Thursday, December 26, 2013

10 ஆண்டுக்கு மேலாக சிறையில் உள்ள ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்: ராமதாஸ்

இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் :-''கொலை வழக்கு ஒன்றில் தண்டிக்கப்பட்டு 23 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விஜயா என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணி சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி அண்மையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். ஆதரவற்ற அந்த ஏழைப் பெண் மீது சென்னை உயர்நீதி மன்றமும், நீதிபதிகளும் காட்டிய பரிவும், கருணையும் பாராட்டப்பட வேண்டியவை.விஜயாவைப் போலவே ஏராளமானோர் ஆதரவற்ற நிலையில், தண்டனைக் காலம் முடிவடைந்த நிலையிலும் விடுதலை ஆக முடியாமல் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர். அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தைச் சேர்ந்த தென்தமிழன் என்பவர் கடந்த 26 ஆண்டுகளாக திருச்சி மத்திய சிறையில் வாடிக்கொண்டிருகிறார். குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுவிட்டது.ஆயுள் தண்டனைக் காலத்தை கழித்த பிறகும் அவர் விடுதலை செய்யப்படவில்லை. தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் மனநலம் பாதிக்கப்பட்ட அவர், சிறையில் தவறி விழுந்து எழும்பு முறிந்த நிலையில் திருச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார். தன்னுணர்வற்ற நிலையில் உள்ள அவரை, மனிதாபிமானம் இல்லாமல் சங்கிலியால் கட்டிலில் கட்டி வைத்து காவல் துறையினர் கொடுமைப்படுத்துகின்றனர்.அவரை விடுதலை செய்ய எந்த தடையும் இல்லை என்பதால், அவரை விடுவிப்பது குறித்து பரிசீலனை செய்யும்படி கடந்த 2009 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால், அப்போதைய அரசு தென்தமிழனை விடுதலை செய்ய மறுத்ததன் விளைவாகவே அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்.ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரும் தண்டனைக் காலம் முடிவடைந்த பிறகும் விடுதலை செய்யப்படவில்லை. தண்டனைக் காலம் முடிந்தும் விடுதலை செய்யப்படாத ஆயுள் தண்டனைக் கைதிகளின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேல் இருக்கும். குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த பலர் தங்களின் எதிர்காலத்தை இழந்து சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர்.முந்தைய தி.மு.க. ஆட்சியின் போது 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த 662 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 2008 ஆம் ஆண்டில் அண்ணாவின் நூற்றாண்டு விழாவையொட்டி 7 ஆண்டு தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகள், 5 ஆண்டு தண்டனை முடித்த 60 வயதைக் கடந்த கைதிகள் என 744 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.ஆனால், அப்போது கூட பல்வேறு காரணங்களைக் கூறி, இவர்கள் விடுவிக்கப்படவில்லை. இவர்களில் நளினி உள்ளிட்ட பலரை விடுதலை செய்வது குறித்து ஆலோசனைக் குழுவை அமைத்து முடிவெடுக்கும்படி உயர்நீதிமன்றம் ஆணையிட்டும், சொத்தைக் காரணங்களைக் கூறி இவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு மறுத்துவிட்டது. உடனடியாக விடுதலை செய்யப்படாவிட்டால், இவர்களில் பலரும் விஜயாவைப் போன்றும், தென்தமிழனைப் போன்றும் மனநலம் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.சிறைகள் கைதிகளை திருத்துவதற்கான சீர்திருத்தக் கூடங்களாக இருக்க வேண்டுமே தவிர, சித்திரவதைக் கூடங்களாக இருக்கக் கூடாது. மேலும் சிறையில் நன்னடத்தையுடன் இருப்பவர்களை விடுதலை செய்வதால், சமுதாய அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடாது. எனவே, அவர்களின் வாழ்வில் புதிய விடியலை ஏற்படுத்தும் வகையில், பத்தாண்டுகளுக்கு மேல் சிறையிலிருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை வரும் புத்தாண்டையொட்டி தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்' என இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: