Saturday, April 17, 2010

திமுக தனித்து நின்றிருந்தால் டெபாசிட் இழந்திருக்கும்: 'காடுவெட்டி' குரு!

விழுப்புரம்: பென்னாகரம் இடைத்தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட்டிருந்தால் டெபாசிட் இழந்திருக்கும் என்று வன்னியர் சங்க மாநிலத் தலைவரும் மூத்த பாமக தலைவருமான 'காடுவெட்டி' ஜெ. குரு கூறினார்.

நிகழ்ச்சியொன்றில் அவர் பேசுகையில், கடந்த மக்களவைத் தேர்தலில் துரோகத்தால் தோற்கடிக்கப்பட்டோம். பாமக அழிந்துவிட்டது, வன்னியர்கள் பிரிந்து விட்டனர், இவர்களால் இனி ஒன்றும் செய்ய முடியாது என்று ஸ்டாலின் பேசினார்.

இந்நிலையில் பென்னாகரம் தொகுதியில் நம்மை டெபாசிட் இழக்க வைக்க பல கோடி வரை செலவு செய்தனர். ஆனால் நமது கட்சியினர் 3 மாதங்களுக்கும் மேல் அங்கு தங்கி, கடுமையாக உழைத்து சமூக உணர்வை ஏற்படுத்தி தேர்தலில் நின்றோம். பணத்தை மூட்டை, மூட்டையாகவும், காவல்துறை, தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் படை பலத்துடனும், 13 கட்சிகள் கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தனர்.

பணமா? இனத்தின் பாசமா? என்று டாக்டர் ராமதாஸ் கேட்டபோது, 2 கோடி வன்னியர்களின் மானத்தை காப்பாற்றியவர்கள் பென்னாகரம் மக்கள்.

நாம் தனித்துப் போட்டியிட்டோம். அதிமுக, தேமுதிக டெபாசிட் இழந்ததுபோல், திமுகவும் தனித்து போட்டியிட்டிருந்தால் டெபாசிட் இழந்திருக்கும். நம்மை ஏளனமாக பேசிய முதல்வர், துணை முதல்வர் மற்றும் திமுகவினருக்கு சரியான சவுக்கடி கொடுத்துள்ளோம். நம்மிடம் பணம் இல்லை, அப்படி இருந்து ஓட்டுக்கு ரூ.500 கொடுத்திருந்தால் நாம்தான் வெற்றி பெற்றிருப்போம்.

தற்போது உண்மையில் வெற்றி பெற்றது பாமகதான். 2011 தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட தயாரா? நாங்கள் தயாராக உள்ளோம். அப்படி போட்டியிட்டால் நாங்கள்தான் முதல்வர். தனி இட ஒதுக்கீட்டுக்காக மீண்டும் ஒரு போராட்டம் நடத்துவோம்.

நமது பலத்தை நிரூபிக்கும் வகையில் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சித்ரா பெளர்ணமி விழாவுக்கு குடும்பத்தோடு திரண்டு வாருங்கள் என்றார் குரு.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: