Tuesday, August 2, 2011

சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி பாமக போராட்டம்- ராமதாஸ் கைதாகி விடுதலை

திண்டிவனம்: தமிழகத்தில் சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்தக் கோரி பாமக சார்பில் இன்று தமிழகத்தின் வட பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டது. டாக்டர் ராமதாஸ், திண்டிவனத்தில் போராட்டம் நடத்தி கைதானார். பின்னர் அவரை விடுவித்து விட்டனர்.

சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும், மாணவர்களுக்கு புத்தகம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த பாமக அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி தமிழகத்தின் வட பகுதிகளிலும், மேற்குப் பகுதிகளில் சில ஊர்களிலும் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாக்டர் ராமதாஸ், திண்டிவனத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

ஆடு, மாடு வேண்டாம், கல்வி வேண்டும்-ராமதாஸ்:

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், தமிழக மக்களின் பிரச்சனைகளுக்கு முதலில் குரல் கொடுப்பது பாமகதான். சமச்சீர் கல்வி கொண்டுவர வேண்டும் என்று போராடியது பாமகதான். தமிழக அரசு இலவச மாடு, ஆடு, கிரைண்டர், மிக்சி தருவதாக கூறுகிறது. தமிழக மக்களுக்கு இலவச கல்வியை மட்டும் அரசு கொடுத்தால்போதும். வேறு எதுவும் இலவசமாக தமிழக அரசு கொடுக்க வேண்டாம்.

சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இதுதொடர்பான தீர்ப்பு தாமதமாக வந்தாலும், நல்ல தீர்ப்பு வரும் என்று பாமக எதிர்பார்க்கிறது. கடந்த திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வியை சரியாக திட்டமிட்டு செயல்படுத்தியிருந்தால், தற்போது இவ்வளவு பெரிய பிரச்சனையாக வந்திருக்காது என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: