Thursday, September 23, 2010

பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கையை மறைக்க முயலும் கூட்டம்-ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை: பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 69 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் உண்மை வெளியில் தெரிந்துவிடும் என்று நினைக்கும் கூட்டம் தான், சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் தொடர்ந்து முட்டுக்கட்டைகள் போட்டு வருகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த மாட்டோம், பின்னர் தனியாக நடத்துவோம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு இந்தக் கூட்டத்தின் சூழ்ச்சி தான் காரணம் என்றும் அவர் கூறினார்.

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து வலியுறுத்த அனைத்து சாதி சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது.

யாதவ மகாசபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன், கொங்கு முன்னேற்ற கழகம் வி.ஆர்.பாலசுப்ரமணியன், தமிழ்நாடு நாடார் பேரவை செயலாளர் புழல் ஏ.தர்மராஜ், அகில இந்திய தேவர் பேரவை நிறுவனர் வி.ராமகிருஷ்ணன், நாயுடு மக்கள் சக்தி இயக்கம், செங்குந்தர் மகாஜன சங்கம், முத்தரையர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்பட 38 சமுதாய சங்கங்ளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

1931க்குப் பிறகு ஆதிக்கம் செலுத்திய கூட்டம் (முற்பட்ட சாதியினர்) சாதிவாரி கணக்கெடுப்பை நிறுத்திவிட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் நாட்டின் ஒற்றுமை சீர்குலைந்து விடும் என்று அந்தக் கூட்டத்தினர் கூறும் காரணம் உண்மையல்ல. இதர பிற்பட்டோர் 69 சதவீதத்திற்கு மேல் இருக்கும் உண்மை தெரிந்துவிடும் என்று நினைக்கிறார்கள். அதனால் தான் சூழ்ச்சி செய்து நிறுத்தி வருகிறார்கள்.

மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க மாட்டோம், பின்னர் தனியாக எடுப்போம் என்று கூறிவிட்டது. இதில் தான் சூழ்ச்சி உள்ளது.

இந்த கணக்கெடுப்பை நடத்த ரூ.2,500 கோடி செலவாகும் என்று சொல்கிறார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இதை நடத்தினால் அவ்வளவு கோடிகள் தேவைப்படாது.

தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் ஆதிக்க சமூகத்தினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப்போட்டு நிறுத்தி விடுவார்கள்.

இதனால் இப்போது எடுக்கும் கணக்கெடுப்பிலேயே சாதி- ஓபிசி, சாதி பிரிவு என்ன? என்று போட்டுவிட்டாலே போதும். ஆனால், நம்மை ஏமாற்ற நினைக்கிறார்கள். தனியாக எடுக்கும் கணக்கெடுப்பிலும் தலையை மட்டும் எண்ணுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. சமூக பொருளாதார நிலையையும் கணக்கில் எடுக்க வேண்டும்.

எல்லோருக்கும் உரிமைகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அதற்கு அனைத்து சமுதாயத்தினருக்கும் பொருளாதார நிலைகளுடன் கூடிய சாதிவாரி கணக்கு அரசிடம் இருக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.

பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: ப்ரவரியில் தொடங்க இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பை சேர்த்து நடத்தாமல் தனியாக நடத்துவது என்று அறிவித்துள்ள முடிவை மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.

அதோடு சமூகப் பொருளாதார அந்தஸ்து குறித்த புள்ளிவிவரங்களோடு கணக்கெடுப்பு நடத்தினால் தான் உரிய பலன் விளையும் என்று அறிஞர்கள் தெரிவித்துவரும் கருத்தையும் மத்திய அரசு அலட்சியப்படுத்தாமல், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

மத்திய அரசு இந்த பணியை மேற்கொள்ளும் வரை காத்திருக்காமல், தமிழகத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள காலக்கெடுவுக்குள்ளாக, அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முழு விவரங்களோடு கூடிய சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திட மாநில அரசு முன்வர வேண்டும். அதற்கான உத்தரவை தமிழக அரசு காலதாமதமின்றி பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் மீண்டும் பேசிய டாக்டர் ராமதாஸ், இந்த முடிவை தமிழக அரசு காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2க்குள் தமிழக அரசு வெளியிட வேண்டும்.

தந்தை பெரியாரிடம் பாடம் படித்த முதல்வர் கருணாநிதி சமூக நீதிக்காக குரல் கொடுப்பவர். எனவே உடனடியாக தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்த மாதம் 11ம் தேதி முதல்வரை அனைத்து சமுதாய தலைவர்களும் சந்தித்து வலியுறுத்துவோம்.

அதன் பின்னரும் இதுபற்றி அறிவிப்பு வரவில்லை என்றால் அக்டோபர் 21ம் தேதி அனைத்து சமுதாய சங்கத்தினரும் இணைந்து சென்னையில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றக்கோரி போராட்டம் நடத்துவோம் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: