Monday, January 4, 2010

இதை சாதனை என்பதா? வேதனை என்பதா?.

விழுப்புரம்: 1952-ம் ஆண்டில் உழவர் உழைப்பாளர் கட்சி, உழவர் உழைப்பாளர் பொதுவுடமை கட்சியை தொடங்கிய வன்னியர்களான மாணிக் வேல், எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி ஆகியோர் அமைச்சர் பதவிக்காக காங்கிரசிடம் கட்சியை அடமானம் வைத்தனர். வன்னியர் சமுதாயத்துக்கான தேவையை அவர்கள் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பெற்று தந்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அதனை கேட்கவில்லை என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

விழுப்புரத்தில் சமூக முன்னேற்ற சங்கத்தின் 5வது மாநில மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்டு டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,

இந்தப் புத்தாண்டு நமது சமுதாயத்தினருக்கு உன்னத ஆண்டாகவும், வெற்றி ஆண்டாகவும் விளங்கும் என்பதை உறுதியாக கூறுகிறேன். நம்முடைய சமுதாயத்தினரின் நிலையை ஆராய்ந்து பார்க்கும் போது நாம் இன்னும் கீழ் நிலையில்தான் இருக்கிறோம்.

3 கோடி மக்களுக்கு இலவச வேட்டி-சேலை வழங்குவதாக முதல்வர் கருணாநிதி கூறுகிறார். தமிழ்நாட்டில் ஆறரை கோடி மக்கள் உள்ளனர். வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் 3 கோடி பேர் அரை நிர்வாணமாகத்தான் உள்ளனர். இதில் 2 கோடி பேர் வன்னியர்கள்.

ஆட்சி அதிகாரத்துக்காக வன்னியர்களை திட்டமிட்டு அழிக்க நினைக்கின்றனர். அரசியலில் வன்னியர்கள், அநியாயமாக வீணாகி விட்டனர்.

கடந்த 1952ம் ஆண்டில் உழவர் உழைப்பாளர் கட்சி, உழவர் உழைப்பாளர் பொதுவுடமை கட்சியை தொடங்கிய வன்னியர்களான மாணிக் வேல், எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி ஆகியோர் அமைச்சர் பதவிக்காக காங்கிரசிடம் கட்சியை அடமானம் வைத்தனர். வன்னியர் சமுதாயத்துக்கான தேவையை அவர்கள் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பெற்று தந்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அதைக் கேட்கவில்லை.

இட ஒதுக்கீடு சம்பந்தமாக கடந்த 1980ம் ஆண்டில் எம்.ஜி.ஆர். ஒரு கமிஷன் அமைத்தார். அந்த கமிஷன் நிறைவேறுவதற்கு முன்பு அவர் இறந்து விட்டார். இட ஒதுக்கீட்டுக்காக 7 நாள் மறியல் போராட்டத்தை நடத்தியதில் சில வன்னியர்களை இழந்தோம்.

கடந்த தேர்தலில் திட்டமிட்டே நம்மை தோற்கடித்தனர். இதற்காக மேல் ஜாதியினரும் மறைமுகமாக கூட்டு சேர்ந்து தோற்கடித்து விட்டனர். பாமக வளர்ச்சியை விரும்பாமல் அழிக்க நினைக்கின்றனர். பணத்தை கொடுத்து வன்னியர்களின் ஓட்டுகளை பெறுகின்றனர்.

சினிமா, டி.வி. சீரியல்களால் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் கெட்டு விட்டனர்.

கற்கும் விருதுநகர்-குடிக்கும் விழுப்புரம்:

கல்வி தேர்ச்சி சதவீதம் விருதுநகர் முதலிடம் பிடித்துள்ளது. ஆனால் மதுபான விற்பனையில் விழுப்புரம் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

புத்தாண்டு தினத்தில் ரூ.48 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. இதை சாதனை என்பதா? வேதனை என்பதா?.

மத தலைவர்களுடன் சேர்ந்து சென்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து தமிழகத்தில் பூரண மது விலக்கை அமுல்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தேன். படிப்படியாக செய்கிறேன் என்றவர் இதுவரை செய்யவில்லை.

1971ம் ஆண்டில் செய்த தவறை நீக்கி இந்த ஆண்டில் பூரண மது விலக்கை கொண்டு வருவீர்கள் என நினைக்கிறேன். பூரண மது விலக்கை அமுல்படுத்த வேண்டும் என்று மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

வருகிற சித்திரை மாதம் மாமல்லபுரத்தில் வன்னியர் இளைஞர் சங்க மாநாடு நடைபெறும். பூம்புகாரில் மகளிர் மாநாடும் நடைபெறும் என்றார் ராமதாஸ்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: