Sunday, January 30, 2011

கூட்டணி குறித்து முடிவெடுக்கவில்லை-வேறு கட்சிகளும் எங்களுடன் பேசுகின்றன: ராமதாஸ்

நெய்வேலி: சட்டசபைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக வேறு கட்சிகளும் எங்களுடன் பேசி வருகின்றன. இதனால் இதுவரை கூட்டணி குறித்து நாங்கள் முடிவெடுக்கவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

டெல்லியில் முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், பாமகவும் கூட்டணியில் இடம் பெறுவதாக அறிவித்தார்.

இதுகுறித்து நெய்வேலியில் நடந்த பாமக நிகழ்ச்சியில் பங்கேற்ற டாக்டர் ராமதாஸிடம் கேட்டபோது, டெல்லியில் பேட்டியளித்த கருணாநிதி, தங்கள் விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார். இதுபற்றி பா.ம.க.வின் உயர்நிலைக் குழு கூடி விவாதித்து முடிவு எடுக்கும். கூட்டணி குறித்து இதுவரை நாங்கள் இன்னும் முடிவு எதையும் எடுக்கவில்லை.

பிப்ரவரி முதல் வாரத்தில்தான் கூட்டணி பற்றிய முடிவை அறிவிப்போம். கூட்டணியில் சேருவது பற்றி வேறு கட்சிகளின் தூதர்களும் பா.ம.க.வுடன் தொடர்பு கொண்டிருக்கின்றனர் என்றார்.

அப்படியானால் அதிமுகவும் பேசுகிறதா என்று கேட்டதற்கு பல்வேறு கட்சிகள் பேசி வருகின்றன என்றார் ராமதாஸ்.

திமுக கூட்டணியில் ஏற்கனவே பாமக இருந்தபோது, திமுக ஆட்சியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசி வந்தார் ராமதாஸ். சகித்துக் கொள்ளவே முடியாது என்ற நிலை வந்தபோதுதான் பாமகவை கூட்டணியை விட்டு நீக்கியது திமுக.அதன் பின்னர் லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் இணைந்தார் ராமதாஸ். ஆனால் படு தோல்வியைச் சந்தித்தார். ஒரு இடத்தில் கூட அவரால் வெல்ல முடியவில்லை. இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த பாமக வட்டாரம், பென்னாகரம் சட்டசபை இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 2வது இடத்தைப் பெற்று, தனது வாக்கு வங்கி போண்டியாகவில்லை என்பதை நிரூபித்து அரசியலில் தாங்களும் உயிருடன்தான் உள்ளோம் என்பதை நிரூபித்தது.

அதன் பின்னர் மீண்டும் திமுக அணியில் சேர பேரம் பேசுவதை தொடங்கியது பாமக தரப்பு. முதல்வர் கருணாநிதியை பாமக எம்.எல்.ஏக்கள் சந்திப்பு என்ற போர்வையில் பாமக வட்டாரம் சந்தித்து தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசியது. அதன் அடிப்படையிலேயே மீண்டும் பாமகவை கூட்டணியில் சேர்க்க முன்வந்தார் கருணாநிதி. அதை நேற்று தனது வாயாலேயே டெல்லியிலும் அறிவித்துள்ளார். இந்தநிலையில், வேறு கட்சிகளின் தூதர்களும் தங்களை அணுகியிருப்பதாக கூறியுள்ளார் ராமதாஸ்.

படுத்துக்கொண்டே வெல்வோம்

முன்னதாக நெய்வேலியில் நடந்த பாமக பெண்கள், இளைஞர்கள் பயிற்சிக் கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில்,

வன்னியர்களுக்கு இருக்கும் தகுதி வேறு யாருக்கும் இல்லை. வன்னியர்களுக்கு தகுதி இல்லையென்றால் வேறுயாருக்கும் தகுதி கிடையாது. கட்டி வா என்றால் வெட்டிக் கொண்டு வரும் சமுதாயம் நம் சமுதாயம்.

நெய்வேலி தொகுதியில் பாமக தனித்து போட்டியிட்டாலும் படுத்துக் கொண்டே வெற்றிபெறுவோம்

பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.யில் ஒருவர் கூட உயர் பதவியில் இல்லை. இந்நிறுவனத்தின் தலைவராக ஒரு வன்னியர் வரவேண்டும் அதற்கு பா.ம.க. பாடுபடும்.

அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கச் செய்யவேண்டும் என்பதே எங்களது குறிக்கோள். பாமக தலைமையில் ஆட்சி அமையும்போது, அம்பானி வீட்டு பிள்ளைகளுக்கு கிடைக்கின்ற கல்வி நம்மை போன்ற ஏழை, எளிய மக்களுக்கும் கிடைக்கச் செய்வோம்.

தனியாக டியூசன் எடுப்பவர்களை சிறையில் அடைப்போம். வீட்டுப் பாடம் ரத்து செய்யப்படும், தினமும் 2 மணி நேரம் விளையாட்டு. இதுபோன்ற சமச்சீர்க் கல்வி நடைமுறைப்படுத்தப்படும் என்று பேசினார் ராமதாஸ்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: