Wednesday, August 10, 2011

திராவிட கட்சிகள் இந்தளவு பாழ்படுத்தி விட்டது.: ராமதாஸ்

வேலூர்: ""கடந்த, 49 ஆண்டுகள் தமிழகத்தை சீரழித்த திராவிட கட்சிகளை ஒழிப்பது தான் நம் வேலை,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார். வேலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க.,பொதுக் குழு கூட்டம் வேலூர் அடுத்த சத்துவாச்சாரியில்நடந்தது. பா.ம.க., மாநில தலைவர் மணி தலைமை வகித்தார். பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: திராவிட கட்சிகளால் தமிழகம் சீரழிந்து விட்டது. இப்போதாவது தனித்து போட்டி என்ற எடுத்துள்ள முடிவில் உறுதியாக இருப்பீர்களா என, என்னிடம் பலர் கேட்கின்றனர். காரிருள் உள்ள வரை, கடல் நீர் இருக்கும் வரை தனித்துப் போட்டி என்ற கொள்ளையில் இருப்போம். காங்கிரஸ் தமிழகத்தை சீரழித்து விட்டது. இதை மாற்ற வேண்டும் .காங்கிரஸை ஒழிப்பது தான் திராவிடக் கட்சிகளின் கொள்கை என, 1949ம் ஆண்டில் இருந்து கூறி வந்தவர்கள் கொள்கை அழிந்து விட்டது. எனவே, 49 ஆண்டுகள் தமிழகத்தை சீரழித்த திராவிடக் கட்சிகளை ஒழிப்பது தான் நம் வேலை. திராவிட கட்சிகளின் ஆட்சியை மாற்ற நம்மால் தான் முடியும். இலவசங்கள், சினிமா, மது கொடுத்து ஏமாற்றி விட்டனர். விவசாயம் அழிந்து விட்டது. திராவிட கட்சிகள் கட்டாய கல்வி, இலவச கல்வி, தரமான கல்வியை அளிக்கவில்லை. இதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். திராவிடக் கட்சிகளை தூக்கி எறிய வேண்டும். இந்த கட்சி கொடிகளை பார்க்கும் போது இந்த எண்ணம் நமக்கு வர வேண்டும். இப்போது சமச் சீர் கல்வி திட்டம் கொண்டு வர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் நிறைய மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், சி.பி.எஸ்.சி.,க்கு மாற்றுவதற்கு தயாராகி வருகின்றனர். இப்படி மாற்றினால் இந்த பள்ளிகள் முன் கடுமையான முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
அனைத்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் ஆங்கிலம் ஒரு மொழி பாடமாக இருக்க வேண்டும். அனைத்து பாடங்களும் தமிழில் தான் இருக்க வேண்டும். இதை அமுல்படுத்தாத பள்ளிகள் அரசுடமையாக்கப்படும் என இந்த சட்ட மன்ற கூட்டத் தொடரில் அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். இந்த தைரியம் அரசுக்கு உள்ளதா? சாயக் கழிவுகளால் நொய்யலாறு மாசுபட்டுள்ளதை தடுக்க, 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளனர். ஆனால் பாலாற்றை தூய்மையாக்க இந்த அரசு என்ன செய்தது? தமிழகம் முழுவதும் காயம்பட்டு கிடக்கின்றது.
ரணம் அதிகம் உள்ளது. திராவிட கட்சிகள் இந்தளவு பாழ்படுத்தி விட்டது. ரணத்தை ஆற்ற வேண்டிய பொறுப்பு, பா.ம.க.,வுக்கு வந்து விட்டது. வரும் உள்ளாட்சி தேர்தலில், பா.ம.க., வை மட்டும் தான் வெற்றி பெறணும். மற்ற கட்சிகளை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ., இளவழகன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் வேலு, பொன்னுசாமி, சண்முகம், அணைக்கட்டு எம்.எல்.ஏ., கலையரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 comment:

ராஜ நடராஜன் said...

பொதுவாக ராமதாஸ் அவர்களைப் பற்றிக் கருத்துக்கள் சொல்வதை விட சார்பு நிலையாளர்களிடம் கருத்தை முன் வைப்பது நல்லதென நினைக்கிறேன்.

ராமதாஸ்க்கு தூரப்பார்வையெல்லாம் கிடையாது.ஐந்து வருடங்களுக்குள் அவருக்கு எது சாதகமோ அதன் அடிப்படையிலேயே முடிவுகளை எடுக்கிறார் என்பதும் பந்தி பிரித்துக்கொண்டும்,இங்குமங்கும் தாண்டிக்கொண்டதுமே இதுவரையிலான அவரது நிலையான பொது பிம்பம்.

பாராளுமன்றத்தேர்தல் நேரத்தில் ராமதாஸ்,வை.கோ,திருமா இணைந்து செயல்பட்டிருந்தால் தமிழகத்துக்கு மூன்றாவது அணியை அறிமுகப்படுத்தியிருக்க முடியும்.குறுக்கே நின்றது எது?அவரவர் சுயநலங்களும் ஈகோக்களும்தானே!

தொலைக்காட்சிகளில் மாறுபட்ட விதத்தில் நடத்துவது ஒன்று மட்டுமே பாராட்டுக்குரியது.அதிலும் கூட பாராளுமன்றத் தேர்தலுக்கும்,சட்டசபைத் தேர்தலுக்குமிடையேயான ஈழம் குறித்த நிலைப்பாடு தகவல் பரிமாறல்களும் கூட வித்தியாசப்படுகின்றது.

பிரிப்பதில் அல்ல இணைப்பதில் நம்பிக்கை கொள்வதால் ராமதாஸ்-திருமா கூட்டணி நிலைக்குமென நம்புகிறேன்.

மஞ்கள் கலர் கண்ணுக்கு இதமாக இல்லை.வெள்ளை பின்புறம்,கருப்பு எழுத்துக்களே சிறப்பாக இருக்கும்.நன்றி.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: