Thursday, December 30, 2010

சென்னையைச் சுற்றி 3 புதிய மாநகராட்சிகளை உருவாக்க ராமதாஸ் கோரிக்கை

சென்னை: சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளை சென்னையுடன் சேர்ப்பதற்குப் பதில் திருவொற்றியூர், தாம்பரம், அம்பத்தூர் ஆகியவற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாநகராட்சிகளை உருவாக்கி, அவற்றை சென்னையுடன் போட்டியிடச் செய்து வளர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை புறநகர்ப் பகுதிகளை சென்னை மாநகராட்சியில் இணைப்பதன் மூலம் 9 நகரமன்றத் தலைவர்களும் 200க்கும் மேற்பட்ட நகராட்சி கவுன்சிலர்களும், 8 பேரூராட்சித் தலைவர்களும், 200க்கும் மேற்பட்ட பேரூராட்சி கவுன்சிலர்களும் உட்பட மொத்தம் 800க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் செய்து வரும் பணியினை சென்னை மாநகராட்சியின் வெறும் 93 கவுன்சிலர்களால் நிறைவேற்ற முடியுமா என்பதை அரசு எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே வேலைப்பளுவால் சென்னை மாநகராட்சிப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றன. இந்நிலையில், மாநகராட்சியை மேலும் விரிவாக்குவதால் அதன் வேலைப்பளு அதிகரிக்கும். மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் இன்னும் காலதாமதமாகும்.

சென்னையில் மழைநீரை அகற்றுவதற்கு முறையான வடிகால்கள் இல்லை. பல்வேறு பகுதிகளில் சாக்கடை நீர் குளம் போல் தேங்கியுள்ளன. சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. நகரின் பல்வேறு பகுதிகள் குப்பை மேடாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த குறைகளை எல்லாம் நீக்கி என்றைக்கு சென்னை மாநகரம் அடிப்படைத் தேவை அனைத்தையும் பூர்த்தி செய்கிறதோ அன்றைக்கு நகருக்கு அருகில் மற்றும் தொடர்ச்சியாக உள்ள உள்ளாட்சிப் பகுதிகளிலும் இத்தகைய வசதிகளை செய்து கொடுக்க அவற்றை மாநகராட்சி பகுதியோடு இணைத்தால் அதனை வரவேற்கலாம்.

ஆனால், பெருநகர தரவரிசைப் பட்டியலில் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தை சென்னை மாநகரம் பிடிக்க வேண்டும் என்பதற்காக அருகில் உள்ள பகுதிகளையும் அதனுடன் இணைப்பதில் என்ன பெருமை உள்ளது? மக்களின் அடிப்படை வசதிகளையும், கட்டமைப்பு வசதிகளையும் நிறைவேற்றுவதில் சென்னை மாநகராட்சி தன்னிறைவு பெற்று முதலிடத்தைப் பிடித்தால் அதில்தான் பெருமை இருக்கிறது.

எனவே, சென்னை மாநகராட்சியுடன் கூடுதல் பகுதிகளை இணைப்பதற்கான அரசாணையை திரும்பப் பெற வேண்டும்.

அதற்குப் பதிலாக அம்பத்தூர் சென்னை, திருவொற்றியூர் சென்னை, தாம்பரம் சென்னை என 3 புதிய மாநகராட்சிகளை உருவாக்கி அவற்றில் பேரூராட்சி, ஊராட்சி, நகராட்சிப் பகுதிகளை இணைத்து சென்னையோடு போட்டி போட்டு வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றி முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: