Tuesday, May 14, 2013

ஜெயலலிதா செய்தது அடக்குமுறையின் உச்சகட்டம் - ஜி.கே.மணி தாக்கு

ராமநாதபுரம்: முதல்வர் ஜெயலலிதாவின் செயல்பாடுகளை அடக்குமுறையின் உச்சகட்டமாகவே பார்க்கிறோம் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.ஜாமீன் நிபந்தனை உத்தரவுப்படி ஜி.கே.மணி தலைமையில் 362 பாமகவினர் ராமநாதபுரம் வந்துள்ளனர். இன்று காலை அங்குள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட்டனர். பின்னர் முடிவீரன் பட்டினம் என்ற இடத்தில் அவர்கள் தங்கினர்.முன்னதாக காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின்னர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் பேசுகையில், அடக்குமுறையின் உச்ச கட்டச் செயலாகவே இதை நாங்கள் கருதுகிறோம்.மரக்காணம் பிரச்னையில் இருவர் கொலை செய்யப்பட்டனர். 500 வாகனங்கள் சேதமடைந்துள்ளது. 100 பேர் காயமடைந்துள்ளனர். காவல்துறையினர் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனால் யார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.இதனைக் கண்டித்து நீதி கேட்டு விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்டோம். காவல்துறையும் அனுமதி அளித்தது. மறுநாள் திடீரென ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்தது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் கைது செய்யப்படாமல், அடக்குமுறையின் உச்சக்கட்டமாக குண்டர் பாதுகாப்புச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்டவற்றில் கைது செய்யப்பட்டிருப்பது அடக்குமுறையின் உச்சகட்டமாகும்.இந்தியாவில் எந்த கட்சிக்கும் தடையில்லை. தடை விதிக்கவும் முடியாது. மக்கள் தேவைகள் குறித்து பாமகவினருக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கி வந்திருக்கிறோம். கருப்புக் கொடி காட்டக் கூடாது, மறியல் செய்யக் கூடாது, உருவ பொம்மை எரிக்கக் கூடாது, தேச விரோத செயல்களில் ஈடுபடக் கூடாது என மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயல்படும் கட்சி பாமக. பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் கலவரத்தின் போது இடையூறு ஏற்பட்டதற்கும் நாங்கள் காரணமல்ல.எங்கள் மீது கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக டாக்டர் ராமதாஸ் கைதுக்கு பிறகு நடந்த சம்பவங்கள் அனைத்துக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியே காரணம்.ஊர் பொது மக்களே பிடித்து பேருந்தை சேதப்படுத்தியவர்களை, கலவரத்துக்குக் காரணமான பலரை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உடடினயாகவே அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.உண்மையான குற்றவாளிகள் மீது வழக்குப் போடவில்லை. காவல்துறை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கிறது. மக்களவைத் தேர்தலில் பாமக எந்தக் கட்சியோடும் கூட்டணி சேராது என்பதால் தனித்து போட்டியிடுவதை தடுக்கவும், பாமகவின் வளர்ச்சியைத் தடுக்கவும் காவல்துறை மூலமாக நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. வன்முறை சம்பவங்களுக்கும் பாமகவுக்கும் தொடர்பில்லை. சட்டப்பேரவையில் காவல்துறை சொன்ன தகவலை முதல்வர் சொல்லியிருக்கிறார். மரக்காணத்தில் அரியலூர் செல்வராஜ் என்பவரும், கும்பகோணம் விவேக் என்பவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.இருவரையும் காவல்துறை விபத்தில் இறந்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளது. பின்னர், அரியலூர் செல்வராஜ் கொலை செய்யப்பட்டுத்தான் இறந்தார் என்று மறு வழக்குப் பதிவு செய்துள்ளது. மற்றொரு கொலை கேள்விக்குறியாக உள்ளது. இதில் இருந்து பாமகவுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவது தெரிய வருகிறது.பாமக தொண்டர்களை சிறையில் அடைத்திருப்பது ஒரு தலைபட்சமான நடவடிக்கை. நீதிமன்றத்தில் நாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிப்போம். அடுத்து வர இருக்கும் செயற்குழு, பொதுக்குழு கூட்டடங்களில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்வோம் என்றார் அவர்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/05/14/tamilnadu-gk-mani-slams-jayalalitha-her-tyrant-action-against-pmk-175269.html

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: