Friday, October 11, 2013

கல்லூரி முதல்வர் கொலை: மாணவர்களை நல்வழிப்படுத்தும் கல்விமுறையே அவசரத் தேவை: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே குழந்தை இயேசு பொறியியல் கல்லூரியின் முதல்வர் சுரேஷ் அதே கல்லூரியில் பயிலும்  மாணவர்களால் கொடூரமான முறையில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இது பெரும் அதிர்ச்சியையும், வேதனையும், துயரத்தையும் அளிக்கிறது.
கல்லூரியில் ஒழுங்கீனமாகவும், மாணவிகளிடம் தகாத முறையிலும் நடந்து கொண்ட ஒருமாணவர் மீது கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத அந்த மாணவர் தமது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு இந்தக் கொடூர செயலை நிகழ்த்தியிருக்கிறார். முதல்வர் சுரேஷ் படுகொலை செய்யப்பட்ட விதம் பற்றி  ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை பார்க்கும்போது, திரைப்படங்களில் வரும் வன்முறை மற்றும் கொலைக் காட்சிகள் இந்த மாணவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
மாதா, பிதாவுக்கு அடுத்த நிலையில் உள்ள ஆசிரியர்களை தங்களின் கடவுளாக மாணவர்கள் மதித்து வந்த  நிலை மாறி, ஆசிரியர்களையே படுகொலை செய்திருக்கும் நிலை உருவாகியிருப்பது ஒட்டுமொத்த தமிழகமும் கவலைப்பட வேண்டிய ஒன்றாகும். நல்லொழுக்கத்தை கற்றுத் தரும் நோக்கம் கொண்டதாக இருந்த கல்விமுறை, அதிக மதிப்பெண்களை எடுத்தால் போதும் என்ற நோக்கம் கொண்ட எந்திரத் தனமானதாக மாறியது தான் இந்த சீரழிவுக்கு முதன்மைக் காரணமாகும். கடந்த காலங்களில் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் வாரத்திற்கு இரு பாடவேளைகளிலாவது நீதி போதனை வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால், இப்போது நீதிபோதனை வகுப்புகள் என்றால் என்ன? என்பதே பெரும்பாலான மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தெரியவில்லை.
அதுமட்டுமின்றி, ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையிலான உறவுமுறை மரியாதையும், பொறுப்பும் நிறைந்த பெற்றோர் & குழந்தை உறவுமுறைக்கு இணையானதாக இருந்தது. மாணவர்கள் எவரேனும் தவறான பாதையில் சென்றால் அவர்களை ஆசிரியர்கள் திருத்துவதும், தங்களுக்கு  ஏதேனும் பிரச்சினை என்றால் அதை ஆசிரியர்களிடம் கூறி மாணவர்கள் சரி செய்து கொள்வதும் வழக்கமானதாக இருந்ததால் பள்ளிகளும், கல்லூரிகளும் ஒழுக்கத்தின் உறைவிடங்களாக இருந்தன.
ஆனால், தற்போதுள்ள பெரும்பாலான கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. மாணவர்களை பணம் பறிக்கும் எந்திரங்களாக கல்லூரி நிர்வாகங்களும், அதிக மதிப்பெண் எடுக்கும் எந்திரங்களாக பெற்றோரும் பார்ப்பதால் ஏற்படும் அழுத்தங்கள் தான் மாணவர்களை திசைமாறிச் செல்ல வைக்கின்றன. தெருவுக்குத் தெரு திறந்து வைக்கப்பட்டிருக்கும்  மதுக்கடைகளும், கல்லூரிகளுக்கு அருகிலேயே கிடைக்கும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களும், குற்றங்களை எப்படி செய்வது என்பதைக் கற்றுத் தரும் திரைப்படங்களும் மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றன.
இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்கள் 25 வயதுக்கும் குறைவானவர்கள். 35 வயதுக்குட்பட்டவர்களின் அளவு 66 விழுக்காட்டிற்கும் அதிகமாகும். இந்தியா வல்லரசாவது இவர்களின் கைகளில் தான் உள்ளது என அனைவரும் நம்பிக்கொண்டிருக்கும் நிலையில் மாணவர்கள் இத்தகைய வன்முறைப் பாதையில் பயணம் கவலையளிக்கிறது. இதற்கு ஒட்டு மொத்த சமுதாயமும் பொறுப்பேற்கவேண்டும். மாணவ சமுதாயத்தினரில் ஒரு சிலர் தான் இவ்வாறு  தவறான பாதையில் பயணிக்கிறார்கள் என்ற போதிலும், அவர்களைத் திருத்தி நல்வழிப் படுத்துவது நமது அவசர, அவசியக் கடமையாகும்.
எனவே, அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் நீதிபோதனை வகுப்புகளை மீண்டும் ஏற்படுத்துதல், மாணவர்களின் பிரச்சினைகளை அறிந்து, அவர்களுக்கு ஆலோசனைகளையும், ஆறுதல்களையும் வழங்குதல் உள்ளிட்டவை அடங்கிய கல்வி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். அத்துடன், மதுக்கடைகளை மூடவும், போதைப் பொருள் விற்பனையை ஒழிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக, தங்களின் பெற்றோர் கனவையும், நாட்டின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்ற வேண்டிய மிகப்பெரிய கடமை தங்களுக்கு இருப்பதை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட மாணவர் சமுதாயம் முன்வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: