Tuesday, May 3, 2011

புதிய கல்வி கட்டணம்: மீறும் பள்ளிகளை அரசே ஏற்க வேண்டும்-ராமதாஸ்

சென்னை: புதிய கல்வி கட்டணத்தை ஏற்காத தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.


அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையிலான கட்டண நிர்ணயக்குழு, கல்விக்கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்கும் வரை பள்ளிகளை திறக்கமாட்டோம் என்றும், சமச்சீர் கல்விக்கான பாடநூல்கள் தரம் குறைவாக இருப்பதால் அக்கல்வி முறையை நடப்பாண்டில் நடைமுறைபடுத்தமாட்டோம் என்றும் தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன. இது அரசுக்கு சவால் விடுக்கும் செயலாகும்.

அனைவருக்கும் தரமான கல்வி இலவசமாகவும், கட்டாயமாகவும் வழங்கப்பட வேண்டும் என்ற உன்னத இலக்கை நோக்கிய பயணத்தின் முதல் கட்டமாகத் தமிழக அரசு சமச்சீர் கல்வியையும், மத்திய அரசு கல்வி பெறும் உரிமைச் சட்டத்தையும் கொண்டு வந்துள்ளன. சமச்சீர் கல்வியில் சில குறைபாடுகள் இருக்கலாம். இது காலப்போக்கில் களையப்பட வேண்டும்.

ஆனால், அனைவருக்கும் தரமான கல்வி வழங்கப்படுவதற்கான முயற்சியில் அரசுக்கு துணை நிற்க வேண்டிய தனியார் பள்ளிகள், தங்களது விருப்பம் போல கட்டணக் கொள்ளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோருவதும், சமச்சீர் கல்வியை தங்களது விருப்பம் போலத் தான் செயல்படுத்துவோம் என்பதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இது அனைவருக்கும் தரமானகல்வி வழங்கும் முயற்சி என்ற கற்பக மரக்கன்றை வளர்ப்பதற்காக தண்ணீர் ஊற்றுவதற்கு பதில், வெந்நீர் ஊற்றி அழிக்கும் செயல்.

தனியார் பள்ளிகளின் இந்த முயற்சிகளை முறியடிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசுக்கு உண்டு. ஏழைகளுக்கும் தரமான கல்வி கிடைக்க எதையெல்லாம் செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் மாநில அரசு செய்யவேண்டும். கட்டண உயர்வு கோரி மேல்முறையீடு செய்துள்ள 6,400 பள்ளிகளிடமும் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், புதிய கல்விக் கட்டண விவரத்தை நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையிலான குழு உடனடியாக வெளியிட வேண்டும். அக்கட்டணம் ஏழைகளாலும் செலுத்தப்பட வேண்டிய அளவிலேயே இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதை தனியார் பள்ளிகள் ஏற்றுக் கொள்வதை உறுதி செய்ய சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதற்கு பிறகும் தனியார் பள்ளிகள் வழிக்கு வரவில்லையென்றால் அவற்றுக்கு அரசின் நிதி உதவியை வழங்கி அனைத்து குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி தர வேண்டும். இல்லாவிட்டால் தனியார் பள்ளிகள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை புதிய அரசு தயக்கமின்றி மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: