Tuesday, August 10, 2010

விஜயகாந்துடன் கூட்டணிக்குத் தயார்-ராமதாஸ் அறிவிப்பு

சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜயகாந்தின் தேமுதிகவுடன் கூட்டணி சேரத் தயாராக இருப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக தலைமை நிர்வாகக் குழு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. அதில் தற்போதைய அரசியல் நிலவரம், அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டப் பேரவைத் தேர்தல், கூட்டணி ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன.

பின்னர் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ் கூறுகையில்,
எங்கள் வாக்கு வங்கி சரியவில்லை. பாமகவுக்கு அடிப்படையாக இருப்பது வன்னியர்களும் வட தமிழகமும்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். எங்களுக்கு பலமே வன்னியர்கள் ஆதரவுதான்.

தமிழகத்தில் மேலவை கொண்டு வருவதற்கான தீர்மானம் எங்கள் ஆதரவு இல்லாவிட்டால் நிறைவேறி இருக்காது. ஆதரவு கொடுப்பதற்கு முன் ராஜ்யசபா சீட்டையும், மேலவையில் எத்தனை இடங்கள் என்பதையும் பேசி ஒப்பந்தம் போட நிர்பந்தப்படுத்தி இருந்தால் திமுக தரப்பில் ஒப்பந்தம் போட்டிருப்பார்கள்.

நாங்கள் அவர்களை நம்பினோம். திமுக நிர்வாக குழு கூடுவது வரை நூற்றுக்கு நூறு உறுதியளித்தார்கள். நிர்வாக குழு முடிவு வெளிவந்த அந்த நிமிடம் வரை அவர்களை நம்பினோம். ஆனால் நாங்கள் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டோம். (அன்புமணி்க்கு ராமதாஸ் ராஜ்யசபா எம்.பி. சீட் கேட்டார். ஆனால், 2013ம் ஆண்டு ராஜ்சபா தேர்தலில் தான் சீட் தருவோம். அதுவரை பாமக காத்திருக்க வேண்டும் என்று திமுக நிர்வாகக் குழுவில் முடிவெடுக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது)

இப்போது நாங்கள் எந்தக் கூட்டணியிலும் இல்லை. திமுகவுடன் கூட்டணி பற்றி பேசுவதற்காக ஜி.கே.மணி தலைமையில் ஐவர் குழு முதல்வசர் கருணாநிதியை சந்தித்தது. அப்போது மீண்டும் பேசுவோம் என்று கூறி அனுப்பினார். அவர் அழைப்பிற்காக இன்னும் காத்திருக்கிறேன்.

வரும் சட்டசபை தேர்தலில் எங்கள் தலைமையில் கூட்டணி அல்லது 3வது அணி அமைவது போன்ற எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதிமுக கூட்டணிக்கான கதவை மூடிவிட்டதாகவும் சொல்ல முடியாது.

அரசியலில் எந்தக் கதவையும் மூட முடியாது. அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது, நிரந்தர எதிரியும் கிடையாது.

தேமுதிகவுக்கும் எங்களுக்கும் எந்தப் பகையும் இல்லை. ஆளும் கட்சிகளை நாங்கள் விமர்சித்து இருக்கிறோம்.
ஆனால், எதிர்க்கட்சிகளை விமர்சித்தது இல்லை. விஜயகாந்தோடு ஒரே அணியில் இருப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றார் ராமதாஸ்.

தனித்து நின்றால் 20 கிடைக்கும்:

முன்னதாக நெல்லையில் பேசிய ராமதாஸ், திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்துப் பேச ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அழைத்தால் போய்ப் பேசுவோம் என்றார். மதுரையில் அவர் பேசியபோது காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி மலரும் என்றார். ஆனால் நேற்று தேனியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாமக தலைமையில் சமூக நீதிக் கூட்டணி வரும் என்றார்.

தேனியில் நேற்று அவர் கூறுகையில், பாமக தலைமையில் 1991 மற்றும் 1996ம் ஆண்டுகளில் சமூக நீதிக் கூட்டணி அமைக்கப்பட்டது. தமிழகத்தில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலிலும் பாமக தலைமையில் சமூக நீதிக் கூட்டணி அமையும் வாய்ப்பு உள்ளது.

பாமக தனித்துப் போட்டியிட்டாலும் 20 இடங்களைக் கைப்பற்றும். கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை. கம்யூனிஸ்ட் தனியாக கூட்டணி அமைத்ததும் இல்லை.

திமுக அரசுக்கு மதிப்பீடு கொடுக்க நான் தயாராக இல்லை. தேர்தலில் மக்கள்தான் மதிóப்பீடு வழங்க வேண்டும். டாஸ்மாக் தொழிலாளர்கள் போராட்டத்துக்கு பாமக முழு ஆதரவு அளிக்கிறது.

ஏழைகளின் நலன் கருதி பூரண மதுவிலக்கை முதல்வர் அறிவிக்க வேண்டும். முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். நதிநீர்ப் பிரச்சனைகளை சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்கள், பிரதமர் ஆகியோர் பேசித் தீர்க்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் நீதிமன்றம் மற்றும் அரசு உத்தரவின்படி நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்றார் ராமதாஸ்.

குரு மீது நடவடிக்கை-பாமவுக்கு திமுக மிரட்டலா?:

இதற்கிடையில் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மீது போலீஸார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். வன்னியருக்கு தனியாக 20 சதவீத இடஒதுக்கீடு கேட்கும் போராட்டத்தில், அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடும் வகையில் பேசினார் என்ற புகாரின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த முறை மத்திய அமைச்சர் ஆ. ராசா பற்றி காடுவெட்டி குரு பேசியதன் தொடர்ச்சியாகத்தான் திமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேற நேரிட்டது. அதைத் தொடர்ந்து குரு கைது செய்யப்பட்டு, தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் சிறை வைக்கப்பட்டார். அவ்வாறு சிறை வைக்கப்பட்டதில் தவறில்லை என்று நீதிமன்றம் கூறியது.

இந் நிலையில் மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக கூட்டணியில் பாமக சேரக்கூடும் என்ற கருத்து பரவியது. அப்போது காடுவெட்டி குரு மீதான கைது நடவடிக்கை கைவிடப்பட்டது.

இப்போது மறுபடியும் காடுவெட்டி குரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது, பாமகவுக்கு திமுக மிரட்டல் விடுக்கிறதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்தச் சூழலில் தான் இன்று பாமக நிர்வாகக் குழுக் கூட்டம் நடந்தது. இதன் பின்னர் தான் தேமுதிக, அதிமுக என எந்தக் கூட்டணிக்கும் தயார் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட்:

இந் நிலையில் இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் நிருபர்களிடம் பேசுகையில்,

வரும் சட்டசபை தேர்தலில் பாஜக, திமுக, காங்கிரஸ் நீங்கலாக தமிழகத்தில் உள்ள எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்து பேச தயாராக இருக்கிறோம் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: