Monday, May 25, 2009

இலங்கை ஆட்சியாளர்களை த‌ண்டி‌க்க இ‌ந்‌தியா ஆதரவு தரவே‌ண்டு‌ம் : ராமதாஸ்

இனப்படுகொலை நடத்தி போர் குற்றம் புரிந்துள்ள இலங்கை ஆட்சியாளர்களை விசாரணைக் கூண்டில் ஏற்றி தண்டிப்பதற்கு ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் நடைபெறும் விவாதத்திற்கு, இந்தியா முழு ஆதரவு தரவேண்டும்'' என்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதாஸ் கூறியுள்ளார்.



WD

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் தமிழ் மக்களைக் கொத்துக் கொத்தாக கொலை செய்த இலங்கை ஆட்சியாளர்கள் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் வலுப்பெற்று வருகிறது. அதற்கு முதல் படியாக இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மன்றம் விசாரணை மேற்கொள்ள இருக்கிறது.

ஆயுத மோதல்களில் சிக்கி அப்பாவி மக்கள் துன்பப்படும் போது ஐ.நா. மனித உரிமை மன்றமும், உலக நாடுகளும் வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது. மனித உரிமை மீறல்கள் எங்கே நிகழ்ந்தாலும் அங்கே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்கும், மனித உரிமை மீறலுக்கான போர்க் குற்றங்களுக்கு காரணமானவர்களை அவர்களின் நடவடிக்கைகளுக்கு பதில் சொல்ல வேண்டியதை உறுதிப்படுத்துவதற்கும், உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது உலக சமுதாயத்தின் கடமையாகும்.

அந்த வகையில்தான் ஜெர்மனி விடுத்த வேண்டுகோளை ஏற்று ஐ.நா. மனித உரிமை மன்றம் அவசரமாக கூட்டப்பட்டிருக்கிறது. கனடா, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, அர்ஜென்டினா, மெக்சிகோ, மொரிசியஸ், தென்கொரியா, சுவிட்சர்லாந்து, உருகுவே, சிலி உள்ளிட்ட 17 நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த விசாரணையை தடுத்திடவும், அதன்மூலம் போர்க்குற்ற விசாரணை மற்றும் தண்டனையில் இருந்து தப்புவதற்கும் இலங்கை எதிர் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. மனித உரிமை மீறல் குற்றம் நிகழ்ந்திருக்கிறதா என்பது குறித்து விவாதிப்பதற்கு மாறாக இனிமேல் மனித உரிமைகளை பாதுகாத்திடவும், மேம்படுத்திடவும் இலங்கை அரசுக்கு நிதி உதவியும், இதர உதவிகளையும் அளிக்க வேண்டும் என்ற இலங்கையின் மாற்றுத் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாக கையெழுத்திட்டிருப்பது அதிர்ச்சியைத் தருகிறது. இலங்கையின் துரோகத்திற்கு துணைபோயிருப்பது கண்டிக்கத்தக்கது.

போராளிகளுக்கு எதிரான போர் என்று உலகத்தை ஏமாற்றிக்கொண்டு இலங்கை போர்ப்படையினர் நடத்தியுள்ள இனப்படுகொலைக்கு அவர்கள் விலைகொடுத்தே ஆகவேண்டும். இது உலகத் தமிழர்களின் உணர்வாகும். இதை புரிந்துகொண்டு இலங்கைக்கு ஆதரவான நிலையை கைவிட்டு, இனப்படுகொலை நடத்தி போர்க்குற்றம் புரிந்துள்ள இலங்கை ஆட்சியாளர்களை விசாரணைக் கூண்டில் ஏற்றி தண்டிப்பதற்கு ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் நடைபெறும் விவாதத்திற்கு இந்தியா முழு ஆதரவு தரவேண்டும்.

தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வை இந்திய அரசுக்கு, தமிழக அரசும், முதலமைச்சரும் உணர்த்த வேண்டும். ஐ.நா. மன்றத்தில் விசாரணை முடிவதற்கு இன்னும் இரண்டு தினங்கள் இருக்கின்றன. இந்த கடைசி நேரத்திலாவது உலகத் தமிழர்கள் உணர்வை இந்திய அரசுக்கு எடுத்துச்சொல்லி ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு ஆதரவான நிலையை இந்தியா கைவிட வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். இன்றைய காலகட்டத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சரின் முக்கியப் பணி இதுவாகத்தான் இருக்க வேண்டும்'' எ‌ன்று ராமதா‌‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: