Saturday, March 24, 2012

இனி வரும் தலைமுறைதான் முக்கியம்: அன்புமணி

சேலம்:""பா.ம.க.,வுக்கு அடுத்த தேர்தல் முக்கியமில்லை; அடுத்து வரும் தலைமுறை தான் முக்கியம்,'' என, சேலத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பேசினார்.
சேலத்தில் நடந்த பா.ம.க., மாணவர் சங்க மாவட்ட மாநாட்டில், முன்னாள் மத்திய அமைச்சர் பா.ம.க., அன்புமணி பேசியதாவது:தொலைநோக்கு பார்வையோடு திட்டங்களைத் தீட்டி, அதை செயல்படுத்தும் வல்லமை படைத்த ஒரே கட்சி, பா.ம.க., மட்டுமே. தமிழகத்தில் ஆட்சி செய்யும் கட்சி, ஆட்சி செய்து முடித்து விட்ட கட்சி அடுத்த தேர்தலுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கும்.

பா.ம.க.,வுக்கு, அடுத்த தேர்தல் முக்கியம் இல்லை. அடுத்த தலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் சிந்தனை.தமிழகத்தை, 45 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள் என்ன செய்தன. சமீபத்தில், முதல்வர் ஜெயலலிதா, 2023 தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆவணப் படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு, 15 ஆயிரம் லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட வேண்டுமாம்.

தமிழகம் தற்போது, 1 லட்சத்து 19 கோடி ரூபாய் கடனில் மூழ்கியுள்ளது. தமிழகத்தில் வசிக்கும், 7.25 கோடி மக்களில் ஒருவரின் மீது, 17 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது. இந்நிலையில், தொலைநோக்கு திட்டத்துக்கான நிதியை எப்படி திரட்ட முடியும்?
தற்போது வருமானமே டாஸ்மாக் மட்டுமே, அதை வைத்து இந்த நிதியை திரட்ட முடியுமா. பா.ம.க., மது, சினிமா கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என்ற திட்டத்தில், கரடு முரடான பாதையை கடந்து வந்து விட்டது. தி.மு.க., - அ.தி.மு.க., - தே.மு.தி.க., போன்றவை ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

சினிமா பார்ப்பது தவறு அல்ல. ஆனால், அதை கலாசாரமாகக் கருதி கடைபிடிக்கக் கூடாது. தமிழகத்தில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என, சினிமாக்காரர்கள் தான் அதிகம் உள்ளனர்.கேப்டன் என்கின்றனர்; அவர் புட்பால் கேப்டனா, வாலிபால் கேப்டனா, ராணுவக் கேப்டனா, நான் கூட இந்த விளையாட்டுக்கெல்லாம் கேப்டனாக செயல்பட்டுள்ளேன். தமிழகத்தில், பா.ம.க., இலவசத்தை ஒரு போதும் ஆதரிக்காது. விதிவிலக்காக கல்வி, சுகாதாரம், வேளாண் விளைபொருட்களை இலவசமாக வழங்க மட்டுமே அனுமதிக்கும். பா.ம.க., ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்தே, பூரண மதுவிலக்காகத் தான் இருக்கும்.இவ்வாறு அன்புமணி பேசினார்.இந்தக் கூட்டத்தில் பா.ம.க., தலைவர் மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: