Sunday, January 23, 2011

கச்சத்தீவை மீட்க வேண்டும், இலங்கையுடன் உறவை முறிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த அந்நாட்டுடனான தூதரக உறவை முறித்துக்கொள்ள வேண்டும். கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டிச் செல்லும்போது அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவது உள்ளிட்ட சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இத்தகைய நடவடிக்கையைத்தான் இந்தியக் கடற்படை எடுக்கிறது.

ஆனால் தமிழக மீனவர்களை இவர்கள் நமது எதிரிகள் என்ற கோணத்தில் சிங்களக் கடற்படையினர் பார்ப்பதால்தான் இதுபோன்ற கொலைகள் நடத்தப்படுகின்றன.

கடந்தவாரம் ஒரு தமிழக மீனவரை சிங்களப்படையினர் சுட்டுக்கொன்றனர். இதற்காக இலங்கையில் உள்ள இந்தியத் தூதர் அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்து கண்டனம் தெரிவித்தார். டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை இந்திய வெளியுறவு அமைச்சகம் நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தது.

ஆனால், இலங்கை அரசோ தமிழக மீனவரை எங்களது கடற்படை சுட்டுக் கொல்லவில்லை என்று கூறிவிட்டது. இலங்கை அரசின் இந்த வாதம் பொய்யானது என்பதை நிரூபிக்க இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்தான் இதுபோன்ற தாக்குதல் கள் தொடருகின்றன. அதுவும் இந்தியக் கடலோரக் காவல்படையின் தென்மண்டலத் தளபதி எஸ்.பி. மிஸ்ரா, இனிமேல் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி அளித்த ஒருசில மணி நேரங்களிலேயே இந்தப் படுகொலை நடத்தப்பட்டிருக்கிறது.

இதற்கு மேலும் இந்த விஷயத்தில் பொறுமை காக்கமுடியாது. சிங்களப் படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும், கொன்று குவிக்கப்படுவதையும் தடுத்து நிறுத்துவதற்கான ஒரே தீர்வு கச்சத் தீவை மீட்பதும், இலங்கையுடனான தூதரக உறவை முறித்துக் கொள்வதும்தான்.

இலங்கையிலுள்ள இந்தியத் தூதரைத் திரும்பப் பெறுவதுடன், இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதரையும் உடனடியாக வெளியேற்ற வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த இதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: