Thursday, May 28, 2009

என்ன பரிகாரம் காணப்போகிறார் கலைஞர்: ராமதாஸ்

இலங்கை பிரச்சனை தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், ’’பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் ராஜபக்சே அரசு பல்லாயிரக்கணக்கில் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்திருக்கிறது. நிராயுதபாணிகளாகத் தப்பியோடிய தமிழர்களை குண்டுவீசி தாக்கி படுகொலை செய்திருக்கிறது.


இந்தக் குற்றத்திற்காக ராஜபக்சே மீதும், அவரது சகாக்கள் மீதும் போர்க் குற்ற வழக்குத் தொடர்ந்து தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு உலகம் முழுவதும் ஆதரவு திரண்டு வருகிறது.

அதற்கு முதல் படியாக ஐ.நா. அவையின் மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிரான விசாரணை தொடங்கியிருக்கிறது. கொலை வெறி பிடித்த இலங்கை அரசுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளும், தென்அமெரிக்க நாடுகளும் உலக அரங்கில் அணி திரண்டு நிற்கின்றன.

ஐ.நா. அவையின் மனித உரிமை மன்றத்தில் நடக்கும் விசாரணையை முடக்கிப் போட்டுவிட வேண்டும் என்று இலங்கை பகீரத முயற்சி மேற்கொண்டிருக்கிறது.

சீனா, பாகிஸ்தான் போன்ற நமது பகை நாடுகளுடன் இந்தியாவும் கைகோர்த்துக் கொண்டு இலங்கைக்கு ஆதரவாகச் செயல்பட்டிருக்கிறது.

இத்தகைய விசாரணை இப்போது தேவையில்லை என்கிற அளவுக்கு மனித உரிமை மன்றத்தின் முதல் நாள் விசாரணையில் இந்தியா வாதிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழர்களுக்கு எதிரான ராஜபக்சே அரசின் துரோகத்திற்கு இந்தியா துணை போகக் கூடாது என்று உலகத் தமிழர்களெல்லாம் குரல் கொடுத்து வருகிறார்கள். இதற்கு வலிமை சேர்க்கும் வகையில், ஓங்கி குரல் எழுப்ப வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக முதலமைச்சருக்கு இருக்கிறது.

இலங்கை இறையாண்மை மிக்க நாடு; அதன் உள்விவகாரங்களில் தலையிடுவதன் மூலம், அதன் இறையாண்மை, சுதந்திரம் ஆகியவை பாதிக்கப்பட்டுவிடும் என்று இந்தியப் பேரரசு தொடர்ந்து சொல்லி வருவதை தமிழகத்தின் முதலமைச்சரும், எதிரொலித்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

ஈழத் தமிழர்களை ஈவு இறக்கமின்றிக் கொன்று குவித்தது தவறு என விசாரணை நடத்த வேண்டும் என்பது இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகும் என்றால், அதற்கு காரணமான போருக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் உதவியிருப்பது உள்விவகாரங்களில், தலையிட்டதற்கு ஒப்பாகாதா?

இந்தியா எங்களுக்கு உதவி வந்திருக்கிறது என்று இலங்கைத் தலைவர்கள் பலரும், பலமுறை பகிரங்கமாகவே அறிவித்து நன்றி தெரிவித்து வந்திருக்கிறார்கள். இன்றளவும் இது மறுக்கப்படவில்லை.

இனப் படுகொலைக்கு எதிரான விசாரணையை ஆதரிப்பது இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவது என்றால், அதற்கு உதவி இருப்பதும், உள்விவகாரங்களில் தலையிட்டதற்கு ஒப்பானதுதான் என்று இந்திய அரசுக்கு உணர்த்த தமிழகத்தின் முதலமைச்சருக்குத் தைரியம் இல்லாமல் போனது ஏன்?

மனித உரிமை மீறல் குறித்த விசாரணையை முடக்கிப் போட இலங்கை மேற்கொண்டு வரும் முயற்சி தமிழர்களின் நலனுக்கு முற்றிலும் எதிரானது என்று உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்கள் நம்புகிறார்கள்;

தமிழர்களின் உணர்வுகளையும், அவர்களின் எதிர்கால நலன்களையும் கருத்தில் கொண்டு இலங்கைக்குத் துணை நிற்க வேண்டாம் என்று கடிதத்தில் வலியுறுத்தியிருக்கிற முதலமைச்சர், இப்போது ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தமிழர்களின் விருப்பத்திற்கு எதிராக இலங்கைக்கு ஆதரவான உறுதியான நிலைப்பாட்டை இந்தியா மேற்கொண்டிருக்கிறது என்ற உண்மை தெரிந்து விட்டதற்குப் பின்னர் என்ன பரிகாரம் காணப்போகிறார்?’’ என்று தெரிவித்துள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: