Thursday, June 11, 2009

தமிழன் எங்கே இருக்கிறான்...ராமதாஸ்

சென்னை: தேர்தல் நேரத்தில் பூத் செலவுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். பூத் செலவுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கண்டுபிடித்தவனை செருப்பால் அடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

சென்னை மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டத்தில் அவர் பேசுகையில்,

தேர்தலில் நாம் வெற்றி பெறவில்லை என்ற வருத்தம் தேவையில்லை. ஆனாலும் இது நமக்கு ஒருபடிப்பினை ஆகும். இனி வரும் காலங்களிலே நாம் எப்படி எல்லாம் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். நமது கட்சி எப்படி அமைப்பு பணிகளை செய்ய வேண்டும் என்பது பற்றி நான் ஒவ்வொரு மாவட்டமாக சென்று பேசிவருகிறேன்.

அடுத்த தேர்தலில் ஒரு ரூபாய் கூட கட்சி செலவு செய்யாது. வேட்பாளரும் செலவு செய்யமாட்டார். இது கேட்பதற்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா. ஆனால் இது நடக்கப் போகிறது. நடந்து ஆகவேண்டும்.

செருப்பால் அடிக்க வேண்டும்...

தேர்தல் நேரத்தில் பூத் செலவுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். பூத் செலவுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கண்டுபிடித்தவனை செருப்பால் அடிக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தில் எந்த சுவரிலும் தேர்தல் விளம்பரம் செய்யக்கூடாது. தமிழ்நாட்டிலும் இதுபோல கொண்டுவர வேண்டும்.

பாமகவில் இளைஞர் அணியினருக்கு என்று தனி உறுப்பினர் அட்டை போட்டு இருக்கிறோம். ஒரு வட்டத்திற்கு 10 இளைஞர்களையும், 5 இளம் பெண்களையும் சேர்க்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையின் போது விலை போகாத ஏஜெண்டுகளை நாம் உருவாக்க வேண்டும்.

கொடியில்லாமல் வராதீர்கள்..

சென்னையில் அடிக்கடி போராட்டம் நடைபெறும். இந்த போராட்டங்களில் நான் கலந்து கொள்வேன். அப்போது 500 இளைஞர்கள் கொடியுடன் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். கொடியில்லாமல் யாரும் போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது.

ஏ.கே.மூர்த்தி கொடியில்லாமல் வந்தால் கூட அவரை கொடியோடு வாருங்கள் என்று சொல்ல வேண்டும்.

பல்லாவரம் கவுன்சிலர் போல் இருங்கள்...

சென்னை பல்லாவரத்தில் வேணு என்ற கவுன்சிலர் மூன்று முறையாக வெற்றி பெற்றுள்ளார். அவர் வீடுவீடாக சென்று ஏதாவது பிரச்சினையா என்று கேட்டு அந்த பிரச்சினையை தீர்த்து வைக்கிறார். இது போன்ற முறையில் செயல்பட்டால் நாம் மேயராக கூட வரலாம்.

சென்னையில் 155 வட்டத்திலும் யார் மன்ற உறுப்பினராக வரப்போகிறோம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இவ்வாறு முடிவு செய்து உங்கள் வேலையை தொடங்குங்கள். அந்த பகுதியில் உள்ள மக்களின் குறைகளை எடுத்துச் சொல்லுங்கள்.

மக்கள் பிரச்சனையை கையில் எடுங்கள்...

அந்த பகுதியில் உள்ள குப்பைகளை வாரத்திற்கு ஒரு முறை அப்புறப்படுத்துங்கள். மக்கள் பிரச்சனையை கையில் எடுத்து செயல்படுங்கள். தூக்கணாம் குருவி அற்புதமாக கூட்டை கட்டும்போது நம்மால் ஏன் கட்சியின் கிளைக் கழகங்களில் இளைஞர்களை உருவாக்க முடியாது. நடந்து முடிந்த தேர்தலில் நாம் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டுள்ளோம்.

10 நாட்களுக்கு ஒரு முறை அல்லது வாரம் ஒரு முறை நான் சென்னை வரும்போது எல்லாம் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். அந்த பொதுக்கூட்டத்தில் ஒவ்வொரு தலைப்பிலும் பேசுகிறேன். முதல்வர் கருணாநிதி இப்போது மாநில சுயாட்சி என்று சொல்லி இருக்கிறார். இது பற்றி நான் பொதுக்கூட்டத்தில் விரிவாக பேசுகிறேன் என்றார் ராமதாஸ்.

தமிழன் எங்கே இருக்கிறான்...

இந் நிலையில் தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம் சார்பில் சென்னை அண்ணா கலையரங்கத்தில் 'ஈழ தமிழின அழிப்பில் ஈடுபட்ட, துணை நின்ற இனப்பகைவர்களை அடையாளம் காண்போம்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் ராமதாஸ் பேசுகையில்,

ஈழத் தமிழர்களுக்காக பல போராட்டங்களை, பேரணிகளை, உண்ணாவிரதங்களை நடத்தினோம். ஆனால், எந்தப் பலனும் கிடைக்கவில்லை. நமது கண் முன்னாலே தமிழினம் அழிக்கப்பட்டது.

தமிழகத்தின் கிராமத்தில் இருக்கும் மக்களுக்கு இலங்கை தமிழர் பிரச்சனை என்றால் என்ன என்பது கூட தெரியவில்லை. யாருக்கும் தமிழன் என்ற உணர்வு இல்லாமல் போய்விட்டது. தமிழன், தமிழச்சி எங்கே இருக்கிறார்கள்? .

சினிமா தியோட்டர்களிலும், பார்களிலும் வாழ்க்கையை அழித்து வரும் இளைஞர்களுக்கு எப்படி தமிழ் உணர்வுகளை ஊட்ட போகிறோம். இந்த கொடுமைக்கு எப்போது முடிவு கட்ட போகிறோம்?.

தமிழீழம் மலரும். ஒரு காலத்திற்கு மேல் உருவாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதை சாத்தியமாக்குவது குறித்து ஒரு நாள் முழுவதும் உட்கார்ந்து பேசுவோம். தமிழ் ஆர்வலர்களை அழைத்து அவர்களுடன் ஆலோசனை செய்வோம் என்றார்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: