Tuesday, June 21, 2011

சிங்கள தாக்குதலிலிருந்து தப்பிக்க மீனவர்களுக்கு துப்பாக்கிப் போலீஸ் பாதுகாப்பு-ராமதாஸ்

சென்னை: தமிழக மீனவர்களை சிங்கள ராணுவத்தினர் தாக்குவதிலிருந்து தடுத்துக் காத்திடும் வகையில், தமிழக மீனவர்களுடன் ஆயுதம் ஏந்திய போலீஸ் குழுவையும் பாதுகாப்புக்கு உடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

வங்கக் கடலில் கச்சத் தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 23 பேரை அவர்களுக்கு சொந்தமான படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழக மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எத்தனையோ முறை போராட்டம் நடத்தியும், கோரிக்கைகள் வைத்தும் எந்தப் பயனும் ஏற்படவில்லை.

2011ம் ஆண்டில் மட்டும் இலங்கைக் கடற்படையினரால் மொத்தம் 6 தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த 23 மீனவர்களை இலங்கை படையினர் பிடித்துச் சென்றுள்ளனர். அவர்களுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்களை அவர்கள் விரட்டி அடித்திருக்கின்றனர். தமிழக மீனவர்களைத் தாக்குவது, சிறை பிடிப்பது என்பது போன்ற இலங்கைப் படையினரின் கொடுமைகள் முடிவின்றி தொடர்கின்றன.

கடந்த 4 மாதங்களில் 6 தமிழக மீனவர்களை இலங்கைப் படையினர் படுகொலை செய்தபோதிலும் அதற்காக இலங்கை மீது இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஒவ்வொரு முறை தமிழக மீனவர்கள் கொல்லப்படும் போதிலும் விளக்கம் கேட்பதுடன் இந்திய அரசு அதன் கடமையை முடித்துக்கொள்வதால், தமிழக மீனவர்களை என்ன செய்தாலும் இந்தியா கேட்காது என்ற துணிச்சல் இலங்கைப் படையினருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாறாத வரை தமிழக மீனவர்களின் துயரமும் மாறாது.

எனவே இலங்கைப் படையினரால் சிறைபிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரையும் மீட்க தமிழக அரசும் இந்திய அரசும் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுமட்டுமின்றி இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்து தமிழக மீனவர்களை தாக்கினாலோ அல்லது கைது செய்தாலோ கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும்.

வங்கக் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இலங்கைப் படையினரால் தாக்கப்படுவதை தடுப்பதற்காக அவர்களின் படகுகளில் துப்பாக்கி ஏந்திய தமிழக காவல்துறையினரை பாதுகாப்புக்கு அனுப்ப மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: