Friday, April 24, 2015

தமிழக அரசை கண்டித்து போராட்டம்: விழுப்புரத்தில் நான் தலைமையேற்கிறேன்: ராமதாஸ் அறிவிப்பு


வறட்சி, குடிநீர் பிரச்சினையை தீர்க்கக் கோரி மே 15-ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன் பா.ம.க. சார்பில் தொடர்முழக்க போராட்டம் நடத்தப்படும். விழுப்புரத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு நான் தலைமையேற்கிறேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அனைத்து 32 மாவட்டங்களிலும் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. தொடர்ந்து நான்காவது ஆண்டாக வறட்சி நீடிக்கும் போதிலும், அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சமாளிப்பதற்காக தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வறட்சி நிவாரண நடவடிக்கைகளில் அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் இதற்கு முன் கடந்த 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் மிகக் கடுமையான வறட்சி நிலவியது. அதை சமாளிக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தமிழகத்தின் உணவுக் களஞ்சியம் என்று போற்றப்படும் காவிரி பாசன மாவட்டங்களில் எலிக்கறியை உண்ணும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். 
அதன் பின்னர் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்தே தமிழகத்தை வறட்சி வாட்டி வதைத்து வருகிறது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி செய்ய முடியாத நிலை அல்லது பயிரிட்டாலும் கடும் வறட்சியால் பயிர்கள் கருகும் நிலை தான் காணப்படுகிறது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளும், பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும் நடத்திய போராட்டத்தின் பயனாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று 19.03.2013 அன்று தமிழக சட்டமன்றத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், இந்த நிவாரணத் திட்டத்தின் நடைமுறைக்கு பொருந்தாத நிபந்தனைகள் காரணமாக 50% விவசாயிகளுக்கு கூட நிவாரண உதவி கிடைக்கவில்லை.

தொடர்வறட்சி மற்றும் அதனால் ஏற்பட்ட கடன்சுமை காரணமாக கடந்த 2011 ஆம் ஆண்டில் 623 உழவர்கள், 2012 ஆம் ஆண்டில் 499 பேர், 2013 ஆம் ஆண்டில் 105 பேர் என 3 ஆண்டுகளில் மொத்தம் 1227 உழவர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2014 ஆம் ஆண்டின் தற்கொலைகளையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை 1500&ஐத் தாண்டும்.  இவ்வளவு அதிக எண்ணிக்கையில் உழவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ள போதிலும் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உழவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்காக பயிர்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட எந்த உதவியையும் தமிழக அரசு வழங்கவில்லை.

வறட்சி தீவிரமடைந்ததன் விளைவாக அனைத்து மாவட்டங்களிலும் இப்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக வேலூர் மாவட்டத்திற்கு ரூ.20 கோடி, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ரூ.10 கோடி, காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, விருதுநகர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ரூ.5 கோடி சென்னை தவிர மீதமுள்ள 23 மாவட்டங்களுக்கு தலா ரூ.50 லட்சம் வீதம்  தமிழக அரசு  நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. இது போதுமானதல்ல. குறிப்பாக தருமபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், மதுரை, இராமநாதபுரம், கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில் தமிழக அரசு ஒதுக்கிய ரூ.50 லட்சத்தை வைத்துக் கொண்டு எந்த நிவாரணமும் வழங்க முடியாது.

எனவே, தமிழ்நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்; குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க  ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ.25 கோடி முதல் ரூ.60 கோடி வரை நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 15&ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன் பா.ம.க. சார்பில் தொடர்முழக்க போராட்டம் நடத்தப்படும். விழுப்புரத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு நான் தலைமையேற்கிறேன். 

பா.ம.க.வின் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாசு தருமபுரியிலும், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி வேலூரிலும், பா.ம.க. சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஜெ.குரு அரியலூரிலும் போராட்டத்திற்கு தலைமையேற்பார்கள். மற்ற மாவட்ட, வட்டத் தலை நகரங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் தலைமையில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.




   

Tuesday, April 14, 2015

'ஜெ. வழக்கில் வளைந்து கொடுக்காத கர்நாடக தலைமை நீதிபதி டிரான்ஸ்பர்: ராமதாஸ் சரமாரி புகார்!

சென்னை: கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலா ஒடிசாவுக்கு மாற்றப்பட்டுள்ளது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: 'கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரேந்திர ஹீராலால் வகேலா திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டு ஒதிஷா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட் டிருக்கிறார். குறிப்பாக தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளுக்குரிய அதிகாரம் நீக்கப்படுவதற்கு சில மணி நேரம் முன்பாக இந்த இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது தவறாகும்.குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வகேலா அப்பழுக்கற்ற வரலாற்றுக்கு சொந்தக்காரர் ஆவார். இவர் வரலாற்று சிறப்பு மிக்க பல தீர்ப்புகளை அளித்திருக்கிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா, அதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நாளிலிருந்தே வகேலாவை இடமாற்றம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.அவரைக் கர்நாடகத்திலிருந்து சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி முயன்றபோது அதை வகேலா கடுமையாக எதிர்த்ததால் அம்முடிவு கைவிடப்பட்டது. இந்த நிலையில், நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பான உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழுவின் அதிகாரம் முடிவுக்கு வரும் நிலையில் அவசர அவரசமாக வகேலா மாற்றப்பட்டிருக்கிறார்.இந்தியாவின் மூத்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளில் ஒருவரான வகேலா அடுத்த சில மாதங்களில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறவுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் ஒரு சில மாதங்கள் மட்டும் பணியாற்றுவதற்காக இன்னொரு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவது முறையல்ல.வகேலா இப்போது 62 நீதிபதிகளைக் கொண்ட கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார். இவரை இடமாற்றம் செய்ய வேண்டுமானால் இதைவிட பெரிய உயர்நீதிமன்றங்களில் ஒன்றுக்குத் தான் மாற்ற வேண்டும். அதுதான் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு ஆகும். ஆனால், 27 நீதிபதிகள் மட்டுமே உள்ள ஒதிஷா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வகேலா இட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த இடமாற்றத்திற்கும் நீதிபதி வகேலா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதையும் மீறி அவர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது நியாயமான நடவடிக்கையாக தோன்றவில்லை.தலைமை நீதிபதி வகேலா இடமாற்றம் செய்யப்பட்ட நேரமும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது. பவானிசிங் நியமிக்கப்பட்டது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தால், ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீது புதிதாக விசாரணை நடத்த வேண்டியிருக்கும்.இவ்வழக்கை இப்போது விசாரித்து வரும் நீதிபதி குமாரசாமி வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஓய்வு பெறவிருக்கும் நிலையில், இதற்காக புதிய நீதிபதியை நியமிக்க வேண்டியிருக்கும். அந்த புதிய நீதிபதி யார்? என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்குத் தான் உள்ளது. யாருக்கும் வளைந்து கொடுக்காத தன்மை கொண்ட நீதிபதி வகேலா, ஏற்கனவே இந்த விஷயத்தில் மேலிடத்திலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தங்களை நிராகரித்தவர். இத்தகைய சூழலில் நீதியரசர் வகேலா இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பல்வேறு ஐயங்களையும், யூகங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.குறிப்பாக ஜெயலலிதாவுக்கு பிணை வழங்கியது, அவரது மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை யாரும் கேட்காமலேயே 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று ஆணையிட்டது போன்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்துவின் நடவடிக்கைகள் நீதித்துறை வட்டாரங்களில் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகிருக்கின்றன. இந்த நிலையில் வகேலா மாற்றப்பட்டிருப்பது இந்த ஐயங்களை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. நீதிபதி வகேலா இன்னும் இரு மாதங்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீடிக்கலாம் என்ற போதிலும், அவை விடுமுறை காலம் என்பதால் அதனால் எந்த தாக்கமும் ஏற்படாது.நீதிபதி வகேலாவின் இடமாற்றம் தொடர்பான சர்ச்சைகளையும், ஐயங்களையும் போக்க வேண்டியது உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய அரசின் கடமை ஆகும். எனவே, வகேலாவின் இடமாற்றத்தை ரத்து செய்து அவருக்கு பதவி உயர்வு வரும் வரை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடரச் செய்ய வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். 

Monday, April 13, 2015

போக்குவரத்து ஊழியர் கோரிக்கையை நிராகரித்து துரோகம் இழைப்பதா?: ராமதாஸ்


 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுடன் 12 ஆவது ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்திய தமிழக அரசு, ஊதிய உயர்வு குறித்த தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிராகரித்து  தன்னிச்சையாக ஊதிய உயர்வை அறிவித்துள்ளது. இதை ஏற்க பெரும்பான்மை தொழிற்சங்கங்கள் மறுத்து விட்ட நிலையில் அரசு ஆதரவு சங்கங்களுடன் மட்டும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. 

அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையிலான 11 ஆவது ஊதிய ஒப்பந்தம் 2013&ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்து விட்டது. அதற்குள் 12 ஆவது ஊதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு 01.09.2013 முதல் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், புதிய ஊதிய ஒப்பந்தத்திற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் தமிழக அரசு கால தாமதம் செய்தது. கடைசியாக போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கடந்த திசம்பர் மாதம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்த தமிழக அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி, கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்த பேச்சுக்களில், 50% ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்திய நிலையில், அதை ஏற்காத தமிழக அரசு 5.5% ஊதிய உயர்வு வழங்குவதாக தன்னிச்சையாக முடிவெடுத்து தொழிற்சங்கங்கள் மீது திணித்திருக்கிறது. 

இந்த ஊதிய உயர்வின்படி போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் அனைவருக்கு  அதிகபட்சமாக ரூ.1350 மட்டுமே ஊதிய உயர்வு கிடைக்கும். போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு   2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது தான் ஊதிய உயர்வு அறிவிக்கப்படும் நிலையில், வெறும் ரூ.1350 மட்டுமே ஊதிய உயர்வு வழங்குவது அநியாயத்தின் உச்சமாகும். இது கண்டிக்கத்தக்கதாகும்.

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கும், போக்குவரத்துக் கழகங்களுக்கும் இடையே இது வரை 11 முறை ஊதிய உயர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. கடைசியாக கடந்த 2010 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட 11-ஆவது ஊதிய ஒப்பந்தத்தின் போது 14% ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. அதற்கு முன்பும் தொழிலாளர்கள் மன நிறைவடையும் அளவுக்கு  ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை விலைவாசி சுமார் 60% அதிகரித்துள்ள நிலையில், கடந்த முறை வழங்கப்பட்டதில் பாதிக்கும் குறைவாக 5.5% ஊதிய உயர்வு அளிப்பது தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய துரோகம் ஆகும். அ.தி.மு.க. அரசின் இந்த துரோகத்தை ஒரு போதும் ஏற்க முடியாது.

தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வை, பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட 42 சங்கங்களில் பாட்டாளி தொழிற்சங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யு உள்ளிட்ட 17 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்து விட்டன. ஆனால், இதைப்பற்றிக் கவலைப்படாத அரசு, தங்களுக்கு ஆதரவாக உருவாக்கப்பட்ட ஆளில்லாத 25 தொழிற்சங்கங்களுடன் புதிய ஊதிய ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது. அதேபோல், ஓய்வூதியம் தொடர்பான தொழிலாளர்களின் கோரிக்கைகளும் ஏற்கப்படவில்லை.

 இதைக் கண்டித்து தொழிலாளர்கள் நாளை வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தால் சித்திரைத் திருநாளான நாளை அப்பாவி மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள்.  எனவே, தமிழக அரசு சர்வாதிகாரப் போக்கையும், தொழிலாளர் விரோதப் போக்கையும் கைவிட்டு, ஊதிய உயர்வு தொடர்பான தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். ’’

Sunday, April 12, 2015

ராமதாசுவின் சித்திரைத் திருநாள் வாழ்த்துச் செய்தி


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசுவின் சித்திரைத் திருநாள் வாழ்த்துச் செய்தி :

  ’’உழைப்புடனும், கொண்டாட்டத்துடனும் நெருங்கிய தொடர்புள்ள சித்திரை திருநாளை கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

   தை திங்கள் முதல் நாள் தான்  தமிழ் புத்தாண்டு என்பதற்கு எத்தனையோ வரலாற்று சான்றுகள் உள்ளன. அதன்படி தான் தை முதல் நாளாம் உழவர் திருநாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகிறோம். அதே நேரத்தில் சித்திரை திருநாளுக்கும் தனிச்சிறப்பு உண்டு. சித்திரை முழுநிலவு நாளில்தான் மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களை தமிழர்கள் கொண்டாடுவார்கள். அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறையும் காலம் என்பதால் சித்திரை திருநாள் முழுவதும் ஊர் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும். மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பர். ஆனால் ஊழல் நிறைந்த ஆட்சியில் தமிழக மக்களால் கனவில் கூட மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை.

    சித்திரை என்பது வசந்தத்துடன் தொடர்புடைய விழா ஆகும். எனவே, தமிழக மக்களை சூழ்ந்திருக்கும் ஊழல்களும், தீமைகளும் அகன்று உண்மையும், நன்மையும் துணை சேரும் என்று நம்பலாம். உலகுக்கே உணவு படைக்கும் உழவர் வாழ்விலும், உழைக்கும் தமிழர் வாழ்விலும் புத்துணர்வும், புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் சூழ வேண்டும் என்பதற்காக புதிய பயணத்தைத் தொடங்கியுள்ள நாம் நமது இலக்கை அடைவதற்காக அயராது உழைப்போம் என்று இந்த நன்நாளில் உறுதி ஏற்போம்.’’

லஞ்சம் தராத மருத்துவமனைகளை மிரட்டிய அமைச்சரை பதவி நீக்க வேண்டும்: ராமதாஸ்

லஞ்சம் தராத மருத்துவமனைகளை மிரட்டிய அமைச்சரை  பதவி நீக்க வேண்டும்: ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி வரும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெறுவதாக கடந்த 6ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குற்றம் சாற்றியிருந்தேன். அதற்குப் பிறகும் தனியார் மருத்துவமனைகளிடம் நவீன வடிவத்தில் கையூட்டு பெறுவதும், கையூட்டு தர மறுக்கும் மருத்துவமனைகளை மிரட்டுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை 650-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் செயல்படுத்தி வரும் நிலையில் அவற்றில் பெரிய அளவிலான மருத்துவமனைகளின்  உரிமையாளர்களை மட்டும் கடந்த 31-ஆம் தேதி சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னைக்கு அழைத்து பேசியுள்ளார். அப்போது, மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்படி  ஒவ்வொரு மருத்துவமனையும் கடந்த 4 ஆண்டுகளில் எவ்வளவு வருவாய் ஈட்டியுள்ளதோ, அதில் 10% அளவுக்கு ஆளுங்கட்சியின் ஜெயா தொலைக்காட்சிக்கு விளம்பரம் தரும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். அதாவது ஒரு தனியார் மருத்துவமனை மருத்துவக் காப்பீட்டுத் திட்டப்படி 4 ஆண்டுகளில் ரூ.10 கோடி வருவாய் ஈட்டியிருந்தால் அது ஜெயா தொலைக்காட்சிக்கு ரூ.1 கோடிக்கு விளம்பரம் தர வேண்டும். இதை ஏற்றுக்கொண்ட பல தனியார் மருத்துவமனைகள் ஆளுங்கட்சித் தொலைக்காட்சிக்கு விளம்பரம் கொடுத்து வருகின்றன.

அமைச்சரின் அழைப்பை ஏற்று சந்திக்க வராத தனியார் மருத்துவமனைகளை இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக  நியமிக்கப்பட்டுள்ள மூன்றாம் நபர் நிர்வாகத்தை (Third Party Administration) கவனித்துக் கொள்ளும் விடால் ஹெல்த் (Vidal Health), எம்.டி. இந்தியா (MDIndia), மெடி அசிஸ்ட் (Medi Assist ) ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பு கொண்டு அமைச்சரின் விருப்பத்தை தெரிவித்து அதை செயல்படுத்தும்படி அழுத்தம் கொடுத்து வருகின்றனர். 

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்படி அதிக அளவில் இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ள அண்டை மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற  மருத்துவமனை ரூ.4.00 கோடிக்கு விளம்பரம் தர வேண்டும் என்று அமைச்சர் தரப்பில் அழுத்தம் தரப்பட்டிருக்கிறது. ஆனால், அதை ஏற்க அம்மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல் தமிழகத்திலுள்ள சில மருத்துவமனைகளும் கையூட்டு தர மறுத்துவிட்டன. இதையடுத்து இம்மருத்துவமனைகளை காப்பீட்டுத் திட்டத்திலிருந்து ஏன் நீக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு மூன்றாம் தரப்பு நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ளும் நிறுவனங்கள் மூலம் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அமைச்சர் விருப்பத்தை நிறைவேற்றாத மருத்துவமனைகளை முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தனியார் மருத்துவமனைகளின் நிலை இப்படியென்றால் அரசு மருத்துவமனைகளின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட ரூ.764 கோடியில் 15% தொகையை அமைச்சர் மற்றும்  ஆளுங்கட்சியின் பல்வேறு நிலைகளில் இருப்பவர்களுக்கு வழங்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்படுவதாகவும், அதற்குப் பணிந்து கையூட்டாகத் தரப்பட்ட பணத்தை ஈடுகட்டுவதற்காக தரம் குறைந்த மருந்துகளும், மருத்துவக் கருவிகளும் வாங்கப்படுகின்றன. சேலம் அரசு அதி உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தரம் குறைந்த மருந்துகளை அதிக விலைக்கு வாங்கியதாக வழக்குத் தொடரப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஊழல் நடப்பதற்கு இதைவிட ஆதாரம் தேவையில்லை.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நடைபெறும் ஊழலால் சுகாதாரத்துறை அமைச்சரும், அவருக்கு மேல் உள்ளவர்களும் பயனடையும் நிலையில், ஊழல்கள் அம்பலமாகும் போது கீழ்நிலை ஊழியர்கள் மட்டும் சிக்க வைக்கப்படுகிறார்கள். சேலம் அரசு மருத்துவமனை ஊழல் இப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவருக்கு முன் இத்துறையை கவனித்த கே.சி. வீரமணி ஆகியோருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், கண்காணிப்பாளர், உதவியாளர் நிலையிலுள்ள ஊழியர்களை மட்டும் கைது செய்துவிட்டு மேல்மட்டத்தில் இருப்பவர்களைக் காப்பாற்ற தமிழக அரசு துடிக்கிறது. அதேபோல், தனியார் மருத்துவமனைகளிடமிருந்து கையூட்டு வாங்குவதற்கு தடையாக இருந்த சுகாதாரப் பணிகள் திட்ட இயக்குனர் சண்முகத்தை மாற்றி விட்டு, தமக்கு சாதகமான அதிகாரிகளின் உதவியுடன் தனது விருப்பத்தை சுகாதாரத்துறை அமைச்சர் நிறைவேற்றிக் கொள்கிறார்.

இதற்கு முடிவு கட்டும் வகையில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் நடைபெறும் ஊழல்கள் பற்றி விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும். விசாரணை நியாயமாக நடைபெற வசதியாக இதில் சம்பந்தப்பட்ட விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இதன் மூலம் இந்த ஊழலால் பாதிக்கப்பட்ட, அமைச்சரால் அச்சுறுத்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகிகள்,  அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஆகியோரை தற்கொலையிலிருந்து காக்க வேண்டும்.’’

Friday, April 10, 2015

நீதி விசாரணை கோரி 13-ஆம் தேதி பா.ம.க. போராட்டம்! ராமதாஸ் அறிவிப்பு!

 
ஆந்திராவில் கட்டிட வேலைக்கு சென்ற அப்பாவி தமிழர்கள் 20 பேரை அம்மாநிலக் காவல்துறையினர் கடத்திச் சென்று காட்டில் வைத்து சுட்டுக் கொன்றுள்ளனர். இந்தப் படுகொலைகள் தொடர்பாக ஆந்திரக் காவல்துறை சார்பில் அளிக்கப்படும் விளக்கம் ஏற்க முடியாததாகும். இதுகுறித்த வழக்கை விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்றமும் காவல்துறையின் விளக்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளது.

அப்பாவித் தமிழர்களை திட்டமிட்டு படுகொலை செய்திருப்பதால் இதுகுறித்த உண்மைகளை ஆந்திரக் காவல்துறை மூடி மறைக்கவே முயலும். எனவே, இந்த படுகொலைகளின் பின்னணியில் ஒளிந்துள்ள உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டுமானால் இதுகுறித்து பணியிலுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது மத்திய புலனாய்வு அமைப்பின் மூலம் விசாரணை நடத்துவதே சரியானதாக இருக்கும். அதுமட்டுமின்றி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் வீதம் இருமாநில அரசுகளும் இழப்பீடு வழங்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 13 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சென்னை கடற்கரை சாலையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்  மாபெரும் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும். இப்போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணித் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ஆந்திராவில் மேலும் பல தமிழர்கள் கொல்லப்பட்டார்களா?.. கண்டுபிடிக்க ராமதாஸ் கோரிக்கை


சென்னை: தமிழகத்திலிருந்து ஆந்திரா சென்று காணாமல் போனவர்கள் பட்டியலைத் தயாரித்து, அவர்கள் ஆந்திர சிறைகளில் உள்ளார்களா? மரம் கடத்தும் கும்பல்களால் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்களா? அல்லது படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்களா? என்பதை தமிழக அரசு கண்டுபிடிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-ஆந்திராவில் 20 தமிழர்கள் கொடூரமான முறையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அடுத்தடுத்து வெளியாகி வரும் உண்மைகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பவையாக உள்ளன. இப்படுகொலையை நடத்திய ஆந்திரக் காவல்துறையினர் மனிதர்களாகவே இருக்கத் தகுதியற்றவர்கள்; அதிகபட்ச தண்டனையை அனுபவிக்க வேண்டியவர்கள் என்ற கருத்தை இவை உறுதிசெய்துள்ளன.சுட்டுக் கொல்லப்பட்ட 20 பேருமே செம்மரக் கடத்தலுடன் சம்பந்தப்படாதவர்கள்; கட்டிட வேலை செய்வதற்காகச் சென்ற அவர்களை பேரூந்தை பாதியில் நிறுத்தி இறக்கியும், வேறு இடங்களில் தங்கி இருந்த போது பிடித்துச் சென்றும் தான் ஆந்திரக் காவல்துறை சுட்டுக் கொன்றுள்ளது என்பது ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி, சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பாகவும், கொல்லப்பட்டதற்குப் பிறகும் தமிழர்களை ஆந்திரக் காவல்துறையினர் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர். கொல்லப்படுவதற்கு முன் அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதன் அடையாளம் தான் அவர்களின் உடல் முழுவதும் காணப்படும் வெட்டுக் காயங்கள். கொல்லப்பட்டதற்குப் பிறகும் கூட அவர்களின் உடல்கள் மீது அமிலம் உள்ளிட்ட வேதிப்பொருட்களை ஊற்றி சிதைத்துள்ளனர். அதுமட்டுமின்றி, கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்களை ஏதோ இறந்த விலங்குகளின் உடல்களை கையாளுவது போன்று குப்பைகளை அள்ளும் ஊர்தியில் ஒன்றாகக் குவித்து அசிங்கப்படுத்தியுள்ளனர்.இலங்கை இறுதிப் போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் உடல்களை சிங்களப் படையினர் எப்படியெல்லாம் சிதைத்தும், போராளிகளின் உடல் உறுப்புகளை வெட்டி வீசியும் தங்களின் வெறியை தணித்துக் கொண்டார்களோ, அதற்கு ஆந்திரக் காவல்துறையின் வக்கிரமான, மிருகவெறித் தாக்குதல் சற்றும் குறைந்ததல்ல. சாதாரணமான சூழலில், இதயமே இல்லாதவர்கள் கூட இதுபோன்ற ஒரு கொடூரமான தாக்குதலை நடத்த மாட்டார்கள்.ஆனால், ஆந்திரக் காவல்துறை இப்படி ஒரு செயலை செய்ததுடன், அதை தங்களின் சாதனையாகக் காட்ட முயல்வதையும், அதற்கு ஆதரவாக ஆந்திர அரசு செயல்படுவதையும் பார்க்கும்போது, இதன் பின்னணியில் தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் எதிராக மிகப்பெரிய வன்மத்தை ஆந்திர ஆட்சியாளர்களும், காவல்துறையினரும் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது.இத்தகைய வன்மம் இல்லாவிட்டால் இவ்வளவு கொடூரமான கொலையையும் உடல்களை சிதைக்கும் வேலையையும் ஆந்திர காவல்துறை செய்திருக்காது என உறுதியாக நம்பலாம்.அதேபோல், ஆந்திரக் காவல்துறைக்கு பகைமையும், வன்மமும் இருந்தால் இது நிச்சயமாக முதல் படுகொலையாக இருக்க வாய்ப்பில்லை என்பதையும் உறுதியாக கூறமுடியும்.திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆந்திராவுக்கு கட்டிட வேலைக்காகச் சென்ற நூற்றுக்கணக்கானோர் என்ன ஆனார்கள்? என்பதே தெரியவில்லை என்று அவர்களின் உறவினர்கள் கூறியிருப்பது இந்த சந்தேகத்தை உறுதி செய்கிறது. இவர்களும் ஆந்திராவின் வனப் பகுதிகளில் சுட்டுக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தை அடியோடு ஒதுக்கி விட முடியாது.அதுமட்டுமின்றி தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்களை செம்மரம் கடத்தும் ஆந்திர கும்பல்கள் கொத்தடிமைகளாக வைத்திருப்பதாகவும் குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன.எனவே, தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்குச் சென்ற கூலித் தொழிலாளிகளின் நிலை என்ன? என்பது குறித்து விரிவான விசாரணையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழகத்திலிருந்து ஆந்திரா சென்று காணாமல் போனவர்களின் பட்டியலைத் தயாரித்து, அவர்கள் ஆந்திர சிறைகளில் உள்ளார்களா? மரம் கடத்தும் கும்பல்களால் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்களா? அல்லது படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்களா? என்பதை தமிழக அரசு கண்டுபிடிக்க வேண்டும். இதற்காக நேர்மையான காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட பல்துறை விசாரணைக் குழுவை தமிழக முதலமைச்சர் உடனடியாக அமைக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: