Wednesday, December 15, 2010

எம்பிபிஎஸ் சேர்க்கை: பொது நுழைவுத் தேர்வு-ராமதாஸ் எதிர்ப்பு

சென்னை: மருத்துவப் படிப்பில் சேர பொது நுழைவுத் தேர்வு நடத்தும் உத்தரவை எதிர்த்துப் போராட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவம் மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு அகில இந்திய பொது நுழைவுத்தேர்வு நடத்தும், இந்திய மருத்துவ கவுன்சில் முடிவில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதன்மூலம் எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் இனி தமிழக மாணவர்கள் சேர விரும்பினால் அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மருத்துவம் உள்ளிட்ட தொழில் கல்விக்கான நுழைவுத்தேர்வு 3 ஆண்டுகளுக்கு முன்பே ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதன் விளைவாக பின்தங்கிய மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும் பெரிதும் பயனடைந்து வருகிறார்கள்.

மாநிலத்தின் உரிமையைப் பறிக்கும் வகையில், அகில இந்திய மருத்துவக் கவுன்சில் பொது நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்ற முடிவை தமிழகத்தின் மீது கட்டாயமாக திணிக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை தொடர்ந்து செயல்படுத்த முடியாத ஆபத்து ஏற்படப் போகிறது.

சமூக நீதிக்கும், இடஒதுக்கீட்டு கொள்கைக்கும் எதிரான இந்த கொள்கைத் திணிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

பொது நுழைவுத் தேர்வு என்ற இந்த கொள்கை திணிப்பை தமிழக தலைவர்கள் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும், வெற்றி காண வேண்டும்.

முதல்வர் கருணாநிதி, ஆகஸ்ட் மாதம் பிரதமருக்கு கடிதம் எழுதி, பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். ஆனால் இப்போது உச்சநீதிமன்றத்தின் அனுமதியோடு இந்த ஆபத்து நுழைய போகிறது.

இந்தத் தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு உடனடியாக மேல் முறையீடு செய்து, தடையாணை பெற வேண்டும். அத்துடன் பிரதமர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மத்திய சுகாதாரத் துறையின் மூலம் தலையிடச் செய்து, அகில இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களின் தனித்தன்மையை எடுத்துக் கூறி, பொது நுழைவுத் தேர்வு முயற்சியை கைவிடச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.

முன்பு அன்புமணி இத்துறை அமைச்சராக இருந்தபோது மருத்துவ கவுன்சிலின் இந்த முடிவை தற்காலிகமாக தடுத்து வைத்திருந்தார். இப்போது அதை நிரந்தரமாக தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால் நமது கிராமப்புற மாணவர்கள், டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், சண்டீகர் போன்ற நகரங்களின் மாணவர்களோடு போட்டி போட முடியாமல், மருத்துவம் மற்றும் மருத்துவ முதுகலை வகுப்புகளில் சேரமுடியாத பேராபத்து ஏற்பட்டுவிடும்.

இந்த ஆபத்தை தடுக்க முதல்வர் தாமதமின்றி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

நாடு முழுவதும் மொத்தமுள்ள 32,000 மருத்துவக் கல்லூரி இடங்களுக்கும் 13,000 உயர் நிலை மருத்துவப் படிப்புகளுக்கும் இனிமேல் பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: