Thursday, August 22, 2013

அதிக எண்ணிக்கையில் அரசு கல்லூரிகளை தொடங்க வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் 22.08.2013 வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னையில் கடந்த வாரம் நடைபெற்ற சென்னை பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பல்கலைக் கழக கல்வியின் உலக மையமாக தமிழகத்தை உருவாக்குவதே தமது அரசின் நோக்கம் என்று கூறியிருந்தார்.
முதலமைச்சரின் இந்த தொலைநோக்குப் பார்வை மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. ஆனால், தமிழகத்தின் கல்வி நிலைமை குறித்த உண்மைகள் மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் தான் அளிக்கின்றன.
சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தில் நடப்பாண்டில் 8 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஏப்ரல் 8ஆம் தேதி அவை விதி எண் 110&ன் கீழ் அறிக்கை படித்த முதலமைச்சர், நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதுடன் கூடுதலாக 4 கல்லூரிகளையும் சேர்த்து மொத்தம் 12 கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி, சிவகாசி, கோவில்பட்டி, கடலாடி, முதுகுளத்தூர்,  திருவாடானை, கரம்பக்குடி, ஓசூர், குமாரபாளையம், காங்கேயம், உத்திரமேரூர், பேராவூரணி ஆகிய 11 இடங்களில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளும், காரிமங்கலத்தில் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரிகளும் அமைக்கப்பட்டு மாணவர் சேர்க்கையும் 2 மாதங்களுக்கு முன்பே முடிவடைந்துவிட்ட நிலையில் இன்று வரை புதிய கல்லூரிகள் திறக்கப்பட வில்லை.
இதேபோல் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரிலும், கடலூர் மாவட்டம் திட்டக்குடியிலும் அமைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளும் இன்னும் திறக்கப்படவில்லை.

தமிழகத்தின் மற்ற கல்லூரிகள் திறக்கப்பட்டு 50 நாட்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், இக்கல்லூரிகள் திறக்கப்படாததால் அதில் சேர்ந்த மாணவ, மாணவியரின் படிப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது. புதிய கல்லூரிகளை தமிழக முதலமைச்சர் தான்  காணொலி கலந்தாய்வு முறையில் தொடங்கி வைக்க வேண்டும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கூறிவிட்டதாகவும், ஆனால், கடந்த 50 நாட்களுக்கு மேலாக முதலமைச்சர் சென்னையில் இல்லாததால்  இக்கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. முதலமைச்சர் ஒருவருக்காக மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் படிப்பு பாழடிக்கப்படுவது கண்டிக்கத்தக்கதாகும்.
அதுமட்டுமின்றி, புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகளை தொடங்குவதாக அறிவிக்கும் தமிழக அரசு அவற்றை பின்னர் ஏதேனும் பல்கலைக் கழகத்துடன் இணைத்து உறுப்புக் கல்லூரிகளாக மாற்றி விடுகிறது. அரசு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு விட்டதால் பல்கலைக் கழகங்கள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், புதிதாக இணைக்கப்படும் உறுப்புக் கல்லூரிகளில் போதிய வசதிகளை செய்து தர முடிய வில்லை. கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் 22 அரசு  கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டு, உறுப்புக் கல்லூரிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் மொத்தம் 35 உறுப்புக் கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றில் எதிலும் அடிப்படை வசதிகள் கூட இல்லை. நெம்மேலி, திருவொற்றியூர், பாப்பிரெட்டிப்பட்டி, இடைப்பாடி, பெண்ணாகரம் உள்ளிட்ட இடங்களில்  அமைக்கப்பட்டுள்ள கல்லூரிகள் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தான் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக உயர்கல்வித்துறை அமைச்சரின் சொந்தத் தொகுதியான பாப்பிரெட்டிப் பட்டி கல்லூரியில் கழிப்பறைகள் கூட கட்டித்தரப் படாததால் மாணவ, மாணவியர் பெரும் துன்பத்திற்கு ஆளாகின்றனர். உறுப்புக்கல்லூரிகள் பெரும்பாலும் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டே நடத்தப்படுவதால் கல்வித் தரமும் மிக மோசமாக உள்ளது. தமிழகத்தின் உயர்கல்விச் சூழல் இத்தகைய நிலையில் இருக்கும்போது, தமிழகத்தை பல்கலைக்கழக கல்விக்கான உலக மையமாக முதலமைச்சர் எப்படி மாற்றப்போகிறார் என்பது தெரியவில்லை.
தமிழகத்தில் 651 தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில், அரசு கல்லூரிகளின் எண்ணிக்கை 62 மட்டுமே. கடந்த 10 ஆண்டுகளில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. அரசுக் கல்லூரிகளை அமைக்காமல், அடிப்படை வசதிகள் இல்லாத பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளை மட்டும் திறப்பது தனியார் கல்லூரிகள் பெருகவே வழி வகுக்கும்.
எனவே, தமிழகத்தில் அறிவிக்கப்பட்டு  திறக்கப்படாமல் இருக்கும் 14 கல்லூரிகளையும் உடனடியாக திறப்பதுடன், மாவட்டத்திற்கு குறைந்தது 10 அரசு கலை அறிவியல் கல்லூரிகளாவது இருக்கும் நிலையை ஏற்படுத்த  வேண்டும். அதுமட்டுமின்றி, பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் என்ற முறையை ஒழித்து விட்டு, தற்போதுள்ள 35 உறுப்புக் கல்லூரிகளையும் நேரடி அரசு கல்லூரிகளாக

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: