள்ள மக்களுக்கு பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன. கோவை மாவட்டத்தின் நிலைமையும் இதேதான். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், தொழிற்சாலைக் கழிவுகளால் இம்மாவட்டங்கள் மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்றவையாகி விட்டன.
இந்த மாவட்டங்களில் தொழில் மாசுபாடு அதிகரித்து வருவதைக் கண்டித்தும், அவற்றை சரிசெய்து மக்கள் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்திலுள்ள தோல் தொழிற்சாலைகளை மூட வலியுறுத்தி கடந்த 1995 ஆம் ஆண்டு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையிலும், இரசாயன தொழிற்சாலைகளில் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கக் கோரி கடந்த 2000 ஆம் ஆண்டில் எனது தலைமையிலும் மிதிவண்டிப் பேரணிகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த போராட்டங்களின் பயனாக வேலூர் மாவட்டத்திலுள்ள தோல் தொழிற்சாலைகளை மூடும்படி உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இராசயன தொழிற்சாலைகளிலும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க ஆணையிடப்பட்டது.
இதேபோல் கடலூர் மாவட்டத்திலும்  சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக மருத்துவர் அய்யா தலைமையிலும், எனது தலைமையிலும் அண்மையில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.  இதன்பயனாக, கடலூர் மாவட்டத்தில் உள்ள இரசாயன ஆலைகளிலிருந்து கழிவுகள் வெளியேறுவதை தடுக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால், அவை எதுவும் செயல்படுத்தப்படாததால் இம்மாவட்டங்களின் சுற்றுச்சூழல் மிகவும் மோசமடைந்துள்ளது.
 இந்த மோசமான நிலைமையை மாற்ற மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. வேலூர் மாவட்டத்தில் தொழில் மாசுபாடு அதிகரித்திருப்பதால் அங்கு புதிய தொழிற்சாலைகள் அமைக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கடலூர், கோவை மாவட்டங்களிலும் அதே அளவுக்கு தொழில் மாசுபாடு அதிகரித்துள்ள போதிலும் அங்கு புதிய தொழிற்சாலைகள் அமைக்கத் தடை விதிக்கப்படவில்லை. குறிப்பாக சுற்றுச்சூழல் ரீதியாக வேலூர் மாவட்டம் கருப்பு மாவட்டம் என அறிவிக்கப்பட்ட பிறகும் நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை. மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தும் இந்த நிலை நீடிப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
அதிகரித்துவரும் சுற்றுச்சூழல் மாசுபாடு தடுக்கப்படவில்லை என்றால் ஒட்டுமொத்த தமிழகமும் வாழத் தகுதியற்ற நரகமாகிவிடும். எனவே, தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசுக்களை கட்டுப்படுத்தி, மக்கள் வாழ்வதற்கேற்ற சூழலை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: