Tuesday, June 9, 2009

சீக்கியர்களுக்கு ஒரு நியாயம் தமிழர்களுக்கு ஒரு நியாயமமா?

பெற்ற தாயாக நினைத்து காங்கிரஸை தமிழர்கள் நேசிக்கின்றனர். ஆனால் மாற்றான் தாயாக தமிழர்களை காங்கிரஸ் புறக்கணித்து வருகிறது. தமிழக மக்கள் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும்” என்று ஆவேசமாய்ச் சொல்கிறார் தமிழருவி மணியன்.

”ஈழத் தமிழர்களுக்கு எதிரான வேலையை 1948லேயே காங்கிரஸ் ஆரம்பித்துவிட்டது. அப்போது அங்கு தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்-பட்டபோது, `இலங்கை உள்நாட்டு பிரச்னையில் இந்தியா தலையிடாது’ என்று நேரு ஒதுங்கிக் கொண்டார்.


ஸ்ரீமாவோவின் ஆட்சியில் தமிழர்கள் இன்னல்பட்டபோது அப்போதைய இலங்கை பிரதமர் ஸ்ரீமாவோவுடன் ஒப்பந்தம் செய்த லால்பகதூர் சாஸ்திரி இலங்கைத் தமிழ் மக்கள் அகதிகளாக வழி செய்தார்.

ஈழத் தமிழர்களுக்காக இந்திராகாந்தி அக்கறை காட்டியதும், ராஜீவ்காந்தி நடவடிக்கை எடுக்க முனைந்ததும் மறுக்கமுடியாத உண்மைகள். இந்திராகாந்தி ஈழத் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக புலிகளை ஆதரித்தது உண்மை. ராஜீவ்காந்தி புலிகளை வற்புறுத்தி ஒரு ஒப்பந்தத்தை ஜெயவர்த்தனேவுடன் உருவாக்கினார்.

அந்த ஒப்பந்தம் இலங்கை அரசிற்கும் ஈழத் தமிழருக்கும் இடையில்தான் நடந்து இருக்கவேண்டும். அதிலேயும் தவறு.போனவையெல்லாம் போகட்டும். கடந்த ஜனவரி மாதம் தொடங்கி, ஐந்து மாதங்கள் தமிழ் இனத்தையே முற்றாக ஒழிப்பது என ராஜபக்ஷே அரசு தன் ராணுவத்தைக் கொண்டு ஒரு ஈவு இரக்கமற்ற போரை நடத்தியபோது மன்மோகன்சிங்கின் இந்திய அரசு அதற்குத் துணை நின்றது. இது எந்த வகையில் நியாயம்?

விடுதலைப்புலிகளுக்காகவோ, பிரபாகரனுக் காகவோ இந்திய அரசு போராடியிருக்க வேண்டியதில்லை. ஆனால் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டு சர்வதேச போர் விதிகளும் மீறப்பட்டு, அரக்கத்தனமாக ஈழத்தமிழர்களை முற்றாக அழிக்க ராஜபக்ஷே முனைந்தபோது சோனியா காந்தியோ மன்மோகன்சிங்கோ ஒரு வார்த்தைகூட எதிர்த்துப் பேசவில்லை.

ராஜபக்ஷேவுடன் தொடர்பு கொண்டு போரை நிறுத்த வழி செய்யவில்லை.ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள உகாண்டாவில் வணிகம் செய்யச் சென்ற குஜராத்திகளுக்கு எதிராக வன்முறை நடந்த அடுத்த கணமே இந்திய அரசு துடித்தது.

பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரிஸில் வாழும் சீக்கியர்கள் தலைப்பாகைகள் அணியக் கூடாது என்று ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டபோது, பிரான்ஸ் அதிபரை நேரில் சந்தித்த பிரதமர் மன்மோகன்சிங் அந்த ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.இன்று வியன்னாவில் சீக்கியர் கூட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் விளைவாக செய்தி வந்து சேர்ந்த அந்தக் கணமே பஞ்சாப் எரியத் தொடங்கியது.

ஜலந்தர், சண்டிகர், லூதியானா போன்ற நகரங்கள் போராட்டக் களமாக மாறின. உடனே பிரதமர் மன்மோகன்சிங் அமைதி காக்க வேண்டுமென்று சீக்கியர்களுக்கு வேண்டுகோள் கொடுக்கிறார். புதிதாக அயல்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிற எஸ்.எம்.கிருஷ்ணா அவசர அவசரமாக ஆஸ்திரியாவிலிருக்கும் இந்தியத் தூதரகத்தோடு தொடர்புகொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க ஆலோசனை நடத்துகிறார்.

வியன்னாவில் ஒரு உயிர் பறிக்கப்பட்டது. 30 பேர் படுகாயம் அடைந்தார்கள். அதற்கே மத்திய அரசு துடிதுடிக்கிறது. ஆனால் தமிழகத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் இலங்கைத் தீவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். உறுப்பு இழந்தார்கள். உறவு இழந்தார்கள். ஈழப்பகுதியே மயானம் ஆகிவிட்டது.

எங்கும் தமிழர்களின் பிணக்குவியல். திசையெல்லாம் தமிழர்களின் மரண ஓலம்.ஐக்கிய நாடுகளுடைய செயலாளர் `பான் கீ மூன்’ நேரில் சென்று இலங்கை நிலவரங்களைக் கண்டு நெஞ்சம் துடித்தார். இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் உணவு, தண்ணீர், மருந்து எதுவும் இன்றி மரணத்தோடு போராடுகிற நிலையையும், வன்னிப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதையும் கருத்தில் கொண்டு

இலங்கை அரசு போர் குற்றச் செயல்களுக்காக தண்டிக்கப்பட வேண்டும் என்கிற தீர்மானத்தை ஐ.நா. சபையில் மனித உரிமை அமைப்பின் சிறப்பு விவாதத்தில் கொண்டு வரவேண்டுமென்று பிரிட்டனும், டென்மார்க்கும் செயல்பட்டன. இந்த சிறப்பு விவாதத்தைத் தடுப்பதற்காக சீனாவும், பாகிஸ்தானும், ரஷ்யாவும், கியூபாவும் எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவாக நிற்கிறது இந்தியா. என்ன அநியாயம்?

நமது தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்காமல், ராஜபக்ஷே அரசுக்குத் துதி பாடுகிறது காங்கிரஸ் அரசு. மனித உரிமை சபையில் சிறப்பு விவாதம் நடக்க வேண்டுமென்றால் 16 நாடுகளின் ஆதரவு தேவை. இந்த ஆதரவைத் திரட்டுவதற்கு சோனியாகாந்திக்கும், மன்மோகன்சிங்கிற்கும் மனசாட்சி ஒன்று இருந்தால் காங்கிரஸ்காரர்களுக்கு தமிழ் இனத்தின் மீது பற்றும் பாசமும் இருந்திருந்தால் இந்த ஆதரவை இந்தியா முன்னின்று திரட்டியிருக்கவேண்டும்.

ஆனால் எங்கேயோ இருக்கும் டென்மார்க் தன் சொந்த முயற்சியால் பிற நாடுகளின் ஆதரவைத் திரட்டி சிறப்பு விவாதம் நடப்பதற்கு வழிவகுத்து இருக்கிறது. இதைத் தடுக்க இந்தியா எல்லா வகையிலும் பாகிஸ்தானோடு சேர்ந்து இலங்கைக்கு ஆதரவாக செயல்படுகிறது

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: