Thursday, July 29, 2010

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு: போராட்டம்

காஞ்சிபுரம்: வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை நிறைவேற்ற 1987ம் ஆண்டு நடந்த சாலை மறியல் போராட்டம் போல் மீண்டும் போராட்டம் நடத்த விடாதீர்கள். எங்களை சீண்டி விடாதீர்கள். உணர்ச்சி வசப்பட்டால் எங்களை கட்டுப்படுத்த முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸும் கடும் எச்சரிக்கை விடுத்துப் பேசியுள்ளார்.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி காஞ்சிபுரத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,

இங்கு நடைபெறுவது முதல் கட்ட போராட்டம். தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். எங்கள் கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்க்காவிட்டால் தமிழகம் தாங்காது. தயவு செய்து எங்களை அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு தள்ளாதீர். நாங்கள் கோரிக்கைகளை வலிறுத்தி அமைதியாகப் போராட்டம் நடத்துகிறோம்.

அடுத்தக் கட்ட போராட்டம் குறித்து சொல்ல மாட்டோம். தம்பிகள் எழுச்சி கண்டு ஆங்காங்கே போராட்டம் நடத்தினால், நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம். எங்கள் சொந்தங்களை கட்டுப்படுத்த முடியாது. தமிழகம் முழுவதும் இரண்டரை கோடி வன்னியர்கள் உள்ளோம். நாங்கள் சலுகை கேட்டு போராடவில்லை.

உரிமை கேட்டு போராடுகிறோம். இது ஜாதி போராட்டம் அல்ல; நீதி கேட்டு போராட்டம். எங்கள் உரிமையைப் பெறுவதற்காக தேவைப்பட்டால் 7 ஆண்டுகள் சிறை செல்லவும் தயாராக உள்ளோம்.

கோரிக்கையை நிறைவேற்ற 1987ம் ஆண்டு நடந்த சாலை மறியல் போராட்டம் போல் மீண்டும் போராட்டம் நடத்த விடாதீர்கள். எங்களை சீண்டி விடாதீர்கள். உணர்ச்சி வசப்பட்டால் எங்களை கட்டுப்படுத்த முடியாது என்றார் அன்புமணி.

தண்டவாளத்தை பெயர்த்தெடுக்கும் போராட்டம்-காடுவெட்டி:

வன்னியர்களுக்கு ஒழுங்காக 20 சதவீத இட ஒதுக்கீட்டை அளித்து விடுங்கள். இல்லாவிட்டால், ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர் தண்டவாளங்களைப் பெயர்த்து போராடியதைப் போல வன்னியர்களும் போராட நேரிடும் என வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு பேசினார்.

வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு தரக் கோரி நேற்று வன்னியர் சங்கம் தமிழகத்தின் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. சென்னை சைதாப்பேட்டையில் பனகல் மாளிகை முன்பு நடந்த போராட்டத்திற்கு ராமதாஸ் தலைமை தாங்கினார்.

அதேபோல அரியலூரில்நடந்த போராட்டத்திற்கு காடுவெட்டிகுரு தலைமை தாங்கினார். அவரது பேச்சில் அனல் பறந்தது. வன்முறையைத் தூண்டும் வகையிலும் அவர் பேசினார்.

காடுவெட்டி குரு பேசுகையில்,

வன்னியர் சங்கத்தை 1980ல் உருவாக்கிய ராமதாஸ், கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் செய்தார். ஆனால், 107 ஜாதியை ஒருங்கிணைத்து, 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கினார் முதல்வர் கருணாநிதி. அனைத்து சமுதாய மக்களையும் ஜாதி வாரியாக கணக்கெடுத்து, இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

ஜாதி இல்லை என தமிழக முதல்வர் கருணாநிதி கூறினாலும், ஜாதி வெறியோடு தான் கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி நடத்தினர்.

தமிழகம் முழுவதும் உள்ள இரண்டரை கோடி வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு, போராட்டம் நடத்தப்படுகிறது. 20 சதவீதம் பிரித்து தரவில்லை என்றால், கருணாநிதி அரசு, மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.

ராஜஸ்தானில் குஜ்ஜார் இன மக்களைப் போல, ரயில் மறியல் போராட்டம் நடத்தி, தண்டவாளத்தை பெயர்த்தெடுக்கும் போராட்டம் நடத்தப்படும். ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில், பெரும்பான்மை ஜாதிக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் மட்டும், கடந்த 63 ஆண்டாக தனி இட ஒதுக்கீடு இல்லை. வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு கொடுக்கும் வரை, எங்கள் போராட்டம் தொடரும் என்றார் காடுவெட்டி.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: