Sunday, January 23, 2011

விஜயகாந்தெல்லாம் ஆட்சிக்கு வர இளைஞர்கள் வாய்ப்பளித்து விடக் கூடாது-ராமதாஸ்

அரியலூர்: தமிழகத்தில் 1967க்குப் பிறகு திரைத் துறையிலிருந்து வந்த அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி நடத்தினர். இப்போது திரைத் துறையில் உள்ள விஜயகாந்த் போன்றோர் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். இதுபோன்ற செயலுக்கு இளைஞர்கள் வாய்ப்பளித்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் பங்கேற்று ராமதாஸ் பேசுகையில்,

தமிழகத்தில் 1967ம் ஆண்டுக்கு பிறகு சினிமா சம்பந்தப்பட்டவர் தான் முதல்வராகின்றனர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடிகர்கள் நாடாள வேண்டும் என்று நினைக்கவில்லை. அப்படி நினைத்தாலும் போணியாகாது. விதி விலக்காக 10 ஆண்டுக்கு முன் வரை நடிகர் ராமராவ் முதல்வராக இருந்தார். இங்கு மட்டும் தான் இந்தக்கூத்து தொடர்கிறது.

சினிமா நடிகர்கள் மாயையிலிருந்து இளைஞர்களை விடுவித்து பா.ம.க.,வில் அவர்களை இணைக்க, கிராமங்கள் தோறும் பா.ம.க., கிளை அலுவலகங்கள் ஏற்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் 1967 வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. 67க்குப் பிறகு திரைத் துறையிலிருந்து வந்த அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி நடத்தினர்.

இப்போது திரைத் துறையில் உள்ள விஜயகாந்த் போன்றோர் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். இதுபோன்ற செயலுக்கு இளைஞர்கள் வாய்ப்பளித்துவிடக் கூடாது.

இந்த நிலையை மாற்ற பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் 5 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். கல்வி, விளையாட்டு , விவசாயம், நூலகம், மருத்துவத்துக்கு எனக் குழுக்களை அமைக்க வேண்டும்.

வளர்ந்து வரும் இளைஞர்களுக்கும், கிராம மக்களுக்கும் இந்தக் குழுவினர் வழிகாட்ட வேண்டும். இதுபோன்ற செயல்களை மேற்கொண்டால் இளைஞர்கள் அசைக்க முடியாத சக்தியாக இருப்பர்.

காடுவெட்டி ஜெயங்கொண்டத்தில் போட்டி

தேர்தலில் காடுவெட்டி குரு, ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதியில் போட்டியிட உள்ளார். மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதால், பிரச்சாரத்துக்கு அவர் வரமாட்டார். அவரை வெற்றி பெறச் செய்வது உங்கள் கடமை.

சட்டசபை தேர்தலுக்குப் பிறகு பெண்களை கொண்டு, டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டமும், அதை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டமும் நடத்தப்படும். இப்போராட்டத்தை நானே முன்னின்று நடத்துவேன். அதற்காக சிறை செல்லவும் தயாராக உள்ளேன் என்றார் ராமதாஸ்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: