Wednesday, September 1, 2010

விளைநிலங்களை கையகப்படுத்துவதை எதிர்க்கும் ராகுலை கண்டிப்பாரா கருணாநிதி?: ராமதாஸ்

திருப்பத்தூர்: அஜித்சிங் உள்ளிட்ட தலைவர்களும், ராகுல்காந்தியும் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை எதிர்க்கிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தி விளைநிலங்களை எடுக்காதே! விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே!! என்று டெல்லியிலே முழங்கிய அனைத்துக்கட்சி தலைவர்கள், அதே மாதிரி ஒரிசாவில் மலைசாதி மக்களுக்கு சொந்தமான நிலங்களையும் வளங்களையும் சுரண்டாதே என்று முழக்கமிட்டுள்ள ராகுல்காந்தியையும் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று சொல்வதற்கு முதலமைச்சர் முன்வருவாரா? என்று கேட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வந்த டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

தமிழகத்தில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போது தான் 69 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். பாலாறு பிரச்னையில் நீதி மன்றம் தற்போது கொடுத்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி தமிழக அரசு அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

வேலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க கோரி என் தலைமையில் அக்டோபர் மாதம் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் வன் முறையைத் தூண்டும் அரசியல் கட்சிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கட்டும். தமிழகத்தில் பல்வேறு புரட்சிகள் ஏற்பட்டுள்ளது போல இப்போது போதை புரட்சி ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு 39 வகையான மது வகையை அறிமுகப்படுத்தி உள்ளது. நான்கு புதிய மதுபான ஆலைகள் துவங்கவும் அனுமதி வழங்கி உள்ளது. இதனால் மக்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர்.

வரும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ம.க. தலைமையில் புதிய கூட்டணி உருவாகும். இந்த தேர்தலில் பா.ம.க. ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை.

தமிழக அரசு சத்துணவு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களை போராட்டத்தில் கைது செய்து மண்டபங்களில் அடைத்து வைத்தும், பணி நீக்கம் செய்வதும் கண்டிக்கத்தக்கது.

ஸ்ரீபெரும்புதூரில் அமையவிருந்த வானூர்தி நிலையத்தை இடம்மாற்றியது ஏன்? விளைநிலங்களை கையகப்படுத்தித்தான் வானூர்தி நிலையம் அமைக்கவேண்டுமென்றால் அது தேவையில்லை. இதனை தெரிவித்தால் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக என் மீது முதலமைச்சர் புகார் கூறுகிறார்.

அஜித்சிங் உள்ளிட்ட தலைவர்களும், ராகுல்காந்தியும் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை எதிர்க்கிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தி விளைநிலங்களை எடுக்காதே! விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே!! என்று டெல்லியிலே முழங்கிய அனைத்துக்கட்சி தலைவர்கள், அதே மாதிரி ஒரிசாவில் மலைசாதி மக்களுக்கு சொந்தமான நிலங்களையும் வளங்களையும் சுரண்டாதே என்று முழக்கமிட்டுள்ள ராகுல்காந்தியையும் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று சொல்வதற்கு முதலமைச்சர் முன்வருவாரா?.

இலங்கையில் ஈழ நாடே அறிவிக்கப்பட்டு விட்டது. இனி தமிழகத்தில் நான் உட்பட யாருமே அதைப் பற்றி பேச அருகதை இல்லை. இலங்கைக்கு வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் சென்று ஒன்றும் ஆகப் போவதில்லை. தமிழர்களுக்கு எந்த நன்மையும் ஏற்பட போவதில்லை. தமிழ் மக்கள் அங்கு நான்காம் தர குடி மக்களாக உள்ளனர். அவர்களுக்கு உரிய அரசியல், அதிகாரம் மற்ற உதவிகள் கிடைக்க உலக நாடுகள் முன் வந்தால் ஒழிய ஒன்றும் செய்ய முடியாது என்றார் ராமதாஸ்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: