Sunday, April 10, 2011

விஜயகாந்திற்கு "அ, ஆ' தெரியாது : பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு

திட்டக்குடி:""அரசியலில் விஜயகாந்திற்கு, "அ, ஆ' தெரியாது,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

திட்டக்குடி தொகுதி வி.சி., வேட்பாளர் சிந்தனைச்செல்வனை ஆதரித்து, அவர் பேசியதாவது:திட்டக்குடி தொகுதியில் சிந்தனைச்செல்வன் போட்டியிடவில்லை. நான் நிற்கிறேன், தி.மு.க., தலைவர் கருணாநிதி நிற்கிறார் என நினைத்து நீங்கள் ஓட்டளிக்க வேண்டும். பா.ம.க., வும், வி.சி.,யும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்.தமிழகத்தில், இரு மாவட்டங்களைத் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் பிரசாரத்திற்கு சென்று வந்துள்ளேன். தொகுதியில் யாரைக் கேட்டாலும் கருணாநிதிக்குத் தான் ஓட்டு என்கின்றனர். ஏன் என்று கேட்டால் எங்களுக்கு மூன்று வேளை சோறு போட்டவர் அவர் தான் என்கின்றனர்.

கருணாநிதி உங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க, அறிவை வளர்க்க, "லேப்-டாப்' தருகிறேன் என்று சொன்னால், ஜெயலலிதா, "வீட்டிற்கு 4 ஆடு, ஒரு மாடு தருகிறேன்' என்கிறார்.நாங்கள் பூரண மது விலக்கு கொண்டுவர வேண்டுமென முதல்வரிடம் கேட்டதற்கு, அவர், "நானும் உங்கள் கொள்கை உடையவன் தான். படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவேன்' என்றார்.ஆனால், கொள்கையே இல்லாத நடிகர் கட்சித் தலைவர், மேடையில் பேசும்போது ஆடுகிறார், தள்ளாடுகிறார், தடுமாறுகிறார். தொண்டர்களை, "ஆப்' அடிக்கச் சொல்கிறார். கட்சியில் உள்ள தொண்டர்கள் அனைவரும் நல்ல தம்பிகள் தான்.

அவர்களை திருத்தி தி.மு.க.,- பா.ம.க., - வி.சி., கட்சிகளுக்கு கொண்டு வரவேண்டும். கோடம்பாக்கத்தில் இருந்து கோட்டைக்கு போவேன், கோட்டைக்கு போவேன் என அடம் பிடித்தவர், இன்று போயஸ் தோட்டத்திற்கு சென்று விட்டார். நடிகர் சொல்கிறார் நான் கதாநாயகனாக நடிக்கவில்லை என்றால், அண்ணனாக, அப்பாவாக நடிப்பேன் என்கிறார். நீ எதையாவது நடி, எங்காவது பம்பரம் விடு. உனக்கு அரசியலில் "அ, ஆ' தெரியாது.திட்டக்குடி சிந்தனைச்செல்வனை வெற்றி பெறச் செய்து பெரிய விழா கொண்டாடுங்கள் நான் வந்து பேசுகிறேன்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

ஆட்சியில் பங்கு தேவையில்லை : பா.ம.க., ராமதாஸ் திட்டவட்டம் : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதி பா.ம.க., வேட்பாளர் சங்கரை ஆதரித்து மரக்காணம், முருக்கேரி, கந்தாடு ஆகிய பகுதிகளில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் செய்தார்.

பிரசாரத்தின் போது ராமதாஸ் பேசியதாவது :தி.மு.க.,வில் மற்ற கட்சிகளுக்கு முன், முதலில் கூட்டணி வைத்தது பா.ம.க., தான். எங்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டாம், கடைசிவரை ஆதரவு தருகின்றோம் என, கூறினேன். தொகுதிகள் பிரித்த ஒரு மணி நேரத்தில் திண்டிவனம் தொகுதியை தி.மு.க., தலைமை பா.ம.க.,விற்கு ஒதுக்கியது. அடுத்த முறை இந்த தொகுதி தி.மு.க.,வைச் சேர்ந்த ரவிகுமாருக்கு ஒதுக்கலாம்.இந்த தொகுதி வெற்றி பெறும் ஓட்டுகள் மரக்காணம் நகரத்தில் தான் உள்ளன. நீங்கள் பத்தாயிரம் ஓட்டுகளை பெற்றுத் தர வேண்டும். உங்கள் பகுதியில் எந்த பிரச்னையாக இருந்தாலும் ஒரு போன் செய்துவிட்டு, தைலாபுரத்தில் வந்து என்னிடம் கூறுங்கள். உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றேன்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: