Tuesday, April 5, 2011

தி.மு.க. அணிக்கு ஆதரவு அலை: ராமதாஸ்

சென்னை, ஏப். 5: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அணிக்கு ஆதரவு அலை வீசத் தொடங்கியுள்ளது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

சென்னை, பெரம்பூர் தொகுதியில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்.ஆர். தனபாலனை ஆதரித்து மகாகவி பாரதி நகரில் செவ்வாய்க்கிழமை பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அதில் ராமதாஸ் பேசியதாவது: தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைக்கும் நேரத்தில், இது ஒரு சமூக நீதி போராட்டத்துக்கான அணி என்று முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டார். அதை உண்மையாக்கும் விதத்தில், உழைக்கும் மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடும் ஓர் அணியை அவர் உருவாக்கியுள்ளார்.

தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் மிகச் சாதாரண மக்களால்கூட பாராட்டப்படுகின்றன. ஆனால், 10 ஆண்டுகள் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலத்தில், மக்களுக்கு செய்த சாதனைகள் என குறிப்பிட்டு கூற எதுவுமே இல்லை. ஆனால், அவர்களின் ஆட்சிக் காலத்தில் ரூ.100 கோடி செலவில் நடந்த வளர்ப்பு மகன் திருமணம், கும்பகோணம் மகாமக குள சாவுகள் ஆகியவை மட்டும் எப்போதும் மறக்க முடியாத வகையில், மக்கள் மனதில் ஆழப் பதிந்து விட்டன.

தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று வந்துள்ளேன். தமிழகம் முழுவதும் தி.மு.க. அணிக்கு ஆதரவாக அலை வீசத் தொடங்கியுள்ளது. மிகப் பெரும்பாலான தொகுதிகளில் தி.மு.க. அணி வெற்றி பெற்று, ஆறாவது முறையாக கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்பது உறுதி என்றார் ராமதாஸ்.

கூட்டத்தில் வேட்பாளர் என்.ஆர். தனபாலன், தொ.மு.ச. பேரவைத் தலைவர் செ. குப்புசாமி, பா.ம.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: