Friday, April 8, 2011

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு: கருணாநிதி உறுதி

திண்டிவனம்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வைத்த வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு குறித்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக முதல்வர் கருணாநிதி உறுதி அளித்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது : தி.மு.க.,விற்கு ஆட்சி பொறுப்பை அளிப்பதற்காக இந்த கூட்டம் நடப்பதாக ராமதாஸ் கூறினார். நலிந்த, அடித்தட்டு மக்களை வாழ வைக்கும் இயக்கம் எந்த இயக்கமோ, அந்த இயக்கத்திற்கும், அதனுடன் தொடர்புடைய இயக்கங்களுக்கும் என்றென்றும் கடமை பட்டுள்ளோம் என, தலைவர்கள் கூறினர். எல்லோரும் ஓர் குலம் என்பது போல், ஒரே குரலாக உள்ளவர்கள் தான் இங்கு அமர்ந்துள்ளோம். என் குலம் இழிவாக, கேவலமாக நடந்தப்பட்ட இனம். அதே போல் தான் ராமதாஸ் இனமும், திருமாவளவன் இனமும், காதர் மொய்தீன் இனமும் நடத்தப்பட்டன. இனம், இனத்தோடு சேரும் என்பது போல் நாம் ஒன்றுபட்டுள்ளோம். ராமதாஸ், திருமாவளவன் ஆகிய இருவரையும் இணைய வைத்து, கூட்டணி ஏற்படுத்தியதாக புகழாரம் சூட்டப்பட்டது. இதை நான் ஒப்புக் கொள்கிறேன், இந்த இரு சக்திகளும் ஆதிக்க சக்திகளை வீழ்த்தக் கூடிய வல்லமை பொருந்தியவை. எனக்கு அம்பேத்கருடன் நேரடி தொடர்பில்லை. ஆனால், அம்பேத்கரின் கொள்கைகளை அரவணைத்துக் கொண்டவன் நான்.அம்பேத்கர் மீது எனக்கு காதல்.

மராட்டிய மாநிலத்தில் அம்பேத்கர் பல்கலை கழகம் துவங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, பத்து ஆண்டுகள் ஆன பின்பும் ஏற்படுத்தவில்லை. அதை கண்டித்து தி.மு.க., கிளர்ச்சி நடத்தும் என, அறிக்கை விட்டேன். உடனே நடவடிக்கை எடுப்பதாக அப்போதைய மராட்டிய கவர்னர் அலெக்சாண்டர் எனக்கு கடிதம் எழுதினார். மும்பையில் அம்பேத்கர் பல்கலைக் கழகம் அமைய நானும் ஒரு காரணம். நான் முதல்வராக இருந்த போது, முதல்வருக்காக கிரீன்வேஸ் ரோடில் கட்டப்பட்ட பங்களாவை, நான் அம்பேத்கர் பல்கலை கழக அலுவலகமாக அறிவித்தேன்.

ராமதாஸ், திருமாவளவன் உறவு தொடர்ந்திருந்தால், தமிழகத்தில் எத்தனையோ சமத்துவம் மலர்ந்திருக்கும். இனியும் இவர்கள் இணைப்பு தொடர வேண்டும். இதே போல் முஸ்லிம் லீக்கும் தொடர வேண்டும். இவர்கள், எங்களை அறிந்தவர்கள். நாங்கள், அவர்களை அறிந்தவர்கள். இனி மேல் எங்களுக்குள் சிக்கல் வரக்கூடாது. இனியும் சிக்கல் வராமலிருக்க, பொதுமக்களும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒன்றாக இருந்தீர்களே, உங்களுக்குள் என்ன கேடு வந்தது என நீங்கள் (பொதுமக்கள்) கேட்க வேண்டும். நாங்கள் ஓரணியில் இருந்தால் தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும். ராமதாஸ் ஒரு கோரிக்கை வைத்தார். அதிர்ச்சியடையும் கோரிக்கையாக இருக்கும் என, பயந்தேன். அவர் இடஒதுக்கீடு கோரிக்கையை தான் கேட்டார். இது எங்களுக்குள் சகஜமானதாகும். அவர் கேட்டு நான் மறுத்ததில்லை. ஆட்சியை நடத்த போகிறவன் என்பதில் நான் நம்பிக்கையுடன் உள்ளேன். இடஒதுக்கீடு கோரிக்கையை நாங்கள் கைவிட வில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீட்டை நிச்சயமாக நிறைவேற்றி தருவேன். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: