Friday, June 27, 2014

அரசு போக்குவரத்து கழகங்களை தனியார்மயமாக்கினால்


 
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’சென்னையில் நேற்று நடந்த அரசு நிகழ்ச்சியில் 463 புதிய பேருந்துகளை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்திருக்கிறார். ஒருபுறம் அரசுப் போக்குவரத்துக் கழகங்களிடம் உள்ள 40 விழுக்காடு வழித்தடங்களை தனியாருக்கு தாரை வார்க்க அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக காரணம் காட்டி, 40 சதவீத வழித்தடங்களை தனியார்மயமாக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
அதாவது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் இயக்கப்படும் 19,507 வழித்தடங்களில் சுமார் 7800 வழித்தடங்கள் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட உள்ளன.
இவ்வளவு வழித்தடங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டால், அரசுப் பேருந்துகளைவிட தனியார் பேருந்துகளின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும். அப்பேருந்துகள் தங்களது விருப்பம் போல கட்டணம் வசூலிக்கத் தொடங்கினால் ஏழைகள் பேருந்துகளில் பயணம் செய்வதே எட்டாக்கனியாகி விடும்.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்க வேண்டிய தேவையே இல்லை. அரசு போக்குவரத்துக் கழகங்கள் மக்களுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்டனவே தவிர லாபம் ஈட்டுவதற்காக தொடங்கப்படவில்லை. எனவே, போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பாக சேவை செய்கின்றனவா என்பதைத் தான் பார்க்கவேண்டுமே தவிர லாபம் ஈட்டுகின்றனவா? என்று பார்க்கக் கூடாது.
ஒருவேளை போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்கினாலும் நிர்வாகச் சீர்திருத்தம் மூலமாக அவற்றை சரி செய்ய வேண்டுமே தவிர, தனியார் மயமாக்க முயற்சிக்கக்கூடாது. ஒரு லட்சத்து 35 ஆயிரம் ஊழியர்களுடன் செயல்பட்டு வரும் போக்குவரத்துக் கழகங்கள் தான் தமிழகத்தின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் ஆகும். இவை தனியார்மயமாக்கப்பட்டால் ஊழியர்களுக்கு மட்டுமின்றி, மக்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.
இதற்கு முன் 2001–2006 ஆட்சிக் காலத்தின்போது அரசுப் போக்குவரத்துக் கழகங்களிடமுள்ள வழித்தடங்களில் 50 விழுக்காட்டை தனியார் மயமாக்க அரசு முயன்றதும், நீதிமன்றத்தின் உதவியுடன் அதை தொழிற்சங்கங்கள் தடுத்து நிறுத்தியதும் நாடறிந்த வரலாறு ஆகும். அதையெல்லாம் மறந்துவிட்டு, மீண்டும் அத்தகைய நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கினால், அது தேன் கூட்டின் மீது கல் எறிவதற்கு சமமானதாகும்.
அத்தகைய சூழலில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் தனியார் மயமாக்கப்படுவதைக் கண்டித்து அனைத்து போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை திரட்டி மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை பாட்டாளி தொழிற்சங்கம் நடத்தும்; மக்களின் சொத்தான போக்குவரத்துக் கழகங்களை காப்பதில் வெற்றி பெறும் என எச்சரிக்கிறேன்’’என்று கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: