Monday, April 11, 2011

சாதனைகளை நிகழ்த்திக் காட்டிய கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

சென்னை, ஏப். 11: மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, சாதனைகளை நிகழ்த்திக் காட்டிய கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது பற்றி அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பணம் படைத்தவர்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட எத்தனையோ வாய்ப்புகள் உள்ளன. ஆனால், ஏழைகள் தங்கள் உரிமைகளை நிலைநிறுத்திக் கொள்ளவும், விரும்புகிறவர்களை ஆட்சியில் அமர்த்தவும் கொடுக்கப்பட்ட வாய்ப்புதான் தேர்தல். அந்த வாய்ப்பை தமிழக வாக்காளர்கள் அனைவரும் பயன்படுத்தி, தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி அமைய உதவ வேண்டும்.

மக்களுக்கு நல்லாட்சியை, நிலையான ஆட்சியை வழங்கும் கட்சிகள் தி.மு.க. தலைமையிலான அணியில் இடம்பெற்றுள்ளன. இன்னொரு அணி நெல்லிக்காய் மூட்டையைப் போல ஒற்றுமை இல்லாத அணியாக உள்ளது. தேர்தல் காலத்தில்கூட ஒற்றுமையாக இல்லாதவர்கள், தேர்தலுக்குப் பின் எப்படி ஒற்றுமையுடன் இருப்பார்கள்? தி.மு.க. தலைமையிலான கூட்டணி, மாநில வளர்ச்சிக்கான சாதனைகளை நிகழ்த்திக்காட்டி சரித்திரம் படைத்த கூட்டணி. கருவில் இருக்கும் குழந்தைகள் நலன் முதல், முதியவர்கள் நலன் வரை சிந்தித்து, அதற்கான திட்டங்களை வாக்குறுதிகளாக அளித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றிய வாக்குறுதிகளை, சாதித்த சாதனைகளை எடுத்துக் கூறும் தி.மு.க. அணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். தேர்தலுக்காக மட்டும் வாக்குறுதிகளை அள்ளி வீசும் அ.தி.மு.க. அணியைப் புறக்கணிக்க வேண்டும். அப்போதுதான் தமிழகம் காப்பாற்றப்படும். இல்லையெனில், தமிழகம் இருண்டு விடக் கூடிய நிலை உருவாகும்.

தமிழர்களின் வாழ்வாதார உரிமைகள் நிலைத்திட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேற, உழவர்கள், மீனவர்கள் நலன் காப்பாற்றப்பட, பெண்களுக்கான உதவித் திட்டங்கள் தொடர, கச்சத் தீவு மீட்கப்பட, இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதார உரிமைகள் நிலைத்திட, பாதியில் நின்று போன சேதுக் கால்வாய் திட்டம் நிறைவேற தி.மு.க. அணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: